“தடைகளை தகர்த்த தன்னம்பிக்கை பெண்மணி” – முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாள் இன்று

“தடைகளை தகர்த்த தன்னம்பிக்கை பெண்மணி” – முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாள் இன்று
“தடைகளை தகர்த்த தன்னம்பிக்கை பெண்மணி” – முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாள் இன்று

இந்தியாவிலேயே அதிகநாள் முதல்வராக இருந்த பெண் என்ற பெருமை பெற்று, தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதாவின் நினைவுதினம்(டிசம்பர் 5) இன்று…

அதிகளவில் ஆண்களே கோலோச்சும் அரசியல் அரங்கில், அத்திப்பூத்தாற்போல அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்கள் ஆளுமை செலுத்துகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டு அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியல் வரையிலும் தனது துணிச்சலான முடிவுகள் மற்றும் திறமையான நிர்வாகம் மூலமாக உற்றுநோக்கப்பட்டவர் ஜெ.ஜெயலலிதா.

மைசூரு மாகாணத்தில் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி பிறந்தார் ஜெயலலிதா, 2 வயதிலேயே தந்தையை இழந்த இவரை தாய் சந்தியாதான் தனியொருவராக வளர்த்தெடுத்தார். ஜெயலலிதாவின் தாய் சந்தியா திரைப்படங்களில் நடித்தார், அதன் வழியே இளம் வயதிலேயே இவரும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

1961 ஆம் ஆண்டில் ‘சிறிசைல மகாத்மி’ என்ற கன்னட திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமான அவர், 1964 ஆம் ஆண்டில் வெளியான ‘வெண்ணிற ஆடை’ படம் மூலமாக தமிழ்த்திரையுலகில் கால் பதித்தார். 1965 ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன், ஜெயலலிதாவை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் 127 படங்களில் நடித்தார், இதில் 28 படங்களில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார் அவர், எம்ஜிஆர் – ஜெயலலிதா காம்போ திரைப்படங்களுக்கு மக்களின் பேராதரவும் கிடைத்தது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் சிவாஜியுடனும் 18 படங்களில் ஜோடியாக நடித்திருந்தார் அவர். 1980 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ நதியை தேடிவந்த கடல்’ என்ற திரைப்படம்தான் ஜெயலலிதா நடித்த கடைசி படம்.

1977 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் முதல்வரான பிறகு அதிமுக கட்சியின் அபிமானியாக அறியப்பட்ட ஜெயலலிதா, 1982 ஆம் ஆண்டில் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து  சத்துணவு திட்ட பொறுப்பாளர், நட்சத்திர பேச்சாளர் போன்ற அறிமுகங்களின் மூலமாக தமிழகம் முழுவதும் தொடர் சுற்றுப்பயணங்கள் செய்து மக்களிடமும், அதிமுக தொண்டர்களின் மனதிலும் இடம்பிடித்தார். இதனைத்தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு அதிமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார், அவருக்கு நாடாளுமன்றத்தில் அண்ணா அவர்கள் அமர்ந்த இருக்கை ஒதுக்கப்பட்டது அப்போது பேசுபொருளானது, அந்த இருக்கைக்கு ஏற்ற வகையில் தனது நாடாளுமன்ற கன்னிப்பேச்சின் மூலமாக அரசியலில் தனது இருப்பை உறுதி செய்தார் ஜெயலலிதா, நாடாளுமன்றத்தில் இவரின் சிறப்பான ஆங்கில உரையை இந்திரா காந்தியே வியந்து பார்த்தார்.

1984 ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி ஆக தொடங்கிய ஜெயலலிதாவின் பயணம், அதன்பின்னர் எத்தனை தடைகளை சந்தித்தபோதும் மீண்டும், மீண்டும் போராடி அதனை வெற்றிப்பயணமாகவே மாற்றினார். எம்ஜிஆரின் இறுதிகாலங்களில் அதிமுக சீனியர்கள் மற்றும் ஜெயலலிதாவுக்கான மோதல் முற்றியிருந்தது, இதனால் எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு கட்சி ஜானகி அணி – ஜெ அணி என இரண்டாக பிரிந்தது. இந்த இரு அணிகளும் தனித்தனியாக 1989 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது, அந்த தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெ அணி 27 இடங்களில் வெற்றிபெற்றது, போடிநாயக்கனூர் தொகுதியில் வென்ற ஜெயலலிதா எதிர்கட்சி தலைவர் ஆனார். அதன்பின்னர் ஜெ – ஜானகி ஒன்றிணைந்ததால் ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுச்செயலாளராக மாறினார் ஜெயலலிதா.

ஒன்றிணைந்த அதிமுக, காங்கிரஸ் கூட்டணியுடன் 1991 ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றது. பர்கூர், காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயலலிதா தமிழகத்தின் 11வது முதல்வர் ஆனார். 1996 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிபெற்றது, அதன்பின்னர் 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் தமாகா, பாமக கூட்டணியுடன் ஆட்சியை பிடித்தார் ஜெயலலிதா. 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது, அதன்பின்னர் 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது. 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட்டணியே இல்லாமல் தமிழ்நாடு – புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களில் வென்று இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாகவும் மாறியது அதிமுக. பின்னர் 2016 இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றார் ஜெயலலிதா. பதவியேற்ற சில மாதங்களிலேயே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார்.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தொட்டில் குழந்தை திட்டம், அம்மா உணவகம், பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 % இட ஒதுக்கீடு, மகளிர் காவல் நிலையம், வீராணம் கூட்டுக்குடிநீர் திட்டம், மழைநீர் சேகரிப்பு திட்டம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, மாணவர்களுக்கு இலவச மடிக்கணிணி உள்ளிட்ட பல உதவிகள், பெண்களுக்கு தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பெண்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்தவர் இவர். சாதனை திட்டங்கள் மட்டுமின்றி காவிரி இறுதி தீர்ப்பு , முல்லை பெரியாறு சிக்கல் உள்ளிட்ட தமிழக வாழ்வாதார பிரச்னைகளையும் சட்ட ரீதியாக உறுதியுடன் அணுகி வெற்றி பெற்றவர். மத்திய அரசு கொண்டுவந்த மாநில உரிமைகளுக்கு எதிரான திட்டங்களை எந்த அச்சமும் இன்றி கடுமையாக எதிர்த்தவர் இவர், இதனால் இரும்பு பெண்மணியாக பலராலும் புகழப்பட்டவர் ஜெயலலிதா.

மொத்தமாக 5 ஆயிரத்து 539 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து, இந்தியாவிலேயே மிக அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் என்ற சாதனையை படைத்தவர் ஜெயலலிதா. தமிழ்நாடு அரசியலில் சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி.ஆருக்கு பிறகு பதவியில் இருக்கும்போதே உயிரிழந்த மூன்றாவது முதல்வர் ஜெயலலிதாதான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com