யார்தான் பொறுப்பு? ஓராண்டுக்குள் நீர்த்துப்போன பிளாஸ்டிக் தடை..!

யார்தான் பொறுப்பு? ஓராண்டுக்குள் நீர்த்துப்போன பிளாஸ்டிக் தடை..!
யார்தான் பொறுப்பு? ஓராண்டுக்குள் நீர்த்துப்போன பிளாஸ்டிக் தடை..!

2019-ம் ஆண்டு தொடக்கத்திலேயே தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அது தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்ற முக முக்கியமான அறிவிப்பு. பிளாஸ்டிக் செல்லாது என்பது 2019-ல் சட்டமானாலும் அதற்கான அறிவிப்பை 2018 ஜூன் மாதமே சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.

கிட்டத்தட்ட 6 மாதங்கள் பொது மக்களுக்கும், வணிகர்களுக்கும் நேரம் கொடுக்கப்பட்டது. பின்னர் தமிழகத்தில் கடந்த 2019, ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. அதன்படி ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்கு அனைவருக்குமே தெரியும். நிலம், நீர் என அனைத்தையும் மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை என்பது நல்ல விஷயம் தானே என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து பெட்டி கடைகள், ஹோட்டல்கள் என எல்லா கடைகளிலும் ''இனி பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு இல்லை. வரும்போதே துணிப்பையை கொண்டுவரவும் என எழுதி ஒட்டினார்கள்''. சுற்றுப் புறத்துக்கும், சுகாதாரத்துக்கும் நல்லது தானே என அனைவருமே தமிழக அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்தனர். கையேந்தி உணவகங்கள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை பிளாஸ்டிக் மாறி வாழை இலைகள் வந்தன. தமிழகமே பரபரப்பாக பிளாஸ்டிக் தடைக்கு ஆதரவு தெரிவித்து அரசின் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பதுபோல தெரிந்தது. ஆனால் எல்லாம் சில நாட்களுக்கு மட்டுமே இருந்தது.

ஓரிரு மாதத்திலேயே பிளாஸ்டிக் பைகள் மீண்டும் தலைகாட்டத் தொடங்கின. குடிசைத் தொழிலைப்போல கேரி பேக்குகள் தயார் ஆகின. கடைகளில் ஒளித்து வைத்துக்கொண்டு பிளாஸ்டிக் பைகளில் பொருளைக் கொடுத்தார்கள். நாட்கள் ஓடின. தற்போது ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், ''என்னது? பிளாஸ்டிக் பைகளுக்கு தடை போட்டார்களா?'' என்று கேட்கும் அளவுக்கு சட்டம் காணாமல் போய்விட்டது. பலருக்கு அப்படிப்பட்ட தடை அமலுக்கு வந்ததே மறந்தே போய்விட்டது.

இன்றைய தேதிக்கு சர்வ சாதாரணமாக தள்ளுவண்டி முதல் பெரிய ஹோட்டல்கள், கடைகள் என எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் பைகள் கிடைக்கின்றன. வாழை இலைக்கு மாறிய ஹோட்டல்கள் பல மீண்டும் பிளாஸ்டிக் தாள்களுக்கு வந்துவிட்டன. வாழை இலை தின்று ருசி பார்த்த நகரத்து மாடுகளும் இப்போது பிளாஸ்டிக் தாள்களை மென்றுகொண்டிருக்கின்றன. பரபரப்பாக தொடங்கப்படும் ஒரு திட்டம், ஒரு சட்டம் நாட்கள் ஓட ஓட நீர்த்துப்போகக் காரணம் என்ன?

நாட்டின் நலன் கருதி, மக்களின் நலன் கருதி, சுற்றுப்புறச் சூழல் நலன் கருதி பிளாஸ்டிக் தடை கொண்டுவரப்பட்டால் அதற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டியது மக்களின் கடமை. பிளாஸ்டிக் தடை நீர்த்துப்போக முக்கிய காரணமே மக்கள்தான் என்கின்றனர் வணிகர்கள் சிலர். தடை விதிக்கப்பட்ட சில நாட்களுக்கு கைகளில் பைகளை கொண்டு வந்த பலரும் நாட்கள் செல்ல செல்ல வெறுங்கையை வீசிக்கொண்டு வந்தனர். மறதி, சோம்பேறித்தனம் என பல காரணங்களை வைத்துக்கொண்டு பைகளை கொண்டு வராத நுகர்வோர்களால் திக்குமுக்காடிய கடைக்காரர்கள் வேறு வழியில்லாமல் மீண்டும் பிளாஸ்டிக்கை தேடத் தொடங்கினார்கள் என்கின்றனர்.

நீண்ட நாட்கள் பழக்கப்பட்ட ஒன்றில் இருந்து மக்கள் மாற சிறிது காலம் எடுக்கும் என்பதால், ஒரு சட்டம் நீர்த்துபோவதற்கான வழியை அரசு விட்டுவிடக்கூடாது என்கின்றனர் பொதுமக்கள். பிளாஸ்டிக் பை கிடைக்காது என்ற நிலை உருவாகிவிட்டால் நிச்சயம் மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட நிலை உருவாகவில்லை. எப்படியும் கடையில் பிளாஸ்டிக் பை இருக்கும் என்ற நிலையே தமிழகத்தில் நிலவியது. 'பிளாஸ்டிக் பைகள் தயாராகும் இடத்தை முறையாக தடுத்தி நிறுத்தினால் கடைகளுக்கு ஏன் பிளாஸ்டிக் பைகள் வரப்போகிறது'? என்று கேள்வி கேட்கின்றனர் பொதுமக்கள்.

பிளாஸ்டிக் பை தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு உரிய எச்சரிக்கை கொடுக்க வேண்டும். கடுமையான அபராதம் வசூலிக்க வேண்டும். அதேபோல பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகள், ஹோட்டல்களையும் கண்டிபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு போதிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

ஒரு விதியை அரசு அமல்படுத்திவிட்டு அமைதியாக இருந்துவிடாமல், தொடர் சோதனைகள், அபராதம் என கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதேபோல் ஒரு விதியை அரசால் மட்டுமே வெற்றியடையச் செய்ய முடியாது, அதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுமே சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com