குடியை கொஞ்சம், கொஞ்சமாகத்தான் நிறத்தணும்னு யார் சொன்னது?- மருத்துவர் டி. வி அசோகன் பேட்டி
சென்னையில் 144 நாட்களுக்குப்பிறகு டாஸ்மாக் கடைகள் , இன்று திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் உற்சாகமாகி இருக்கிறார்கள். திடீரென்று குடிப்பதால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் வரும்? என்பது குறித்து பிரபல மனநல மருத்துவர் டாக்டர் டி.வி அசோகனிடம் கேட்டோம்,
“சினிமாவில்தான் கொஞ்சம் கொஞ்சமாக குடியையும் சிகரெட் பிடிப்பதையும் விடமுடியும் என்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. மது என்றில்லை. எந்தப் பழக்கத்தையும் உடனடியாக நிறுத்தவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவது என்பது விட்டக்குறை தொட்டக்குறையாகத்தான் தொடரும். மதுவில் இருக்கும் கெமிக்கல்கள் உடம்பிலுள்ள அத்தனை நரம்புகளையும் பாதிக்கும். அதனால், அதனை உடனடியாக விட்டுதான் ஆகவேண்டும். டாஸ்மாக் மூடியிருந்தபோது பலர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுக்கு அடிமையாகிவிட்டார்கள்.
என்னதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும் சவுக்கு கட்டைகள் வைத்து வரிசையில் நிற்க வைத்தாலும்கூட வருபவர்கள் நிச்சயம் மதுவை வாங்கவேண்டும் என்று ஒரு வேகத்தில் வருவார்கள். மது உள்ளே போனதும் கட்டுப்பாடை எடுத்துவிடும். ஒரு மிதமிஞ்சிய தைரியமும் துணிச்சலும் மதுப்பிரியர்களுக்கு வந்துவிடும். அதனால், எந்த சமூக கட்டுப்பாடுகளையும் கடை பிடிக்கமாட்டார்கள். மேலும், அவர்கள் எங்கு குடிப்பார்கள்? எப்படி குடிப்பார்கள்? மாஸ்க்கை கழட்டவேண்டியிருக்குமே? என்ன செய்வார்கள்? இதுபோன்ற செயல்களாலேயே கொரோனா அதிகமாக தொற்றும். மதுவாங்கச் சென்று கொரோனாவை தொற்றி வந்து குடும்பத்திற்கும் பரப்பி விடுவார்கள். நான்கு மாதங்களுக்கும் மேலாக குடியை நிறுத்தியிருந்தவர்கள் திடீரென குடிப்பதால் அளவுக்கு அதிகமாக குடித்து விடுவார்கள். மீண்டும் உடல்நல மனநலப் பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வார்கள். எனவே, மதுப்பிரியர்கள் இந்த 144 நாட்களை ஒரு நல்ல விஷயமாக நினைத்து குடியை தொடராமல் அடியோடு நிறுத்தவேண்டும்” என்கிறார், அக்கறையுடன்.
- வினி சர்பனா