இதுதான் ரஜினி கூறும் மாற்றமோ: உறுப்பினர்கள் சேர்க்கையே டைப்பா இருக்கே!
ரஜினி மக்கள் மன்றத்திற்கு மதுரையில் விநோதமான முறையில் உறுப்பினர் சேர்க்கை நடத்தினர்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தனது ரசிகர்களுடன் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். புகைப்படம் எடுக்கும் இறுதி நாளில் ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர், “மீடியா என்னை விரட்டுவிரட்டுன்னு விரட்டினாங்க. நானும் சென்னையெல்லாம் சுத்திட்டேன். ஏன்னா, நாலஞ்சு வார்த்தை நான் பேசினாலே சர்ச்சையாகுது. இன்னும் பேசிட்டே இருந்தா இன்னும் சர்ச்சையாகிட்டே இருக்கும். அதனால ஊடகங்களை தவிர்த்தேன். தப்பா நினைக்க வேண்டாம்.
நான் முதல் நாள் பேசும்போது, நாலு வார்த்தை சொன்னேன். ஒருவேளை அரசியலுக்கு வரலாம்னு நான் சொன்னது இவ்வளவு பெரிய வாதமா ஆகும்னு நினைக்கல. வாத விவாதங்கள் இருக்கலாம், எதிர்ப்பு இருக்கலாம். எதிர்ப்பு இல்லாம வளரவே முடியாது. அரசியலுக்கு எதிர்ப்புதான் மூலதனம். ஆனால், சோஷியல் மீடியாவுல சிலர் திட்டி எழுதும்போது எனக்கு கஷ்டமா போயிடுது. ஏன் தமிழ்மக்கள் இப்படி கீழ்த்தரமா போயிடறாங்க வார்த்தைகளை பயன்படுத்தறதுல, அப்படின்னு வருத்தம். நான் தமிழனாங்கற கேள்வி வருது. எனக்கு இப்ப 67 வயது ஆகுது. 23 ஆண்டுதான் கர்நாடகத்துல இருந்தேன். மிச்ச 44 ஆண்டுகள் இங்க, உங்க கூடவே வளர்ந்தேன்.
கர்நாடகத்துல இருந்து ஒரு மராட்டியனாகவோ, கர்நாடகக்காரனாவோ வந்திருந்தா கூட எனக்கு பணத்தையும் புகழையும் அள்ளிக்கொடுத்து நீங்க. என்னை தமிழனாகவே ஆக்கிட்டாங்க. ஸோ, இப்ப நான் பச்சைத்தமிழன்” என்று கூறியிருந்தார். அப்போதே பல அரசியல் நோக்கர்கள் ரஜினி அரசியலுக்கு அடித்தளம் இடுகிறார் என்று கூறினர். ஆனால் எதிர்ப்பாளர்கள் சிலர், இது அவரது படங்களை ஓட வைக்க வேண்டும் என்ற யுக்தி எனவும், அதற்காக ரசிகர்களை பலிகடாவாக மாற்றுகிறார் என்றும் கூறினர்.
அப்போதைய பேச்சின் போது ரஜினி, “எனக்கு கடமை இருக்கு. தொழில் இருக்கு. நீங்களும் ஊருக்கு போங்க, கடமையை செய்யுங்க. போர்னு வரும்போது பார்த்துப்போம். ஆண்டவன் இருப்பான்” என்று கூறியிருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பல விவாதங்களையும் ஏற்படுத்தியது. அத்துடன் அவர் ஆண்டவன் என குறிப்பிட்டு கூறுவதால் அவர் வலதுசாரி கொள்கையில் தீவிரமாக இருப்பார் என்றும், அவரை பாஜக பின்னால் இருந்து இயக்கும் என்றும் கூறப்பட்டது. அதற்கேற்றவாறு ரஜினியும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும்போது, தாமரை மீது பாபா குறியீடு இருக்கும் சுவர் ஓவியத்திற்கு முன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அதே ராகவேந்திரா மண்டபத்தில், ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தார். இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளில் பேசிய ரஜினி, “நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டமன்ற தேர்தலில் தனிகட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன். நான் பணத்துக்கோ, புகழுக்கோ, அரசியலுக்கு வரவில்லை. நான் கனவுல கூட நினைக்காத அளவுக்கு அதை ஆயிரம் மடங்கு தமிழக மக்கள் கொடுத்திருக்கீங்க. பதவி ஆசை இருந்திருந்தா 1996லேயே வந்திருப்பேன். 45 வயசிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை. 68 வயசுல வருமா? வேறு எதற்கு அரசியலுக்கு வருகிறேன்? அரசியல் ரொம்ப கெட்டுப் போச்சுங்க. ஜனநாயகம் சீர்கெட்டுப் போச்சு. அரசியல் மாற்றத்துக்கு நேரம் வந்தாச்சு. சிஸ்டத்தை மாற்றணும். உண்மையான, வெளிப்படையான ஜாதி மதத்துக்கு அப்பாற்றப்பட்ட ஆன்மிக அரசியலை கொண்டுவரணும். அதுதான் என் நோக்கம்” என்று கூறியிருந்தார்.
