இந்திய தங்க தாகத்தை தணித்த நீரஜ் சோப்ரா: ஒலிம்பிக்கில் புதிய வரலாறு எழுதிய பெருமித தருணம்

இந்திய தங்க தாகத்தை தணித்த நீரஜ் சோப்ரா: ஒலிம்பிக்கில் புதிய வரலாறு எழுதிய பெருமித தருணம்
இந்திய தங்க தாகத்தை தணித்த நீரஜ் சோப்ரா: ஒலிம்பிக்கில் புதிய வரலாறு எழுதிய பெருமித தருணம்

ஒலிம்பிக் வரலாற்றில், சுதந்திர இந்தியாவில் இந்தியாவுக்கு தடகள பிரிவில் முதல் பதக்கத்தை வென்று தந்துள்ளார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா... அதுவும் தங்கப்பதக்கமாக. இந்த அற்புத தருணங்களின் தொகுப்பு இது...

ஒலிம்பிக் வரலாற்றில் தடகளப் பிரிவில் சுதந்திரத்துக்குப் பின் இந்தியா பதக்கம் வென்றதே இல்லை. அதை எதிர்பார்த்தப்படியே மாற்றி எழுதியுள்ளார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. முதன் முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அவர் ஈட்டி எறிதல் பிரிவில் தகுதி சுற்று போட்டியில் முதல் வாய்ப்பிலேயே, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தகுதிசுற்றில் யாரும் எதிர்பாராத வகையில், தனது முதல் வாய்ப்பிலேயே 86.65 மீட்டர் தூரம் எறிந்து இறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்றார். இறுதிப் போட்டியில் முதல் வாய்ப்பிலே 87.03 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார். 2-வது வாய்ப்பில் ஈட்டியை எறிந்துவிட்டு திரும்பி பார்க்காமலே கை உயர்த்தி கொண்டாடினார் நீரஜ் சோப்ரா. அதில், அவர் 87.58 மீட்டர் தூரம் எறிந்திருந்தார்.

தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி வீரர் வெட்டர் காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். நீரஜ் சோப்ராவுக்கு செக் குடியரசு வீரர்கள் இருவர் சவால் விடுத்தனர். எனினும் அவர்களால், நீரஜ் சோப்ராவின் 87 புள்ளி ஐந்து எட்டு மீட்டர் தூரத்தை தாண்ட முடியவில்லை. இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில், சுதந்திர இந்தியாவில் இந்தியாவுக்கு தடகள பிரிவில் முதல் பதக்கத்தை வென்று தந்துள்ளார் நீரஜ் சோப்ரா. அதுவும் தங்கப்பதக்கமாக.

திருத்தி எழுதிய புதிய சரித்திரம்:

தேசத்தின் தங்க தாகத்தை தணித்த நீரஜ் சோப்ரா சுதந்திர இந்தியாவில், ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் இந்தியா பதக்கம் வென்றதே இல்லை. இதை திருத்தி புதிய சரித்திரம் எழுதியுள்ளார் ஹரியானாவைச் சேர்ந்த 23 வயது ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா.

ராணுவ சுபேதாரான நீரஜ் சோப்ரா, ஏற்கெனவே ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் போட்டி, ஆசிய சாம்பின்ஷிப் போட்டி, தெற்காசியப் போட்டி, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றில் தலா ஒரு தங்கம் வென்று சாதித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக பயிற்சியாள ஊ ஹோன் (UWE HOHN) மேற்பார்வையில் தீவிர பயிற்சி மேற்கொண்டார். ரேம்போ ஸ்டைலுடன் இருக்கும் அவர் ஓடிச் சென்று ஈட்டியை வீசியெறியும் அழகே தனி.

சமீபத்தில் ஃபின்லாந்தில் நடைபெற்ற KUORTNE விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா, வெண்கலப்பதக்கம் வென்றார். அந்தப் போட்டியில் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 86.79 மீட்டர் தூரம் ஈட்டியை வீசியெறிந்தார்.

1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில், கொல்கத்தாவில் பிறந்த பிரிட்டீஸ் வம்சாவளி நார்மன் பிரிட்சர்ட், இந்தியா சார்பில் பங்கேற்று 200 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் தடை ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதற்கு பிறகு டோக்கியோ ஒலிம்பிக் வரை இந்தியர்கள் யாரும் பதக்கம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக பதக்கம் வெல்லாத நிலையில், புதிய சரித்திரம் எழுதியுள்ள நீரஜ் சோப்ராவை, தேசமே வாழ்த்துகிறது.

வாழ்த்தும் இந்தியா:

டோக்யோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளம் வீரரான நீரஜ் சோப்ரா பல தடைகளை தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் என்றும், அவரது சாதனை இந்திய இளைஞர்களுக்கு ஊக்கம் தருவதாக இருக்கும் என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது பாராட்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடியும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். நீரஜ் சோப்ராவின் சாதனை என்றும் இந்தியர்களின் மனதில் நிலைத்திருக்கும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஒலிம்பிக் களத்தில் ஈடு இணையற்ற வகையில் தன் திறமையை நீரஜ் வெளிப்படுத்தினார் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து கூறியுள்ளனர். நீரஜ் சோப்ரா உண்மையான தேசிய ஹீரோ என முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். நீரஜ் சோப்ரா தனது சிறப்பான ஆட்டத்தால் 100 கோடி இந்தியர்களின் இதயத்தை வசப்படுத்தியுள்ளார் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

டெண்டுல்கர், சேவாக், கும்ப்ளே, கம்பீர் என ஏராளமான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களும் நீரஜ் சோப்ராவின் சாதனையை பாராட்டியுள்ளனர்.

உணர்ச்சிப் பெருக்குடன் ராணுவம்:

சுபேதார் நீரஜ் சோப்ராவின் சரித்திர சாதனையை இந்திய ராணுவம் உணர்ச்சி பெருக்குடன் கொண்டாடி வருகிறது. ராணுவத்தில் சுபேதாராக உள்ள நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக்கில் பங்கேற்க டோக்கியோ சென்றது முதலே அவரின் போட்டியை எதிர்ப்பாத்து காத்திருந்தனர் சக ராணுவ வீரர்கள். இந்தநிலையில் நீரஜ் தங்கம் வென்று சாதனை படைத்ததை ஒட்டுமொத்த இந்திய ராணுவமும் கொண்டாடி வருகிறது. ஹரியானாவில் உள்ள நீரஜின் குடும்பத்தினர் உறவினர்கள் உள்ளிட்டோரும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். ஹரியானா அமைச்சர் அனில் விஜ் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தங்கம் வென்ற நீரஜ்க்கு ஹரியானா மாநில அரசு 6 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. நீரஜின் சாதனையால் இந்தியா ஒளிர்வதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முன்னாள் இந்நாள் விளையாட்டு வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டவிட்டரில் இந்திய அளவில் நீரஜ் ட்ரெண்டிக்கில் இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com