'சிகரெட் உண்டியல்' அப்படினா என்ன ? இளைஞர்களின் புது முயற்சி !
தூக்கி வீசப்படும் சிகரெட் துண்டுகளால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பினை தடுக்கும் வகையில் இளைஞர்கள் சிலர் வித்தியாசமான முயற்சியை தொடங்கியுள்ளனர். தாங்கள் சேகரிக்கும் சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி மூலம் பயனுள்ளதாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
புகைப்பது உடல் நலத்திற்கு தீங்கானது, புற்று நோயை ஏற்படுத்தி மனிதனை மரண படுக்கைக்கு கொண்டு செல்கிறது. அதேபோல, புகைத்த பிறகு தூக்கி வீசப்படும் சிகிரெட் துண்டுகளும் பலவிதமான சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்ப்படுத்தி வருகிறது. மண்ணில் புதையும் சிகரெட் துண்டுகளால் பூமி மாசுபடுவதுடன், சிகரெட் ஃபில்டரில் கலந்துள்ள பிளாஸ்டிக் நிலத்திற்கு தண்ணீர் செல்ல விடாமல் தடுக்கிறது. எத்தனையோ விழிப்புணர்வு ஏற்படுத்தியும், விற்பனை செய்யப்படும் சிகரெட் பாக்கெட்டில் எச்சரிக்கை விடுத்தும் கூட புகைப்பழக்கத்தை தொடர்பவர்களே அதிகம். புகைப்பதை தடுக்க முடியாவிட்டாலும், தூக்கி எரியப்படும் சிகிரெட் துண்டுகளால் மாசு ஏற்படுவதையாவது தடுக்கலாம் என்ற கோணத்தில் களமிறங்கியுள்ளனர் சேலத்தில் குப்பைக்காரன் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்.
இதற்காக பிரத்யேகமாக "சிகரெட் உண்டியல்" என்ற திட்டத்தை இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். தங்கள் முயற்சியின் மூலம் புகைப்பவர் மத்தியில் புதுவித விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக குப்பைக்காரன் குழுவினர் கூறுகின்றனர்.
இதனைதொடர்ந்து முதற்கட்டமாக தேநீர் கடைகளில் சிகரெட் உண்டியல்களை வைத்து சிகரெட் துண்டுகளை சேகரிப்பதும், கடைகளில் சேகரிக்கப்படும் சிகிரெட் துண்டுகள் ஒரு கிலோ நூறு ருபாய் விலை கொடுத்து பெற்று செல்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறு சேகரிக்கப்படும் சிகிரெட் துண்டுகளை மறுசுழற்சிக்கு கொண்டு சென்று அவற்றை பயனுள்ள உரமாக மாற்றவும் அதன் மூலம் ஏற்படும் மாசுபடுதலையும் தடுக்க முடியும் என்று கூறுகின்றனர் குப்பைக்காரன் குழுவினர்.
தகவல்கள் : மோகன்ராஜ்- செய்தியாளர்,சேலம்.