”வழக்கு நிலுவையில் இருப்பதால் எங்கள் பணிகள் முடங்கியுள்ளன” - அதிமுக வழக்கில் ஓபிஎஸ் தரப்பு

”வழக்கு நிலுவையில் இருப்பதால் எங்கள் பணிகள் முடங்கியுள்ளன” - அதிமுக வழக்கில் ஓபிஎஸ் தரப்பு
”வழக்கு நிலுவையில் இருப்பதால் எங்கள் பணிகள் முடங்கியுள்ளன” - அதிமுக வழக்கில் ஓபிஎஸ் தரப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், சென்னையில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது எனவும் அதிமுகவில் கடந்த ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 1-7ம் தேதி தீா்ப்பளித்தாா்.

தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. செப்டம்பர் 5-ம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. 

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒரு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது.

கடந்த வாரம் 6-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை வரும் 12-ம் தேதி விசாரிப்பதாகவும், இந்த இடைப்பட்ட காலத்தில் எதிர்மனுதாரர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் என்ன நிவாரணத்தை எதிர்பார்க்கிறீர்கள், இதுதொடர்பாக என்னென்ன விவரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை இடைக்கால மனுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர். மேலும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தொடர்ந்து கால அவகாசம் கேட்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதையடுத்து அதற்கான தேர்தல் தேதியானது எப்போது வேண்டுமானால் அறிவிக்கப்படலாம். அவ்வாறான சூழலில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பெயரை குறிப்பிட்டோ அல்லது இரட்டை இலை சின்னத்தை கேட்டோ கட்சி பணிகளில் எந்தவித இடையூறுகளையும் விளைவிக்கக் கூடாது.

மேலும், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி எந்தவித நிவாரணங்களையும் கேட்கக் கூடாது என தடை விதிக்க வேண்டும். மேலும் பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், அதனை காரணம் காட்டி கட்சி விதிகளில் கொண்டு வந்த மாற்றத்தை பதிவேற்றம் செய்யாமல் தேர்தல் ஆணையம் இருக்கிறது. அதனால் கட்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு உரிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக ஓபிஎஸ் சார்பில் விளக்கமனு ஒன்றும் தனியாக தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், தங்களது பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. தேர்தல் ஆணையமும் கட்சி விதி மாற்றங்களையும் பதிவேற்றம் செய்ய மறுக்கிறது. எனவே இடைப்பட்ட காலத்தில் தேர்தல் எதுவும் அறிவிக்கப்பட்டால் பெரும் சிக்கல் ஏற்படும் என இபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை விசாரிக்க கூடாது என்றும், பிரதான வழக்கையே விசாரிக்க வேண்டும் என்றும், அதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இன்றைய அலுவல் நேரம் முடிந்ததை அடுத்து வழக்கின் விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com