13 வயதில் தொடங்கிய பயணம்.. ஹார்மோன் குறைபாட்டை விரட்டி பார்சிலோனாவில் நங்கூரமிட்ட மெஸ்சி

13 வயதில் தொடங்கிய பயணம்.. ஹார்மோன் குறைபாட்டை விரட்டி பார்சிலோனாவில் நங்கூரமிட்ட மெஸ்சி
13 வயதில் தொடங்கிய பயணம்.. ஹார்மோன் குறைபாட்டை விரட்டி பார்சிலோனாவில் நங்கூரமிட்ட மெஸ்சி

கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. களத்தில் தனது கால்களால் மாயம் நிகழ்த்தி பந்தை வலைக்குள் தள்ளும் வித்தையில் வல்லவர். தன் தாய்நாடான அர்ஜென்டினா அணிக்காக விளையாடுவதை காட்டிலும் கால்பந்தாட்ட கிளப் அணியான பார்சிலோனா அணிக்காக மெஸ்சி விளையாடும் போது அதை ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பதுண்டு. அதற்கு ஒரு காரணமும் உண்டு. மெஸ்சி, பார்சிலோனாவுக்காக விளையாடும் போது அந்த கிளப் அணியை சேர்ந்தவர். ‘நீ வேறு நாடு, நான் வேறு நாடு’ என்ற எல்லைகளை கடந்து கால்பந்தாட்ட ரசிகர்கள் அதனை கொண்டாடுவர்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மகேந்திர சிங் தோனிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே உள்ள ஆத்மார்த்தமான கெமிஸ்ட்ரி தான் மெஸ்சிக்கும் பார்சிலோனாவுக்கும். இதில் தோனியை விட மெஸ்சி தனது கிளப் அணியுடன் அதிக நாட்கள் பயணித்தவர். தற்போது மெஸ்ஸி பார்சிலோனா அணியை விட்டு விலகியுள்ளார். 

அதோடு பிரான்ஸ் நாட்டின் சிறந்த கால்பந்தாட்ட கிளப் அணிகளில் ஒன்றான PSG அணியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இந்த அணியில் பிரேசில் வீரர் நெய்மர் மற்றும் பிரான்ஸ் வீரர் Kylian Mbappé விளையாடி வருகிறார்.  

மெஸ்ஸிக்கும் பார்சிலோனாவுக்கும் இடையிலான பந்தம்!

மெஸ்சிக்கும், பார்சிலோனாவுக்கும் இடையிலான பந்தயம் கடந்த 2000-ஆவது ஆண்டு வாக்கில் தொடங்கியது. அப்போது மெஸ்சிக்கு 13 வயது. நடை பழகிய நாளிலிருந்தே கால்பந்தை உதைத்து விளையாடியவர் அவர். பால்யத்தில் உள்ளூர் அளவில் கிளப் அணிகளுக்காக விளையாடி வந்துள்ளார். பத்து வயதில் மெஸ்ஸிக்கு வளர்ச்சி ரீதியிலான ஹார்மோன் குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவரது தந்தையின் காப்பீட்டு தொகையின் உதவியோடு இரண்டு ஆண்டுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஆண்டு சிகிச்சைக்கான செலவை ஏற்ற கால்பந்து அணிகள் கையை விரித்துவிட்டன. அப்போது மாதத்திற்கு ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அவரது செலவுக்கு தேவைப்பட்டது. 

அந்த நேரத்தில் தான் உறவினர் மூலமாக பார்சிலோனா கிளப் அணி குறித்த தகவல் மெஸ்ஸி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக டிரையலுக்கு சென்ற அவருடன் தங்கள் அணிக்காக விளையாட ஒப்பந்தம் போட்டுக்கொள்ள முற்பட்டுள்ளார் பார்சிலோனாவின் அப்போதைய இயக்குனர். இருந்தாலும் மெஸ்ஸி வெளிநாட்டு வீரர் என்பதால் தனது குழுவில் இருந்த மற்ற உறுப்பினர்கள் அதற்கு சம்மதிக்க மறுத்ததால் நாப்கின் பேப்பரில் மெஸ்ஸியை தங்கள் அணிக்கு விளையாட ஒப்பந்தம் போட்டுள்ளார் அந்த இயக்குனர். 

