பணம் பண்ண ப்ளான் B - 4: பங்குச்சந்தையில் நுழைய விழைவோருக்கு ஓர் அடிப்படை அலர்ட்!

பணம் பண்ண ப்ளான் B - 4: பங்குச்சந்தையில் நுழைய விழைவோருக்கு ஓர் அடிப்படை அலர்ட்!
பணம் பண்ண ப்ளான் B - 4: பங்குச்சந்தையில் நுழைய விழைவோருக்கு ஓர் அடிப்படை அலர்ட்!

'இந்த இடத்தில் இடம் வாங்கினால் இரு மடங்கு ஏற்றம் இருக்குமா?', 'இந்தப் பங்குகளில் முதலீடு செய்தால் இரு மடங்காகுமா?' என்பது குறித்து ஆலோசனை சொல்லும் தொடர் அல்ல இது. பணம் குறித்து பல விதமான பிம்பங்கள் இருக்கின்றன. அதனை உடைப்பது அல்லது புரிந்துகொள்ள முயற்சி செய்வதற்காக தொடங்கப்பட்ட தொடர் இது.

கொரோனா பேரிடருக்குப் பிறகு பங்குச்சந்தை வேகமாக உயர்ந்தது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. சிறு முதலீட்டாளராக நாம் புரிந்துகொள்ள வேண்டியது வட்டி விகிதம். இதுவரை சர்வதேச அளவில் மட்டுமே வட்டி விகிதம் குறைவாக இருந்தது. ஆனால், தற்போது இந்தியாவிலும் குறைந்த வட்டி விகிதம் என்னும் சூழல் உருவாகி இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 10 அல்லது 12 சதவீத வட்டி கூட கிடைத்தது. ஆனால், தற்போது ஓர் ஆண்டுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்டுகான வட்டி விகிதம் 5.5 அல்லது 6 சதவீதம் என்னும் அளவிலே இருக்கிறது.

அதனால், வங்கியில் டெபாசிட் செய்வது என்பது பெரிய அளவுக்கு வருமானம் இல்லாத முதலீடாக மாறிவிட்டது. இதனால் டெபாசிட்டை நம்பி இருப்பவர்களுக்கு பெரும் சிக்கல் உருவாகி இருக்கிறது. அதனால், கூடுதல் லாபத்துக்கு இந்த தொகை நேரடியாக பங்குச்சந்தைக்கு வந்திருக்கிறது. கணிசமான தொகை நேரடியாக பங்குச்சந்தைக்கு வருகிறது. மீதமுள்ள தொகை மியூச்சுவல் ஃபண்ட்கள் மூலமாக பங்குச்சந்தைக்கு வருகிறது.

இந்தியாவில் இருந்தும் பங்குச்சந்தைக்கு பணம் வருகிறது, வெளிநாடுகளில் இருந்தும் இந்திய பங்குச்சந்தைக்கு பணம் வருகிறது. அதனால் கடந்த 18 மாதங்களில் பங்குச்சந்தையில் நீங்கள் எந்த ஒரு முதலீட்டை செய்திருந்தாலும், அந்த முதலீடு உங்களுக்கு லாபத்தையே கொடுத்திருக்கும் அல்லது உங்களைச் சுற்றி இருப்பவர்கள் பெரும் லாபத்தை சம்பாதித்திருப்பாக கூறியதை கேட்டிருப்பீர்கள்.

இந்த டெவலப்மென்ட் காரணமாக, பங்குச்சந்தை முதலீடு குறித்து பலருக்கும் ஆர்வம் வந்திருக்கும். கடந்த 18 மாதங்களில் ஏற்றத்தை தவறவிட்டவர்கள், விட்டதை பிடிக்க வேண்டும் என பலர் இருப்பதை பார்க்க முடிந்தது. என்னுடைய நண்பர்கள் வட்டத்திலும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

2008-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 1 கோடி மட்டுமே. 2016-ம் ஆண்டுதான் இந்த எண்ணிக்கை 3 கோடியாக தொட்டது. 2020-ம் ஆண்டு மே மாதம் 5 கோடியாக இருந்தது. தற்போது 8 கோடிக்கும் மேற்பட்ட சிறு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்பதே சந்தை வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