இந்த பேச்சில் ஆன்மிக அரசியல் என்பது பெரும் விவாதப்பொருளாக மாறியது. அத்துடன் சமூக வலைத்தளங்கள், அரசியல் பேச்சுகள் என அனைத்திலும் இந்த ஆன்மிக அரசியல் விமர்சிக்கப்பட்டது.
அரசியலுக்கு அடிக்கல் நாட்டிய ரஜினி அத்துடன் தனது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் அரசியல் முதல் பணியையும் வழங்கினார். தனது மன்றத்தின் கீழ் ரசிகர்கள், மக்கள், இளைஞர்களை இணைக்க வேண்டும் என்பது தான் அந்தப் பணி.
இதற்காக ரஜினி மக்கள் மன்றம் என்ற இணையதளம் தொடங்கப்பட்டு, அதன்மூலம் இதுவரையிலும் ரசிகர்கள் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த இணையதளம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே 3 லட்சம் பேர் இணையதளத்தின் மூலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. கிட்டத்தட்ட 50,000 பதிவு செய்யப்படாத ரஜினி ரசிகர் மன்றங்கள் இருப்பதாகவும், அவர்களை இணைக்கும் தளமாக இந்த இணையதளம் இருக்கும் என்றும் மன்றத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதுதவிர ஆண்ட்ராய்டு ஆப் மூலமும் ரசிகர்களை இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதற்காக வீடியோ ஒன்றை வெளியிட்ட ரஜினி, அதில் “உண்மை, உழைப்பு, உயர்வு என்ற தாரக மந்திரத்தின் மூலம் தமிழ்நாட்டில் நல்லாட்சியை நடத்துவோம். பதிவு செய்யாத ரஜினி ரசிகர்களுக்காகவும், ரசிகர் மன்றங்களை இணைக்கவும், தமிழக மக்களை ஒருங்கிணைக்கவும் இணையதளத்தை உருவாக்கியுள்ளேன். இதன் மூலம் நீங்கள் ஒரு உறுப்பினராக இணைத்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த ஒன்றுபட்டு உழைப்போம். வாழ்க தமிழக மக்கள்!” என்று கூறியிருந்தார். இதற்கிடையே ரஜினியின் ரசிகர் மன்ற லோகோவில் பாம்பு இடம்பெற்று, பின்னர் நீக்கப்பட்டது என சில சர்ச்சைகளும் ஏற்பட்டன. இதுபோன்ற சம்பவங்கள், ரஜினிக்கு பின்னணியில் பாஜக உள்ளது என்பதை சில அரசியல் விமர்சகர்கள் நிரூபிக்க முயன்றதையும், ஆனால் தான் அப்படி இல்லை என ரஜினி நிரூபிக்க முயன்றதையுமே வெளிக்காட்டியது.
இவ்வாறாக தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்கள், ரஜினி மக்கள் மன்றமாக பெயர் மாற்றப்பட்டு அமைப்பாக உருவெடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வார்டு வாரியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் ரஜினிகாந்த் மக்கள் மன்ற தலைவர் கோல்டன் சரவணன் தலைமையில், அப்பகுதி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. மற்ற பகுதியைப்போல் இன்றி, இப்பகுதியில் முற்றிலும் மாறுபட்ட வகையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினிகாந்த் வேடமணிந்தவர்கள் அந்த பகுதியிலுள்ள மக்களை சந்தித்து, ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழக மக்களுக்கு எது போன்ற நன்மைகள் கிடைக்கும் என்ற விவரங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக்கூறுகின்றனர். அத்துடன் பெண்களையும் சந்தித்து விளக்களிக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை துவங்குவதற்கு முன் பிள்ளையார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
உறுப்பினர் சேர்க்கைக்கு எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினி வேடமணிந்து வந்தவர்களை, அனைவரும் வேடிக்கை பார்த்தனர். சிலர் செல்போன்களில் புகைப்படம் எடுத்துகொண்டனர். திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினிகாந்த் போல் வந்தவர்களுக்கு வரவேற்பு அளித்தனர். இளைஞர்கள் கைகொடுத்து வரவேற்றனர். இதுபோன்ற வித்தியாசமான அணுகுமுறை அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்றது. இதுமட்டுமின்றி திருப்பரங்குன்றம் தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என ரஜினியின் ஜாதகத்தை வைத்து சிறப்பு வழிபாடு செய்தது, தண்டோரா போட்டு உறுப்பினர் சேர்க்கை நடத்தியது என அனைத்து புதுமையான வகையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. ரஜினிகாந்த் சிஸ்டத்தை மாற்ற வேண்டும், அரசியலில் மாற்றம் வேண்டும் என்று கூறி வரும் நிலையில், அவரது மன்றத்தினர் உறுப்பினர் சேர்க்கையிலே புது மாற்றத்தை கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த மாற்றத்தை மக்கள் வாக்களிக்கும்போது ஏற்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.