வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற பிரதமர் மோடி - விவசாயிகள் நலனா? தேர்தல் வியூகமா?

வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற பிரதமர் மோடி - விவசாயிகள் நலனா? தேர்தல் வியூகமா?
வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற பிரதமர் மோடி - விவசாயிகள் நலனா? தேர்தல் வியூகமா?

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் ஓராண்டு காலமாக கடுமையாக போராடிவரும் சூழலில், இச்சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இது விவசாயிகள் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவா அல்லது தேர்தல் வியூகமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரதமர் மோடியின் வேளாண் சட்ட வாபஸ் அறிவிப்பு குறித்து புதிய தலைமுறையின் நேர்படப்பேசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருந்தினர்களுடைய கருத்துகளின் தொகுப்பு…

தேர்தல் வியூகமாக இருக்கலாம்:

இது தொடர்பாக பேசிய வலதுசாரி ஆதரவாளர் ரமேஷ் சேதுராமன், “ இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடியது. இதனை பாஜக ஆளாத பல மாநிலங்கள் மற்றும் பெரும்பாலான விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்காக மற்ற விவசாயிகளின் நலனை காவு கொடுப்பது சரியல்ல. இந்த சட்டங்களை ஆதரிக்கும் மாநிலங்களில் மட்டும் இந்த சட்டத்தை அமல் படுத்தியிருக்கலாம். அதன் மூலம் மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தியிருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக வாபஸ் வாங்கியதன் காரணமாக, இது பாஜக அரசுக்கு பின்னடைவு என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டலாம். மற்றொரு பக்கம் இது பஞ்சாப், உத்தரப்பிரதேச தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு எடுத்த முடிவு என்றும் குற்றம் சாட்டலாம். அதில் உண்மையும் இருக்கிறது. பொய்ப்பிரச்சாரம் காரணமாக தன்னெழுச்சியாக தொடங்கிய போராட்டத்தை  எதிர்க்கட்சிகள் கையிலெடுத்துக்கொண்டன. இந்த சட்டத்தில் விவசாயிகளுக்கு எழுந்த சந்தேகங்களை சரியாக மத்திய அரசு விளக்காதது தவறு. ஒருவேளை இந்த சட்டத்தில் சில தவறுகள் இருந்தால் அதனை சரிசெய்திருக்கலாம். மத்திய அரசின் இந்த வாபஸ் முடிவு காரணமாக பாஜகவுக்கு பஞ்சாபிலும், உத்தரப்பிரதேச தேர்தலிலும் நன்மை கிடைக்கலாம்” என தெரிவித்தார்.

உ.பி, பஞ்சாப் தேர்தல் தோல்வி பயத்தினால்தான் வாபஸ் முடிவு:

இது தொடர்பாக பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “ மத்திய அரசின் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்கிறார்கள், ஆனால் விவசாயிகள் தரப்பில் சொல்வதை கேட்டு அதனை பிரதமர் அலுவலகத்தில் கொண்டு சேர்ப்பதும், பிரதமர் அலுவலகத்தில் சொல்வதை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் வேலையும் மட்டுமே நடந்தது.  மக்களுக்கும், விவசாயிகளுக்கும்  புரிதல் இல்லாமல் இந்த போராட்டம் நடக்கவில்லை. அவர்கள் தெளிவாக எல்லா விஷயத்தையும் தெரிந்துகொண்டே போராடினார்கள். அதற்காக 700 பேர் உயிரிழந்தார்கள். போராடிய விவசாயிகளுக்கு கடுமையான நெருக்கடி, வழக்குகள், மிரட்டல்கள் இருந்தன. அதையும் தாண்டியே இத்தனை ஆயிரம் விவசாயிகள் போராடினார்கள்.  தற்போதும் இந்த சட்டத்தை வாபஸ் பெற்றதற்கு காரணம் அரசியல் காரணங்கள்தான்.  உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் தேர்தலில் படுதோல்வியடைந்துவிடுவொம் என்ற பயத்தினால்தான் இந்த முடிவை தற்போது மத்திய அரசு எடுத்துள்ளது. பிரதமர் வந்து இந்த சட்டத்தை வாபஸ் வாங்குவோம் என அறிவிக்கிறார். ஆனால் நாடாளுமன்றத்தில் இதற்கான நடைமுறைகள் செய்யப்ப்பட்டால்தான் நம்புவோம் என்று விவசாயிகள் சொல்வதன் மூலம் அவர்மீது நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.

