"வேண்டும் வேண்டும்..விசாரணை வேண்டும்!" - தமிழில் முழக்கம் எழுப்பும் பிற மாநில எம்.பி.க்கள்

"வேண்டும் வேண்டும்..விசாரணை வேண்டும்!" - தமிழில் முழக்கம் எழுப்பும் பிற மாநில எம்.பி.க்கள்
"வேண்டும் வேண்டும்..விசாரணை வேண்டும்!" - தமிழில் முழக்கம் எழுப்பும் பிற மாநில எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தில் போராட்டங்கள் நடக்கும்போது பொதுவாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கோஷங்கள் எழுப்பப்படுவது வாடிக்கை. ஆனால், சமீப நாட்களாக தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கோஷங்கள் இரண்டு அவைகளிலும் எதிரொலிக்கின்றன.

தமிழ்நாடு தொடர்பான விவகாரங்கள் காரணமாக அவைகள் முடங்கவில்லை என்றாலும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் முழக்கம் எழுப்புவது தினசரி நடந்து வருகிறது. பிற மாநிலங்களை சேர்ந்த தமிழ் தெரியாத உறுப்பினர்கள் கூட "வேண்டும் வேண்டும்... விசாரணை வேண்டும்" என பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் முழக்கமிடும் சுவாரஸ்யம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இதற்கு காரணம் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வரும் நிலையில், அதை பல்வேறு மொழிகளில் நடத்த முடிவு செய்திருப்பதே. எனவேதான் பஞ்சாபி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலே இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்புகிறார்கள்.

இது சாத்தியமானது எப்படி?

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் எதிர்க்கட்சி குழுவிலே உள்ளதால், அவர்கள் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தமிழில் முழக்கம் எழுப்ப கற்பித்துள்ளனர். அதேபோலவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் முழக்கம் எழுப்ப கற்றுக் கொண்டுள்ளனர்.

இதுதான் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நாடாளுமன்றத்தில் முழக்கங்கள் எதிரொலிக்க காரணம் என காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்தார்.

மாநிலங்களவையிலும் தமிழில் முழக்கங்கள் தினசரி எழுப்பப்படுவதாக திமுகவின் திருச்சி சிவா சுட்டிக்காட்டினார். செவ்வாய்க்கிழமை மதியம் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டபோது தமிழ் முழக்கங்கள் உரக்க ஒலித்துக் கொண்டிருந்தன.

பதாகைகளை ஏந்தி தினசரி அவைத் தலைவர்களின் இருக்கைகளை முற்றுகையிடும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை காலை எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்த பிறகு கூடுதல் உற்சாகத்துடன் காணப்பட்டனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டது மற்றும் ராகுல் காந்தியின் அழைப்பின் அடிப்படையில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்பில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட ஓரிரு காட்சிகளை தவிர பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டது நாடாளுமன்ற முடக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகள் பல்வேறு முயற்சிகளை செய்தபோதிலும், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் பதினோராவது நாளாக முடங்கின. மக்களவையில் ஒரு மசோதா மற்றும் மாநிலங்களவையில் ஒரு மசோதா என குரல் வாக்கெடுப்பு மூலம் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டாலும், எதிர்க்கட்சிகளின் கை ஓங்கி இருப்பது தெளிவாக பிரதிபலித்தது.

ஏற்கெனவே டிராக்டர் ஓட்டி போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, சைக்கிள் ஓட்டி போராட்டம் நடத்தியபோது பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருடன் சைக்கிள் பயண போராட்டத்தில் கலந்துகொண்டனர். மம்தா பானர்ஜியின் டெல்லி பயணம் மற்றும் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் பொகசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என சொல்லியிருப்பது ஆகியவை எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு வலு சேர்த்துள்ளன.

எதிர்க்கட்சிகள் தங்களுடைய ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி உள்ள நிலையில், மத்திய அரசுக்கு நாடாளுமன்றத்திலேயே பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற ஒரு சில கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. முழக்கங்களால் அமளி ஏற்படும் நிலையிலும், இந்தக் கட்சிகளின் பிரதிநிதிகள் மசோதாக்கள் மீதான விவாதங்களில் கலந்துகொண்டு அரசுக்கு ஆதரவாக பேசி வருவது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த மசோதாக்களை நிறைவேற்ற உதவிகரமாக அமைந்துள்ளது.

- கணபதி சுப்பிரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com