ஐபிஎல் தொடரும்...ஷார்ஜா கிரிக்கெட் மைதானமும் !

ஐபிஎல் தொடரும்...ஷார்ஜா கிரிக்கெட் மைதானமும் !
ஐபிஎல் தொடரும்...ஷார்ஜா கிரிக்கெட் மைதானமும் !

ஐபிஎல் டி20யின் இன்றையப் போட்டியில் சிஎஸ்கே - பெங்களுர் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. முதல் வெற்றியை மும்பைக்கு எதிராக பெற்ற நம்பிக்கையுடன் சிஎஸ்கேவும், முதல் போட்டியில் ஏற்பட்ட படுதோல்விக்கு பதில் சொல்லும்விதமாக மும்பை அணியும் புகழ்பெற்ற ஷார்ஜா மைதானத்தில் களம் காண்கின்றன.

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் முதல் பாதி ஆட்டம் இந்தியாவில் நடைபெற்றது. பின்பு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இப்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2020 ஆம் ஆண்டு போலவே இம்முறையும் அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய் ஆகிய மூன்று மைதானங்களில் மட்டும் தொடரின் அனைத்து போட்டிகளும் நடைபெறவுள்ளன. இதனால் கிரிக்கெட் கணிப்பாளர்கள் பலரும் போட்டியின் போக்கு எப்படி இருக்கும் என்றும், மைதானங்களில் பங்கு என்ன என்றும் கணித்து வருகின்றனர். ஏனென்றால் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் அதில் மைதானத்தின் பங்கு குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

உதாரணத்திற்கு சுழற்பந்து வீச்சு நன்றாக எடுபடும் ஒரு மைதானத்தில் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு களமிறங்கினால் அந்த அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு குறைவுதான். அத்துடன் முதல் பேட்டிங்கிற்கு சாதகமான ஒரு மைதானத்தில், டாஸ் வென்ற ஒரு அணி 2வது பேட்டிங்கை தேர்வு செய்தால், பின்னர் எதிரணியின் ரன்களை சேஸிங் செய்வதில் சிரமம் ஏற்பட்டு விடும். இதனால் எதிரணிக்கு ஏற்றாற்போல அல்லாமல், மைதானத்திற்கு ஏற்றாற்போலவும் ஒரு அணி திட்டமிட்டு ஆட வேண்டியது அவசியமாகும்.

ஷார்ஜா ஆடுகளத்தை பொருத்தவரை சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. சர்வதேச அளவில் இந்த ஆடுகளத்தில் 8 போட்டிகளில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ஷென்வாரி மொத்தம் 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதேபோல முகமது நபி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் ஷார்ஜாவில் 10 போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 150 முதல் 160 ரன்கள் எடுத்தாலே போதுமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மிக முக்கியமாக டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங் செய்வதே உத்தமம் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு அமீரகத்தில் ஐ.பி.எல். நடந்த போது ஷார்ஜா மைதானத்தில் ரன்மழை பொழியப்பட்டது. பவுண்டரி தூரம் குறைவு, பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளமான இங்கு கடந்த சீசனில் 7 முறை 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது. அதே போல் இந்த முறையும் இங்கு ரன் விருந்தை எதிர்பார்க்கலாம். 2020 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற 12 ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 5 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 7 முறையும் வெற்றிப்பெற்றுள்ளது.

அதிகபட்டமாக டெல்லி அணி கொல்கத்தாவுக்கு எதிராக 228 ரன்களை விளாசியது. இரண்டாவது பேட்டிங் செய்த கொல்கத்தா 210 ரன்களை எடுத்ததுதான் அதிகபட்ச ஸ்கோர். இதே மைதானத்தில் குறைவான ரன்களை எடுத்த அணி சிஎஸ்கேவாக இருக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 114 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக பஞ்சாப் அணியின் மயாங்க் அகர்வால் 50 பந்துகளில் 106 ரன்களை விளாசியுள்ளார். வேகப்பந்துவீச்சில் மும்பையின் ட்ரெண்ட் பவுல்ட் 4 விக்கெட்டும், ஸ்பின்னர்களில் ராகுல் டெவாட்டியா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

சர்வதேச போட்டிகளில் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் அதிகபட்ச டி20 ஸ்கோரை ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை எடுத்தது. இதனை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எடுத்தது. அதேபோல அதிகபட்ச சேஸிங் 140 ரன்களையும் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் எடுத்துள்ளது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மழைக்கு வாய்ப்பில்லை, இன்றைய வானிலையின்படி வெப்பம் 33 டிகிரி செல்சியசாக பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com