'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் ?

'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் ?
'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் ?

ஒரு காலத்தில் இந்தியாவில்தான் அதிகளவிலான புலிகள் காடுகளில் வசித்து வந்தது. ஆனால், நம் முன்னோர்களும் ஆங்கிலேயர்களும் வேட்டை என்ற பெயரில் புலிகளை கொன்று தங்கள் அரண்மனைகளில் அலங்காரப் பொருள்களாக பதப்படுத்தி வைக்க தொடங்கினர். மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த பின்பும், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பும் புலிகளை வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. ஆனாலும், மறைமுகமாக புலியின் தோலுக்காகவும் பற்களுக்காகவும் கள்ளத்தனமான வேட்டைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இதனையடுத்து புலிகள் வேட்டையை தடுக்க சட்டம் மேலும் கடுமையாக்கப்பட்டது. பின்பு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தொடங்கப்பட்டு, 2006 இல் நாடு முழுவதும் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி 2006 இல் நாடு முழுவதும் 1411 புலிகள் மட்டுமே இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து புலிகளின் எண்ணிக்கையை உயர்த்த அந்தந்த மாநில வனத்துறையும், தன்னார்வ அமைப்புகளும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. புலிகள் காப்பகம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு புலிகள் எண்ணிக்கை வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 2010 கணக்கெடுப்பின்படி புலிகளின் எண்ணிக்கை 1706 ஆக உயர்ந்தது. இதன் எண்ணிக்கை 2014 இல் 2226 எனவும், இறுதியாக அறிவிக்கப்படாத கணக்கெடுப்பின்படி 2016 இல் 3890 புலிகள் நாடு முழுவதும் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. வன உயிரின ஆர்வலர்களிடம் புலிகளின் எண்ணிக்கை உயர்வு மகிழ்ச்சியை கொடுத்தாலும், நாட்டில் அவ்வப்போது புலிகளின் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது.

ஆம் புலிகளின் உயிருக்கு வனத்துறையே சில மாநிலங்களில் காவு வாங்குகிறது. அதற்கு பெயர்தான் "என்கவுண்ட்டர்". ஆம் குற்றவாளிகளை போலீஸ் சில நேரங்களில் என்கவுண்ட்டர் செய்து கொல்லும். அதேபோலதான் "மேன் ஈட்டராக" மாறும் புலியை வனத்துறையினர் என்கவுண்ட்டர் செய்து கொல்வார்கள். தமிழகத்தில் 2014, 2015, 2016 ஆம் ஆண்டில் மேன் ஈட்டராக அறியப்பட்ட புலிகள் நீலகிரி மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டது. இந்த மேன் ஈட்டர் புலிகளால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது இத்தகைய நடவடிக்கையில் இறங்குகிறது வனத்துறை. இப்போது மகராஷ்டிராவில் மேன் ஈட்டராக கருதப்படும் ஆவ்னி என்ற பெண் புலியையும், அதன் இரண்டு குட்டிகளையும் என்கவுண்ட்டர் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மகராஷ்டிரா மாநிலம் யவாட்மால் மாவட்டத்தில் இருக்கும் வனப்பகுதி பந்தர்காவாடா. இங்கு இருக்கும் மிகவும் அழகும் பிரம்மாண்ட தோற்றமும் கொண்டது வனத்துறையினரால் ஆவ்னி என பெயரிடப்பட்டுள்ள பெண் புலி. இந்தப் பெண் புலி அண்மையில் மேன் ஈட்டராக மாறி, 13 பேரை கொன்று தின்றதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்தப் புலியை கண்டவுடன் சுட்டுத்தள்ள வனத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆவ்னியுடன் அதன் இரண்டு குட்டிகளும் இருப்பதால் அதையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. தாய் புலி மேன் ஈட்டராக மாறியதையடுத்து, குட்டியும் மேன் ஈட்டராக இருக்கும் வாய்ப்பே அதிகம் என்பதால் இத்தகைய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் வனத்துறையினரின் இந்த முடிவுக்கு அம்மாநில வன உயிரின ஆர்வலர்களும், பொது மக்களும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் இறங்கிய சமூக ஆர்வலர்களும், வன உயிரின ஆர்வலர்களும் #SaveAvni #LetAvniLive என்ற ஹாஷ்டாக்குகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் ஒரு பக்கம் இருக்க, ஆவ்னி புலியை கொல்ல வேட்டை நாய்கள், யானைகளுடன் காடுகளில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஆவ்னி புலியையும், அதன் குட்டிகளையும் காப்பாற்ற இணையதளத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இதில் இப்போது கிட்டத்தட்ட 64 ஆயிரம் பேர் ஆவ்னிக்கு ஆதரவாக கையெழுத்திட்டு வருகின்றனர். இதனை குடியரரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் மகராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திப ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு அனுப்ப இருக்கின்றனர்.

"மேன் ஈட்டர் புலிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றுவதுதான் வனத்துறையினரின் வேலை, அதனை அவர்கள் சரியாக செய்யவில்லை. முதலில் ஆவ்னி மேன் ஈட்டர் என்பதனை எதை வைத்து தீர்மானித்தார்கள் ? அப்படியே அது மேன் ஈட்டராக இருந்தாலும் குட்டியுடன் அதனை கொல்வது ஈவு இறக்கமற்ற செயல். ஆவ்னியை தொந்தரவு செய்யாமல் கொல்லாமல் அதனை அப்படியே குட்டிகளுடன் வாழ விட வேண்டும்" என கொந்தளிக்கிறார் வன உயிரின ஆர்வலர். என்கவுண்ட்டரில் இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டியும் ?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com