’எங்களுக்கு இவ்வளவு சிறப்பா 60ம் கல்யாணமா’-ஆதரவற்ற தம்பதிக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த விசிக!

’எங்களுக்கு இவ்வளவு சிறப்பா 60ம் கல்யாணமா’-ஆதரவற்ற தம்பதிக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த விசிக!
’எங்களுக்கு இவ்வளவு சிறப்பா 60ம் கல்யாணமா’-ஆதரவற்ற தம்பதிக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த விசிக!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளுக்கு ஆதரவற்றோர் இல்லத்தில் உணவளிக்க வந்த கட்சியின்  ஆதரவாளர்கள், அங்கு வாழும் முதிய தம்பதிக்கு அறுபதாம் கல்யாண திருவிழாவை அறுசுவை விருந்துடன் நடத்தி மகிழ்ந்தனர்.

நெல்லை மாநகராட்சியின் நிதி உதவியுடன் டவுண் பகுதியில் சோயா சரவணன் என்பவர் ஆதரவற்றோர் காப்பகம் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் குழந்தைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், உறவுகள் இல்லாத தனிநபர்கள் உழைத்து உண்ணும் வகையில் உடல் பலம் இல்லாதவர்கள் என 25 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு மூன்று வேளைகளுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளுக்கு செய்து கொடுத்து பாதுகாத்து வருகிறார். சோயா என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வரும் சரவணன்.

இந்த காப்பகத்தில் உள்ள 25 நபர்களுக்கும், தனித்தனியாக சோக கதைகள் உண்டு.

இந்த கூட்டத்தில் கடந்த 2020 ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் நெல்லை பேட்டை பகுதியிலிருந்து இரண்டு கண் பார்வைகள் குறைபாடுடன் வயது முதிர்ந்த சண்முகம் என்பவர் தனது மனைவி பொன்னம்மாளுடன் வந்து இணைந்துள்ளார். சண்முகம் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் நடந்த விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியவில்லை. மனைவி பொன்னம்மாள்தான் சிறு சிறு வீட்டு வேலைகள் பார்த்து தன் கணவனை காப்பாற்றி வந்துள்ளார். கால்கள் பாதிக்கப்பட்ட கணவருக்கு நாளடைவில் இரண்டு கண்களிலும் பார்வை பறி போனது. இந்நிலையில், கொரோனா காரணமாக மனைவி பொன்னம்மாளுக்கும் வேலை இழப்பு ஏற்பட அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வதென்ற வழி தெரியாமல் நின்றுள்ளனர். இந்த தம்பதிகளுக்கு உதவ உறவுகளும் இல்லை, உழைத்து காப்பாற்ற குழந்தைகளும் இல்லை.

தம்பதிகளின் நிலையறிந்த சோயா அமைப்பைச் சேர்ந்த சரவணன், இருவரையும் மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து பாதுகாத்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக இத்தம்பதி இந்த இல்லத்தில் வசித்து வரும் நிலையில், சண்முகத்திற்கு வயது 60 கடந்து விட்டதால், தங்களுக்கு 60ஆம் கல்யாணம் நடத்தி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர். இதை அறிந்த சோயா சரவணன் இருவருக்கும் மணி விழா நடத்த முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுரேஷ், சோயா சரவணனை அணுகி, தங்கள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் 60 வது பிறந்தநாளை முன்னிட்டு இல்லத்தில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என வேண்டுமென கேட்டபோது, சண்முகம் பொன்னைம்மாள் தம்பதியின் மணி விழா ஆசையை நடத்தி தரும்படி சரவணன் கேட்டுள்ளார். அவரும் சம்மதிக்கவே தொல். திருமாவளவன் பிறந்தநாளான இன்று இல்லத்தில் வைத்து சண்முகம் பொன்னம்மாள் தம்பதிக்கு மணி விழா ஏற்பாடு ஜோராக நடந்தது.

இதையொட்டி இருவருக்கும் புத்தாடைகள் மாலைகள் வாங்கபட்டன. மணி விழாவிற்கான ஏற்பாடுகள் ஏதும் அறியாத சண்முகம் பொன்னம்மாள் தம்பதியினர் திடீரென தங்களுக்கு புத்தாடைகள் வழங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் தங்களுக்கு இன்று மணி விழா கொண்டாடப்போகிறோம் என கூறியவுடன் சண்முகம் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இல்லத்தில் வசிக்கும் அனைவர் முன்னிலையில் சண்முகம் பொன்னம்மாள் தம்பதிக்கு மணி விழா சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்றது. இருவரும் புத்தாடை உடுத்தி கொண்டு ஒருவருக்கொருவர் மாலை மாற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

மூத்த தம்பதிகளின் 60 வது திருமண நாளை முன்னிட்டு, அல்வா மற்றும் அறுசுவை உணவுடன் காப்பகத்தில் இருந்த அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. மூத்த மணமக்கள் தம்பதி மட்டுமின்றி காப்பகத்தில் இருந்த அனைத்து ஆதரவற்றோரின் மனதிலும், இழந்த குடும்ப உறவுகளுடன் கொண்டாடும் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுரேஷ் கூறும்போது, எங்கள் கட்சி தலைவர் பிறந்தநாளில் ஆதரவில்லாத இத்தம்பதிக்கு மணி விழா நடத்தும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். மேலும் எனது அம்மா இறந்து விட்டார், அவருக்கு இது போன்று மணி விழா நடத்த வேண்டும் என ஆசைபட்டேன் முடியவில்லை எனவே தற்போது இவர்களை எனது தாய் தந்தையாக நினைத்து இந்த மணி விழா நடத்தி அவர்களின் ஆசீர்வாதங்களை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மணமகன் சண்முகம் கூறும்போது, இரண்டு ஆண்டுக்கு முன் இந்த இல்லத்துக்கு வந்தேன். எனது மனைவி வீட்டு வேலை செய்து வந்தாள். கொரனோவால் அவருக்கு வேலை இல்லாமல் போனது. இங்கு வந்த பிறகு எனக்கு கண் சிகிச்சை அளித்து பார்வை கொடுத்துள்ளனர். 60ம் கல்யாணம் செய்ய வேண்டுமென்று ஆசைபட்டோம் ஆனால் அது நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. இன்று திடீரென உங்களுக்கு மணி விழா நடத்த போகிறோம் என்று கூறியதும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எனது திருமணம் கூட இந்த அளவுக்கு நடக்கவில்லை அதை விட சிறப்பாக எனது மணி விழா நடத்தியுள்ளனர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

மணமகள் பொன்னம்மாள், சொல்ல வார்த்தைகள் வரவில்லை எதிர்பாராத இந்த திருமண நிகழ்வு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.

இந்த நிகழ்வு குறித்து காப்பகம் நடத்தி வரும் சோயா சரவணன் கூறும்போது, இது போன்ற ஆதரவற்ற மனிதர்களுக்கு, உண்ண உணவு மட்டும் கொடுத்து உதவாமல் தனிமை வாழ்க்கை ரணத்திற்கு மருந்தளிக்கும் வகையில், இதுபோன்ற பிறந்தநாள், திருமண நாள் நிகழ்வுகளை நடத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என்பதே இந்த மகிழ்ச்சியை எதிர்நோக்கும் அனைத்து ஆதரவற்ற மக்களின் மனநிலை என தெரிவித்தார்.

- நெல்லை நாகராஜன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com