திண்ணை வீடு : ஞாபகம் வருதே - பாகம் 2

திண்ணை வீடு : ஞாபகம் வருதே - பாகம் 2
திண்ணை வீடு : ஞாபகம் வருதே - பாகம் 2

பெருசுகளின் கதை பேசும் களமாகவும்… சிறுசுகளின் விளையாட்டு தளமாகவும் இருந்தது திண்ணை.அந்த காலத்தில் பொழுதுபோக்கு என்று பெரிதாக ஒன்றும் இருக்காது. அதிகபட்சம் ரேடியோ அவ்வப்போது டூரிங் டாக்கிஸ் அவ்வளவு தான். அதனால் தானோ என்னவோ தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் திண்ணை பொழுதைபோக்கும் இடமாகவே மாறியது.

தெருவில் போவோர் வருவோரிடம் கதை அளப்பது… பாக்கை இடித்து கொண்டே பழசை பேசுவது… பேரன் பேத்திகளின் பெருமை பாடுவது என அவர்களுக்கு ஒரு நாள் பொழுது போவதே தெரியாது. யாருடா அது ஊருக்கு புதுசா… ? உன் பேத்திக்கு எப்ப கல்யாணம்… ? எப்ப காதுகுத்தி...? அவ மக கர்ப்பமாவா இருக்குது?! இப்படி கேள்விகனைகள் வந்து விழும் அந்த வழியே செல்லும் போது… ஊரில் என்ன நடந்தாலும் அதை திண்ணையில் இருந்தே சேகரிக்கும் திறமைப்பெற்றவர்கள் நம்ம ஊர் பெருசுகள்.

சில சமயங்களில்  களைப்பு ஏற்பாட்டால் அவர்கள் கண் அயர்வதும்  திண்ணையில் தான் . வீட்டில் சண்டை என்றால்  வீதிக்கே கேட்கும் படி   திண்ணையில் இருந்தே பாட்டிகள்   திட்டுவதை நாம் பார்த்திருப்போம்.  அரசியல் முதல் அந்த நாள் ஞாபகம் வரை தாத்தாக்கள் ஒன்று கூடிபேசுவதும் திண்ணையில் தான் .பரீட்சைக்கு சத்தம் போட்டு பாடம் படிக்கும் குழந்தைகளுக்கும்   டீயுஷன் எடுக்கும் அக்காகளுக்கும் திண்ணைகள் தான் பாட சாலைகள்.  சிலர் வீட்டு திண்ணைகளில் எப்போதும் செம்பு நிறைய தண்ணீர் வைத்திருப்பார்கள் .வெளியில் சென்று வந்தவர்கள் அந்த தண்ணீரை  காலில் ஊற்றி கொண்ட பிறகு தான் உள்ளே போவார்கள். 

மோரை சிலுப்புவது, திருவையில் மாவு அரைப்பது ,சல்லடையில் சளிப்பது  என  சகல விஷயங்களும் திண்ணையில் நடக்கும் .
 காற்றுக்காக திண்ணையில் அமர்ந்து கொண்டு ரேடியோ கேட்கும் வழக்கம் பலருக்கு உண்டு. அதிலும் பழைய பாடல்களையோ நாடகங்களையோ கேட்டு கொண்டே திண்ணையில் படுப்பது என்றால் சிலருக்கு அலாதி பிரியம் . 

மழை காலங்களில் துவைத்த துணிகளை காய வைப்பதும் திண்ணைகள் தான் .

இப்போது தான் கார் பார்க்கிங் போர்டடிகோ எல்லாம். அப்போதெல்லாம் வாகனங்களை நிறுத்த தனியாக இடம் இருக்காது. ஏனெனில் அந்த வசதிகளையெல்லாம் திண்ணைகளும் மரத்தடிகளுமே தந்தன .அப்பாக்களின் டிவிஎஸ் 50 வண்டிகளை பெரும்பாலும் திண்ணைகள் தான் சுமக்கும் . கூவி விற்கும் வியாபாரிகளை கூப்பிடும் போது தலையில் இருக்கும் பாரத்தை அப்படியே இறக்கி வைத்து விட்டு அவர்கள் விற்பனை செய்வதற்கும் விலை பேசுவதற்கும் ஏற்ற இடம் இந்த திண்ணைகள். 

இதே திண்ணைகள் சில நேரங்களில் பஞ்சாயத்து கூட்டத்திற்கும் கூட பயன்பட்டிருக்கின்றன . எட்டுப்பட்டி நாட்டாமைகளுக்கு மரத்தடி என்றால் நம்ம ஊர் பெருசுகளுக்கு திண்ணைகள் தான் வழக்காடு மன்றங்கள் .  முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு கூட சிலர் வீட்டு திண்ணைகள் இளைப்பாற அனுமதியளிக்கும்.

ஆனால்…!

இன்று இத்தகைய திண்ணை உள்ள வீடுகளை பார்ப்பது அத்தனை அரிதாகிவிட்டது. ஓட்டு வீடுகள் எப்போது மாடி வீடாக மாற தொடங்கியதோ..!   அப்போதே நாம் திண்ணைகளை திரும்பி கூட பார்ப்பதில்லை.ஓட்டு வீடை மாடி வீடாக மாற்றுவதற்கு முதலில் நாம் இடிப்பது கூட திண்ணையை தான் .  திண்ணை தந்த சுகங்களை… மாடிவீட்டு பால்கனியாலும் அந்த வீட்டின் போர்டிகோவாலும் கொடுக்க முடியுமா…?!

ஞாபகம் வருதே தொடரும்.....

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com