தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் ஒரு தமிழச்சி!
தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் த்ரிஷா ஷெட்டி. கீப்பிங்கில் 134 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ள இந்த த்ரிஷா, இப்போது நடந்து வரும் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீராங்கனை! இவர், தமிழச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஆமா. நான் தென்னாப்பிரிக்கா டர்பன்ல பிறந்து வளர்ந்தாலும் எங்க பூர்வீகம் மெட்ராஸ். அம்மா அப்படித்தான் சொன்னாங்க. இன்னும் எங்க சொந்தக்காரங்க அங்க இருக்காங்கன்னு சொல்லியிருக்காங்க. அவங்களை பார்க்கும் ஆசை இருக்கு. இப்பவும் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவோட விளையாடினா, நான் தென்னாப்பிரிக்காவுக்கு சப்போர்ட் பண்ணுவேன். மற்ற அணிகளோட விளையாடினா, இந்தியாவுக்குத்தான் என் ஆதரவு’ என்று குழந்தையாகப் புன்னகைக்கிறார் த்ரிஷா.
’நான் இந்திய ஆர்ஜின்ங்கறதுல எனக்கு பெருமைதான்’ என்கிற த்ரிஷா, ஏழு வயதிலேயே கிரிக்கெட் ஆட ஆரம்பித்துவிட்டார். 18 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்துவிட்டார்.
‘சின்ன வயசுல ஜான்டி ரோட்ஸ் பீல்டிங் பண்றதை ரசிப்பேன். அவரைப் போல எனக்கும் அங்க இங்க ஓடி போய், துள்ளிக்குதிச்சு பீல்டிங் பண்ணணுங்கற ஆசை இருக்கும். அதையே ஆரம்பத்துல பின்பற்றினேன். விக்கெட் கீப்பிங்னா மார்க் பவுச்சர் ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். அவரை போல கீப்பிங் பண்ணணுங்கறது என் ஆசை’ என்கிற த்ரிஷாவை, அணியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக, 3 மாதம் சஸ்பெண்ட் செய்திருந்தது தென்னாப்பிரிக்க அணி. மீண்டும் அணிக்கு திரும்பிய த்ரிஷாவை ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கி இருக்கிறது. அதற்கு முன்புவரை ஏழாவது இடத்தில்தான் இறங்குவார்.
‘உலகின் சிறந்த விக்கெட் கீப்பரா இருக்கணும்னு நினைக்கிறேன். ஆனா, என் சாதனை குறைவுதான். மற்றவர்கள் பண்ண முடியாத ஒரு சாதனையை செய்யணும். அதை இன்னும் நான் பண்ணல. பண்ணுவேன்னு நினைக்கிறேன்’ என்கிறார் த்ரிஷா ஷெட்டி.