தொடர்ந்து ஸ்பெயினில் தந்தையுடன் குடியேறிய அவர் அங்கேயே தங்கியிருந்து பார்சிலோனா இளையோர் அணிக்காக விளையாட தொடங்கியுள்ளார். கூடவே வளர்ச்சி குறைபாடு சிகிச்சைக்கான செலவையும் கவனித்துக் கொண்டுள்ளது. 

சிகிச்சை முடிந்த பிறகு தன்னை அணியுடன் தகவமைத்துக் கொண்ட மெஸ்ஸி 2002 - 03 சீசனில் 30 போட்டிகளில் 36 கோல்களை போட்டு அதகளம் செய்துள்ளார். அதை கேள்விப்பட்ட இங்கிலாந்து கால்பந்தாட்ட கிளப் அணி அர்சேனல் மெஸ்ஸியை தங்கள் அணியில் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பி அவரை அணுகியது. ஆனாலும் அப்போது அந்த ஆஃபரை மெஸ்ஸி மறுத்துவிட்டார். 

தொடர்ந்து 2003-04 சீசனில் பார்சிலோனா சீனியர் அணியின் ‘சி’ அணிக்கும், அதற்கடுத்த சீசனில் ‘பி’ அணிக்காகவும் விளையாடினார். அதன் பின்னர் 2005 தொடங்கி 2021 வரையில் பார்சிலோனா சீனியர் அணிக்காக மெஸ்ஸி விளையாடி வந்தார். மொத்தமாக 520 போட்டிகளில் 474 கோல்களை பார்சிலோனாவுக்காக ஸ்கோர் செய்துள்ளார் மெஸ்ஸி. இது தவிர சக அணி வீரருக்கு கோல் அசிஸ்ட் செய்த சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. பார்சிலோனா உடனான 21 ஆண்டுகால பயணம் மெஸ்ஸியின் திறனை பட்டை தீட்டிக் கொண்டே இருந்தது எனவும் சொல்லலாம். 

பார்சிலோனா அணியிலிருந்து விலக காரணம் என்ன?

மெஸ்ஸியின் ஆட்டத்தை பார்த்து அசந்து போன மற்ற கிளப் அணிகள் அவரை தங்கள் அணியின் சேர்த்துக் கொள்ள ஆர்வம் காட்டின. அதனால் அவரை ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான தொகை ஒரு பக்கம் ஏறுமுகமாக இருந்தது. இருப்பினும் மெஸ்ஸி பார்சிலோனா தான் எனக்கும் எல்லாம் என்பது போலவே மற்ற கிளப் அணிகளுக்கு செல்ல மறுத்தார். 

அப்படிப்பட்ட மெஸ்ஸி கடந்த 2020 செப்டம்பரில் பார்சிலோனா அணியை விட்டு விலக உள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒப்பந்தம் அதற்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என சொல்லப்பட்ட நிலையில் அப்போதைக்கு அந்த முடிவை கைவிட்டார். 

அந்த சூழலில் தான் 2021-22க்கான ஒப்பந்தத்தை தொடராமல் இருந்தது பார்சிலோனா அணி நிர்வாகம். மேலும் அதற்கு காரணமாக நிதிச் சுமையை சுட்டிக்காட்டியது பார்சிலோனா. தொடர்ந்து இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சுமூக தேர்வு எட்டவில்லை. இதில் பார்சிலோனா தரப்பு ‘ஒப்பந்தத்தை தொடருவதாக இல்லை’ என்ற முடிவில் உறுதியாக நின்றதாம். 

அதன் விளைவாக மெஸ்ஸி பார்சிலோனா அணியை விட்டு கண்ணீர் மல்க பிரியாவிடை பெற்று சென்றுள்ளார். பார்சிலோனா ஒரு சாம்பியன் பிளேயரை இழந்துள்ளது. இனி வரும் நாட்களில் பார்சிலோனாவை எதிர்த்து PSG அணிக்காக சாம்பியன்ஸ் லீக் தொடரில் மெஸ்ஸி விளையாட உள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com