மோடி பக்கோடாவுக்கு தமிழகத்தில் மவுசு

மோடி பக்கோடாவுக்கு தமிழகத்தில் மவுசு
மோடி பக்கோடாவுக்கு தமிழகத்தில் மவுசு

கடந்த ஒரு வாரமாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொல் ‘பக்கோடா’தான் என்றால் நம்ப முடிகிறதா?.. நம்பித்தான் ஆக வேண்டும்.

உண்மையில் மோடி கூட யோசித்திருப்பாரோ.. ஏண்டா இந்த பக்கோடாவை பற்றி சொல்லி மாட்டிகிட்டோம் என்று. அந்த அளவிற்கு பக்கோடா விவாதம் நிற்காமல் சென்று கொண்டே இருக்கிறது. அப்படி என்னதான் மோடி சொன்னாரு..? 'நாட்டில் வேலை வாய்ப்பு பெருகவில்லையே' என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள்.. அதற்கு பிரதமர் மோடி, 'சாலையோரத்தில் கடை அமைத்து, ஒருவர் பக்கோடா விற்று தினமும் 200 ரூபாய் வீட்டு எடுத்து செல்வது வேலை வாய்ப்பு இல்லையா?’என்று சொன்னாரு. அவ்வளவு தாங்க.. பட்டாசைபோல பத்திக்கிச்சு பக்கோடா.

மோடியின் பக்கோடா பேச்சை முதலில் வழிமொழிந்தவர் யார் தெரியுமா?..வேறு யாரு? அமித்ஷாதான். அமித்ஷா பக்கோடா பேச்சை நாடாளுமன்றத்திற்குள் கொண்டு சென்றார். ஒரு பக்கம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பக்கோடா அரசியலை தீவிரமாக கையிலெடுத்து மோடியை வைரல்  விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளை விடவும் மோடியின் பக்கோடா பேச்சால் இளைஞர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிக்கிறார்களோ.. என்னவோ... அந்த அளவிற்கு சமூக வலைதளங்களில் பக்கோடாவை வைத்து மீம்ஸ்களை தெறிக்கவிடுகிறார்கள். #பக்கோடா என்ற ஹேஷ்டேக்கில் வசனங்களை தீயாய் பகிர்ந்து தள்ளினர். 

இந்தியாவின் தேசிய உணவு பக்கோடா என்றறிக.. டிஜிட்டல் இந்தியா ஆக்குறோம்னு சொல்லிட்டு இப்ப பக்கோடா விக்க சொல்றாங்களே!!.. ஆக, இனிமேல் பள்ளியில் மாணவர்களுக்கு பக்கோடா தயாரிப்பது குறித்து பாடம் நடத்தப்படும்.. என டையலாக்குகள் போட்டு சூடாக பக்கோடாவை வறுத்தெடுத்து கொண்டிருக்கிறார்கள். 

சமூக வலைதளங்களோடு விட்டார்களாக, பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம், ஒரு பக்கோடா போராட்டத்தை நடத்தி விடுகிறார்கள் மாணவ அமைப்புகள். இதனையெல்லாம் தாண்டி மேட்டூரில் ஒரு பேனர் வைக்கப்பட்டது பக்கோடா விமர்சனத்தின் உச்சம் என்றே சொல்லலாம். “பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு படித்த மாணவர்களை பக்கோடா விற்று பிழைக்கலாம் என்று வாழ வழிகாட்டிய பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்க பல்லாண்டு” என்று அந்த பேனரில் எழுதி மெர்சலாக்கிவிட்டார்கள். 

மாணவர்கள், இளைஞர்கள் ஒருபுறம் தெறிக்கவிட அரசியல்வாதிகள் சும்மா இருப்பார்களா? அவர்கள் பங்கிற்கு சாலைகளில் பக்கோடா விற்கும் போராட்டத்தை நாடு முழுவதும் நடத்தி வருகிறார்கள். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் அற்புதமாக பக்கோடா சுட்டு காட்டினார்கள்.

ஒரு வாரமா டீ கடை முதல் நாடாளுமன்றம் வரை ஒரே பக்கோடா வாசம்.. அதன் விளைவு. கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக பக்கோடா வந்து நிற்கிறது. சும்மாவா அதுவும் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலங்கள் முதல் 5 இடங்களில் இருக்கிறது. மோடி, பாஜக என்றாலே தமிழர்களுக்கு ‘பிரியம்’ அதிகம் போல. அதான், எல்லாரையும் விட அதிகம் தேடியிருக்கிறார்கள். அதேபோல் கர்நாடக உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களும் ஒரு கை பார்த்துள்ளது.

இதில் மற்றொரு விஷயம் பக்கோடாவை வைத்து எப்படியெல்லாம் தேடி இருக்கிறார்கள் என்பதுதான். பக்கோடா பற்றி அமித்ஷா, பக்கோடா அமித்ஷா, பக்கோடா அரசியல், பக்கோடா யோஜனா, மோடி பக்கோடா இண்டெர்வியூவ் இப்படி பல்வேறு வார்த்தைகளில் தேடல் படலம் தொடர்கிறது.

இதோடு பக்கோடா பற்றி சில சமாச்சாரங்களையும் பார்ப்போமா.. பக்கோடா, பகோரா, பஃக்குரா, பாஜியா, பாஜி, பனாக்கோ என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இந்தப் பண்டம், தமிழகத்தில் பெரும்பாலும் பக்கோடா என்றே அழைக்கப்படுகிறது. இது சமஸ்கிருதத்திலிருந்து கொண்டுவரப்பட்ட வார்த்தை என்றும் நம்பப்படுகிறது. பகோடா என்பது தெலுங்கில் பகோரா என்று அழைக்கப்படுகிறது. இது ஹைதராபாத் அருகாமை இடங்களில் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. மகராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தின் ஒருசில பகுதிகளில் இது பாஜி என்றும் அழைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com