ஊட்டி மலை ரயிலுக்கு புது என்ஜின்! திருச்சியில் தயாரான என்ஜினுக்கு இவ்வளவு சிறப்பம்சங்களா?

ஊட்டி மலை ரயிலுக்கு புது என்ஜின்! திருச்சியில் தயாரான என்ஜினுக்கு இவ்வளவு சிறப்பம்சங்களா?
ஊட்டி மலை ரயிலுக்கு புது என்ஜின்! திருச்சியில் தயாரான என்ஜினுக்கு இவ்வளவு சிறப்பம்சங்களா?

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் டீசலை எரிபொருளாக பயன்படுத்தி, முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய மலை ரயில் என்ஜினின் சோதனை ஓட்டம் வெற்றியடைந்தது.

மலை ரயில் என்ஜினால் சுற்றுச்சூழல் பாதிப்பு:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி ஊட்டிக்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டிருந்ததால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார் இருந்து வந்தது. இதன் காரணமாக நிலக்கரிக்கு பதில், பர்னஸ் ஆயிலை எரிபொருளாகக் கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக மலை ரயில் இயக்கப்பட்டது. நாளடைவில் பர்னஸ் ஆயில் எரிபொருள் பயன்படுத்தும்போது அதிகளவில் புகை வந்ததால், சுற்றுச்சூழல் தொடர்ந்து பாதிக்கப்பட்டது.

நிரந்தர தீர்வு காண களமிறங்கிய பொன்மலை ரயில் பணிமனை:

இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் திருச்சி பொன்மலை ரயில் பணிமனையில் ஊட்டி மலை ரயிலுக்கு டீசலை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் என்ஜினைத் தயாரிக்கும் பணி துவங்கியது. ஊட்டி மலை ரயிலின் நூற்றாண்டு பாரம்பரியமிக்க, அதன் பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே இந்த புதிய என்ஜின் தயாரிக்கப்பட்டது. 9 கோடியே 30 லட்சம் மதிப்பில் 7 மாதத்தில் புதிய மலை ரயில் என்ஜின் தயாரிக்கும் பணி நிறைவடைந்து. கடந்த 5 ஆம் தேதி திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ட்ரெய்லர் லாரி மூலம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது.

புதிய மலை ரயில் என்ஜினின் சோதனை ஓட்டம் வெற்றி!

அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் உள்ள பணிமனையில் பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் முதற் கட்டமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் ரயில் நிலையம் வரை இயக்கி நடத்தப்பட்ட சோதனை ஓட்டம் வெற்றியடைந்தது. மலை ரயிலுக்கு மகுடம் சூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த சிறப்பு என்ஜின், இந்திய ரயில்வே பொறியாளர்களின் திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அப்படி என்ன ஸ்பெஷல் இந்த புதிய ரயில் என்ஜினில்..?

  • இந்த புதிதாக வடிவமைக்கப்பட்ட என்ஜின் மூலம் அதிக புகை வெளியேறாமல், அதிக சப்தம் எழும்பாமல், சுற்றுச்சூழல் கெடாமல் பாதுகாக்க முடியும்.

  • நீராவி என்ஜினின் எரிபொருளாக அதிவேக டீசலை இருப்பு வைத்துக்கொள்ள 1,600 லிட்டர் கொள்ளவுள்ள டீசல் டேங்க், தண்ணீர் நிரப்பி வைக்க 4,500 லிட்டர் கொள்ளவுள்ள 2 தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

  • துவக்கத்தில் 1400 லிட்டர் டீசல் செலவாகும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த புதிய என்ஜின் மூலம் 20 முதல் 25 சதவீதம் வரை எரி பொருள் மிச்சமாகும் என இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  • வேகத்தை பொருத்த வரை மலைப்பாதைக்கென நிர்ணயிக்கப்பட்ட 15 கிலோ மீட்டர் வேகம் மட்டுமே இயக்கப்படும் என்றும் இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- ஜான்சன், ச.முத்துகிருஷ்ணன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com