காவிரி செயல்திட்டத்திற்கு மாநிலங்கள் ஆலோசனை தேவை என ஏமாற்றுகிறாரா நிர்மலா சீதாராமன் !

காவிரி செயல்திட்டத்திற்கு மாநிலங்கள் ஆலோசனை தேவை என ஏமாற்றுகிறாரா நிர்மலா சீதாராமன் !
காவிரி செயல்திட்டத்திற்கு மாநிலங்கள் ஆலோசனை தேவை என ஏமாற்றுகிறாரா நிர்மலா சீதாராமன் !

உச்சநீதிமன்றம் பல ஆண்டுகளுக்கு பிறகு காவிரி விவகாரத்தில் ஒரு தீர்ப்பை கொடுத்தது. எதிர்பாராத விதமாக தமிழகத்துக்கு நடுவர் மன்றம் ஒதுக்கியதை விட குறைவான தண்ணீரை திறக்கவும் உத்தரவிட்டது. அதே சமயத்தில் 6 வார காலத்துக்குள் , அதாவது மார்ச் 30க்குள் காவிரி தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் ஒரு திட்டத்தை உருவாக்குமாறு தெரிவித்தது. இந்த திட்டம்தான் இப்போது விஸ்வரூப பிரச்னையாக மாறியிருக்கிறது. அதாவது திட்டம் என்றால் என்ன என்ற சந்தேகம் மத்திய அரசுக்கு வர, தமிழகம் அதனை காவிரி மேலாண்மை வாரியம் என சொல்ல, கர்நாடகா அப்படியெல்லாம் இல்லையே என கூறியது. கடைசியில் மீண்டும் உச்சநீதிமன்றம். 

ஒருவழியாக மத்திய அரசு கால்க்கெடு முடிந்ததும், திட்டம் என்றால் என்ன என விளக்கினால் நாங்கள் உடனே காவிரி தொடர்பான ஆணையம் அமைக்க வசதியாக இருக்கும் என்று மனு தாக்கல் செய்தனர். அதோடு கர்நாடகா தேர்தல் வருவதால் திட்டத்தை செய்லபடுத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. நீங்கள் கடமையில் இருந்து தப்பிக்க முடியாது என காட்டமாக பேசிய உச்சநீதிமன்றம், மே 3-ம் தேதிக்குள் காவிரி தொடர்பான ஒரு வரைவு செயல் திட்டத்தை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

உச்சநீதிமன்றம் கூறியது என்ன என்றால் “ We direct the union of India to file a draft scheme before this court on or before 3rd May 2018. We have so directed as we do not want the controversy to continue before this court. We request learned senior counsel for the parties to convey to the competent authorioties of the respective states to maintain peace at this juncture , So that this court can put the final stamp on the scheme after due delibration". 

உச்சநீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்த போது எந்த இடத்திலும் மத்திய அரசை மாநில அரசுகளோடு கலந்து ஆலோசித்து, வரைவு செயல்திட்டத்தை இறுதி செய்து கொடுங்கள் என சொல்லவில்லை. மாறாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வரைவு செயல்திட்டத்தை எங்கள் முன் சமர்ப்பியுங்கள், நாங்கள் நான்கு மாநிலங்களின் கருத்துகளை, பார்வையை கேட்டுத்தெரிந்து கொண்டு , அதனை இறுதி செய்கிறோம் என்றார். 

உச்சநீதிமன்றமே மாநில ஆலோசனை தேவையில்லை என்று சொல்லியிருக்கும் நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காவிரி விவகாரத்தில் கால அவகாசம் கேட்டு , மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கும் செயலா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,  ”காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாது, அனைத்து மாநிலங்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும், டெல்லியில் உட்கார்ந்து கொண்டு இதுதான் வாரியம் என சொல்ல முடியாது, எல்லோரோடும் பேசி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். முன்பு மார்ச் 9-ம் ஒரு கூட்டம் நடைபெற்றது. உகந்த வாரியம் எதுவோ அதை ஆலோசித்தே செய்ய வேண்டும், தன்னிச்சையாக மத்திய அரசே நாளைக்கே இதுதான் வாரியம் என சொல்ல முடியாது, கலந்து ஆலோசிக்காமல் கொடுக்கவும் முடியாது என்றார். 

வீடியோ இணைக்கப்பட்டுள்ளது : https://www.youtube.com/watch?v=QXEQKI5X9TY

உச்சநீதிமன்றம் தெளிவாக கூறிய விஷயம் என்னவென்றால் மத்திய அரசு ஒரு வரைவு செயல்திட்டத்தை கொடுங்கள் , நாங்கள் மாநில அரசுகளின் கருத்துகளை பெற்றுக் கொள்கிறோம் என்பதுதான். ஆனால் நிர்மலா சீதாராமன் சொல்வது என்னவென்றால் மாநில அரசின் கலந்து ஆலோசித்து, இதுதான் வாரியம் என முடிவு செய்யாமல் நீதிமன்றத்தில் தெரிவிக்க முடியாது என்கிறார்.. தேவையில்லை அல்லது இப்படித்தான் செய்ய வேண்டும் என நீதிமன்றமே கூறிய பின், மாநில அரசை கேட்டுதான் செய்வேன் என்பது தாமதப்படுத்தும் செயலா என்ற கேள்வி எழாமல் இல்லை. மேலும் நீதிமன்றம் கூறிய ஒன்றை தவறாக அமைச்சர் கூறியிருக்கிறார் என்பதும் வெளிப்பட்டிருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com