நகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

நகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
நகர்ப்புற பெண்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன்: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயால் நகரங்களில் வாழும் பெண்கள் தான் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என ஆய்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. இது பற்றிய விரிவான தொகுப்பைப் பார்க்கலாம்.

சென்னையில் வாழும் பெண்கள் மற்ற இந்திய நகரங்களில் உள்ள பெண்களை விட அதிக உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாவதாக சமீபத்திய தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியிருக்கிறது. இதேபோல சென்னையில் வசிக்கும் பெண்கள் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள பெண்களை விட அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில், ஐந்தில் இருவர் தங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையைவிடக் கூடுதல் எடையுடன் இருந்ததாக தெரியவந்திருக்கிறது. குறிப்பாக 15-இல் இருந்து 49 வயதிற்குள்ளாக இருக்கும் பெண்களில் 41.9 % பெண்கள் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற பெண்களில் 46.1% பேரும், கிராமப்புற பெண்களில் 35.4% பேரும் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். நீரிழிவு நோயால் நகரப் பெண்களில் 13.2% பேரும், கிராமங்களில் 9.4% பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். உயர் ரத்த அழுத்தத்தால் நகரங்களில் 6.5% பெண்களும் கிராமங்களில் 5.9% பெண்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

நியூட்ரியண்ட்ஸ் எனும் சர்வதேச மருத்துவ இதழ் தெற்காசியாவில் நடத்திய ஆய்வில் 1999 முதல் 2016 வரையிலான 17 ஆண்டுகளில், உடல் பருமன் பிரச்னை இரு மடங்காக அதிகரித்துள்ளது என கூறியுள்ளது. உடல் பருமன் பாதிப்புக்கு ஆளான பெண்கள், மன அழுத்தத்திற்கும் ஆளாகி அவர்கள் செயல்திறனை பாதிப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

வாழ்க்கைமுறை சார்ந்த காரணங்களால் தான் கிராமத்தை விட நகரப்பெண்கள் அதிகம் உடல் பருமன் பிரச்னைகளால் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. வாழ்க்கைமுறை மாற்றம், மரபணு தொடர்ச்சி, நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் திருமணம் உள்ளிட்டடை இப்பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எப்போதும் சுறுசுறுப்பாக இருத்தல் , குறைவான கலோரி கொண்ட உணவை உட்கொள்ளுதல் , குறைந்த நேரம் உட்காருதல், உடற்பயிற்சி போன்றவை உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் பிரச்னையால் பாதிக்கப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த ஓர் ஒப்பீடு:

கொரோனா போன்ற கொடிய நோய்த்தொற்று பரவல் ஒருபுறம் இருந்தாலும், நீண்ட காலமாக நம்மிடையே இருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் பாதிப்பை ஏற்படுத்தும் உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற அளவுகள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. இது தொடர்பாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், 'The State of food security and nutrion in the world 2019' என்ற ஆய்வறிக்கையின்படி, உலக அளவில் உடல் பருமனால் 672.3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் 2012-ம் ஆண்டு 24.1 மில்லியனாக இருந்த உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டு 32.8 மில்லியனாக உயர்ந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. மேலும் ஒரு ஆய்வில், இந்தியாவில் உடல்பருமன் விகிதம் 40.3சதவிகிதமாக இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்கள், பெண்கள் என பார்க்கும்போது, பெண்கள் தான் அதிக அளவில் பாதிக்கபடபடுள்ளனர். அதாவது 45.81 சதவீதம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்புறம், கிராமபுறம் என ஒப்பீடுகையில், நகர்புறத்தில் 44.17 சதவிகிதம் பேரும், கிராம புறத்தில் 36.08% பேரும் பாதிக்கபட்டுள்ளனர்.

இது தொடர்பாக பெண்கள் சிறப்பு மருத்துவர் ஆஷா தேவி பேசுகையில், ''இதற்கு முக்கியமான காரணம் வாழ்க்கை முறை மாற்றங்கள். நகரங்களில் பணிபுரியும் பெண்கள் கம்ப்யூட்டர் தொடர்பான வேலைகளில் அதிகம் ஈடுபடுகின்றனர். 8-12 மணி நேரம் அமர்ந்து வேலை பார்க்கும் பெண்களுக்கு இடையில் பெரிய அளவில் உடல்ரீதியான எந்த வேலைகளும் இருப்பதில்லை. அதேபோல உணவு முறை பழக்கங்களும் காரணமாக அமைகின்றன. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் உணவுகளில் முறையாக கவனம் செலுத்துவதில்லை. நேரம் தவறி உண்கின்றனர். குடும்பத்தையும் பார்த்துகொண்டு வேலைக்கும் செல்கிறார்கள் என்பதால் அவரது உடல்நிலையில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. தூக்கமின்மையும் முக்கியமான காரணம்'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com