பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பினாமியா ‘தமிழ் ராக்கர்ஸ்’ ? - சைபர் கிரைம் சந்தேகம்
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் பினாமி நிறுவனமாக ‘தமிழ் ராக்கர்ஸ்’ இருக்கலாமோ என்ற சந்தேகம் உள்ளதாக சைபர் க்ரைம் அதிகாரிகள் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
திரையுலகை தற்போது ஆட்டிப்படைக்கும் விசயம் பைரசி. ஒரு காலத்தில் திருட்டு விசிடிதான் பிரச்னை என்று இருந்த போது அதன் கடைகளை கண்டுபிடிப்பதும், திருட்டு விசிடி தயாராகும் இடங்களை கண்டுபிடிப்பதும் அத்தனை கடினமாக இருக்கவில்லை. ஆனால் பைரசி என்பது முழுவதும் இணையத்தை மையமாக வைத்து நடைபெறும் வியபாரம் என்பதால்தான் சைபர் கிரைம் திணருகிறது.
பைரசி என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் திரையுலகுக்கு பெரிய தலைவலியாக இருப்பது ‘தமிழ் ராக்கர்ஸ்’. எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும் ‘தமிழ் ராக்கர்’ஸை சைபர் கிரைமால் நெருங்கக்கூட முடியவில்லை. ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்தை கண்டுபிடிப்பதில் ஏன் இவ்வளவு சிரமம் உள்ளது? யார் அவர்கள்? எங்கிருந்து அவர்கள் இயங்குகிறார்கள்? படத்தை வெளியிடுவதால் அவர்களுக்கு என்ன லாபம்? என பல கேள்விகள் அனைவரின் மனதிலும் எழுகின்றன. இது குறித்து சைபர் க்ரைம் அதிகாரி ஒருவரின் விளக்கங்களை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ‘தமிழ் ராக்கர்ஸ்’ நிறுவனத்தினர் ஏதோ ஒரு இடத்தில் இருந்துகொண்டு உலகம் முழுவதும் திரைப்படத்தை வெளியிடுகிறார்கள். நாம் பயன்படுத்தும் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற இணையதளங்களை அவர்கள் பயன்படுத்துவதில்லை. டார், டார்ச் போன்ற இணையதளங்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். கூகுளில் ஒரு வீடியோவை பதிவிறக்கம் அல்லது பதிவேற்றம் செய்யும்போது இதை யார் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியும்.
ஆனால் டார், டார்ச் போன்ற ரகசிய இணையதளங்களில் அதற்கு வாய்ப்பில்லை. இந்த ரகசிய இணையதளங்களை பயன்படுத்தி, நாம் இந்தியாவில் இருந்து கொண்டே இங்கிலாந்தில் இருப்பதுபோல நமது ஐபி முகவரியை மாற்றிக் காட்ட முடியும். இதனால்தான் அதை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுகிறது. ‘தமிழ் ராக்கர்ஸ்’ அடிக்கடி தங்களது டொமைன் முகவரியை மாற்றி வெவ்வேறு பெயர்களில் தொடர்ந்து திரைப்படங்களை வெளியிடுகின்றனர்.
‘தமிழ் ராக்கர்ஸ்’ அட்மின்களாக பலர் உள்ளனர். கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இவர்கள் செயல்படலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிலரின் பெயர்கள் கிடைத்தன. அதை வைத்து விசாரணை நடத்தினோம். ஆனால் யாரையுமே கண்டுபிடிக்க முடியவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ''தமிழ் ராக்கர்சில் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்வதற்கு எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. ஆனால், பதிவிறக்கம் செய்யும்போது அதனுடன் ஒரு பாப்அப் விளம்பரமும் பதிவிறக்கம் ஆகும். அந்த விளம்பரம் மூலம்தான் அவர்கள் மாதம் ரூ.10 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். அந்த விளம்பர நிறுவனத்தினரிடம் ‘தமிழ் ராக்கர்ஸ்’ குறித்து விசாரித்தோம்.
ஆனால், ஆன்லைன் மூலமே அனைத்து தகவல் பரிமாற்றங்களும் செய்யப்படுவதால் எந்தத் தகவலுமே கிடைக்கவில்லை. தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் பினாமி நிறுவனமாக ‘தமிழ் ராக்கர்ஸ்’ இருக்கலாமோ என்ற சந்தேகமும் உள்ளது. ‘தமிழ் ராக்கர்ஸ்’ உரிமையாளர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதில் அதிகமான சவால்களும், அதிக பொருட்செலவும் உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.