இந்த போராட்டத்தின் வெற்றிக்கு காரணம் எதிர்க்கட்சிகள் இல்லை. விவசாயிகளின் உறுதிப்பாடுதான். விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், எதிர்க்கட்சிகள் தனியாக இதுபோல போராடியிருக்கலாம். அதனை செய்யவில்லை. எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக ஓரளவு சில நகர்வுகளை செய்தனர் அவ்வளவுதான். இந்த வேளாண் சட்ட வாபஸ் காரணமாக வரும் உ.பி தேர்தலில் பாஜகவுக்கு ஆதாயம் கிடைக்கலாம். ஆனாலும் உயிரிழந்த 700 பேருக்கு இழப்பீடு, வழக்குகள் வாபஸ் போன்றவற்றை பாஜக செய்யவில்லை என்றால் அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக போகலாம்  ” என தெரிவித்தார்

எங்களுக்கு எந்த அரசியல் கட்சி மீதும் கோபம் இல்லை:

இதுபற்றி பேசிய பஞ்சாப் விவசாயி கோல்டன் சிங், “ இந்த சட்டம் பற்றி புரியவைக்க முயற்சி செய்ததாக பிரதமர் சொல்கிறார். ஆனால் அவரின் இடத்திலிருந்து 30 கி.மீ தொலைவில்தான் நாங்கள் ஓராண்டாக போராடுகிறோம். எங்களை வந்து சந்திக்கவில்லை. இந்த போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்தார்கள். அவர்களுக்கு ஒரு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை. லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் 5 பேர் உயிரிழந்தனர். அதற்காக ஒரு இரங்கலும் தெரிவிக்கவில்லை. இது ஒரு அடாவடித்தனம், ஈகோ.  எனவே அவர் எப்போது எங்களிடம் புரியவைக்க முயற்சி செய்தார் எனத் தெரியவில்லை. பஞ்சாபில் முதலில் மூன்று மாதம் போராடினோம். பின்னர் டெல்லியில் போராடினோம். அப்போதெல்லாம் முறையாக பேசியிருக்கலாம். மத்திய அரசுக்கும் எங்களுக்கும் இடையில் 11 முறை பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எங்களை அலைக்கழிக்கத்தான் முயற்சி செய்தார்கள். ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை. இந்த வேளாண் சட்டங்களால் எந்த விவசாயிக்கும் நன்மை இல்லை. அப்படி இருக்குமெனில் அவர்கள் வெளிப்படையாக பேசட்டும்.

எங்களுக்கு பாஜக உட்பட எந்த கட்சிமீதும் கோபம் இல்லை. இந்த போராட்டம் என்பது இனிவரும் அனைவருக்குமான முன்னுதாரணமாக இருக்கும். இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சிகளும் தீவிரமாக கலந்திருந்தால், அதில் அரசியல் சாயம் பூசப்பட்டு தற்போதும்கூட இந்த தீர்வு எங்களுக்கு கிடைக்காமல் போயிருக்கலாம்” எனத் தெரிவித்தார்

விவசாயிகள் காத்திருக்கிறார்கள்:

இது தொடர்பாக பேசும் பத்திரிகையாளர் பரத், “700 பேரின் இழப்பு, விவசாயிகளின் வேதனை காரணமாகவே இந்த வாபஸ் அறிவிப்பு சட்டமாக வரட்டும் என்று விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றம் கூடுவதற்கு இன்னும் 10 நாட்கள்தானே இருக்கிறது, காத்திருந்து முழு வெற்றியுடன் திரும்பலாம் என்று விவசாயிகள் நினைக்கிறார்கள். 10 நாட்களில் அனைத்து கட்சிகளும் கூடியிருக்கும் நாடாளுமன்ற அவையில் இதற்கான சட்டரீதியான செயல்முறையை பிரதமர் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.

பிரதமரை விவசாயிகள் நம்பவில்லை:

இது தொடர்பாக பேசிய காங்கிரஸை சேர்ந்த சசிகாந்த் செந்தில், “பிரதமர் தனது ஆட்சி காலம் தொடங்கியதிலிருந்து எத்தனை பல்டிகளை அடித்துக்கொண்டிருக்கிறார் என்பதை நாடே பார்த்துக்கொண்டிருக்கிறார்.  இப்போதும்கூட அவர் இந்த வேளாண் சட்ட வாபஸ் அறிவிப்பை விவசாயிகளிடம் சொல்லவில்லை, கேமரா முன்பாகத்தான் பேசுகிறார். விவசாயிகளிடம், மக்களிடம், பத்திரிகையாளர்களிடம் எந்த சிறு உரையாடலும் செய்யாத பிரதமரை எப்படி விவசாயிகள் நம்புவார்கள். ஒரு வருடமாக 700 உயிர்கள் போனபோதும்கூட அசையாத பிரதமர், இப்போது பேசுவதற்கு காரணம் உத்தரப்பிரதேச தேர்தல். விவசாயிகள் பிரச்னையில் பிரதமர் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்பதே உண்மை. தற்போது விவசாயிகள் போராட்டத்தால் பிரச்சாரம் கூட செய்யமுடியாத நிலையில்தான் மேற்கு உ.பி மற்றும் பஞ்சாபில் பாஜகவின் நிலை இருந்தது. அதற்காகவே இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com