பங்குச்சந்தையில் கடந்த 18 மாதங்களில் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகி இருக்கும். இது அதீத தன்னம்பிக்கையை கொடுக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் முறைதான் எளிமையாக்கப்பட்டிருக்கிறதே தவிர, பங்குச்சந்தை முதலீடு என்பது எளிதல்ல. பல புரோக்கிங் நிறுவனங்கள் ஆப் மூலம் வர்த்தகம் செய்வதற்கான வசதியை வழங்குகின்றன. வாங்குவது மற்றும் விற்பதற்கான வழியை எளிமையாக்கி இருக்கின்றன. ஆனால், எதனை வாங்க வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களைப் பொறுத்தது. அதனை பொறுத்தே லாபமா அல்லது நஷ்டமா என்பது தெரியும்.

பங்குச்சந்தைக்குள் நுழைய விரும்புவோர் தங்களது முதலீட்டை சிறிய அளவில் தொடங்குவதே நல்லது. மிகச் சிறிய தொகையை முதலீடு செய்து, பங்குச்சந்தையை முதலில் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். குறுகிய கால ஆதாயத்தை கருத்தில் கொண்டு முதலீடு செய்ய வேண்டாம். இதை விட முக்கியம்... தொடக்க காலத்தில் டிரேடிங் செய்ய வேண்டாம். அதாவது, காலையில் வாங்கி மாலையில் அல்லது அதே வர்த்தக நாளில் விற்க வேண்டாம். Trading is zero sum game. ஒருவருடைய லாபம் மற்றொருவருடைய நஷ்டம். அதைவிட முக்கியம், டிரேடிங் என்பது முழுநேரமாக செய்ய வேண்டிய பணி. மற்றொரு வேலையில் இருந்துகொண்டு முதலீடு செய்யலாம். ஆனால், வேறொரு வேலையில் இருந்துகொண்டு டிரேடிங் செய்ய முடியாது. டிரேடிங்கில் லாபம் சம்பாதிக்கலாமா, முடியாதா என்பதல்ல சொல்ல வருவது. பங்குச்சந்தையை முதன்முதலில் வருபவர்கள் டிரேடிங் செய்ய வேண்டாம் என்பது ஓர் அடிப்படை அலர்ட்.

தவிர, பங்குச்சந்தை முதலீட்டுக்கு வெறும் 'டிப்ஸ்'களை மட்டும் நாட வேண்டாம். முதலீடு தொடர்பாக படிக்கத் தொடங்குகள், பங்குச்சந்தையை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அதேபோல 52 வார குறைந்தபட்ச விலையில் முதலீடு செய்து 52 வார அதிகபட்ச விலையில் விற்க வேண்டும் என நினைக்காதீர்கள். அது ஒருபோதும் நடக்காது.

எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ளுங்கள். 100 சதவீத லாபம், 300 சதவீத லாபம் என்று வெளியாகும் செய்திகளை வைத்து அதிக லாபம் எதிர்பார்க்காதீர்கள். ஓர் ஆண்டுக்கு 12% முதல் 15% லாபம் என்பதை முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கலாம் என்பதே சந்தை வல்லுநர்களின் கருத்து.

ஒரே பங்கு அல்லது ஒரே துறையில் மொத்தமாக முதலீடு செய்ய வேண்டாம். முதலீட்டை பிரித்து முதலீடு வேண்டும். அதேபோல ஒட்டுமொத்த முதலீட்டில் குறிப்பிட்ட தொகையை மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்யவும். இது சம்பந்தப்பட்டவரின் ரிஸ்க் எடுக்கும் தன்மையை பொறுத்தது.

அடுத்த ஐந்தாண்டுகளில் தற்போதைய நிலையை விட இரு மடங்காக சென்செக்ஸ் புள்ளிகள் உயரும் என்று சமீர் அரோரா, ஏ.கே.பிரபாகர், ராம்தேவ் அகர்வால், கிறிஸ்டோபர் வுட் என பல முக்கியமான பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்.

வங்கி வட்டி விகிதம் 6 சதவீதம் எனும் அளவில் இருக்கும்போது முதலீட்டின் ஒரு சிறு பகுதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். நேரடியாக முதலீடு செய்ய விரும்பாதவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக பங்குச்சந்தையில் நுழையலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com