“அடிச்சா தப்பு.. குணமா வாய்ல சொல்லணும்” - வைரலான குழந்தையின் வீடியோ..!

“அடிச்சா தப்பு.. குணமா வாய்ல சொல்லணும்” - வைரலான குழந்தையின் வீடியோ..!
“அடிச்சா தப்பு.. குணமா வாய்ல சொல்லணும்” - வைரலான குழந்தையின் வீடியோ..!

இன்றைய இளைஞர்கள்தான் நாளைய இந்தியாவின் தூண்கள். இன்றைய குழந்தைகள்தான் நாளைய இளைஞர்கள்.. அப்படிப்பட்ட குழந்தைகள் நல்ல குணத்துடனும், சமூக பொறுப்புடனும் வளர்க்கப்படுதல் அவசியம். அதில் பெற்றோர்களின் பங்கு அளப்பரியது. ஆனால் இன்றைய பெற்றோர்கள் அப்படியிருக்கிறார்களா..? என்றால் கேள்விக்குறிதான். நகரத்து பெண்கள் பொருளாதார சூழ்நிலை காரணமாக குழந்தை பிறந்த 6 மாதத்திலேயே வேலைக்கு கிளம்பி விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகள் 6 மாதத்திற்கு பின் தாய்ப்பால் இல்லாமலேயே வளர்க்கப்படுகின்றன. மார்பு பிடித்து குழந்தை பால் குடிக்கும்போது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமில்ல.. தாய்க்கும் சேய்க்கும் இடையேயான பிணைப்பும் அதிகரிக்கிறது. அந்தப் பிணைப்பு அவர்கள் இறுதி காலம் வரை தொடர்கிறது. ஆனால் பெரும்பாலான இன்றைய தாய்மார்கள் இதனை தவறவிட்டுவிடுகிறார்கள்.

தன் மகன்/ மகள் ஒரு டாக்டராகவோ/ கலெக்டராகவோ/ ஒரு பைலட்டாகவோ ஆக வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்களே தவிர அவர்களை நல்ல ஒரு மனிதராக/ நல்ல சிந்தனையுள்ளவராக வளர்க்க வேண்டும் எனப் பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்க மறந்துவிடுகிறார்கள். குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்க வேண்டும். பல மொழியில் அவர்கள் புலமை பெற்றிருக்க வேண்டும். படிப்பை சார்ந்த மற்ற டான்ஸ்/ பாட்டு என எதுவானாலும் தனது மகனோ/ மகளோ முதலிடத்திலேயே இருக்க வேண்டும் என்ற ஆசைகளோடு குழந்தைகளை பந்தைய குதிரைகளாக வளர்க்கின்றனர். அவர்களின் விருப்பு, வெறுப்புகள் எதுவும் தெரியாமலேயே தங்களால் முடியாததை குழந்தைகள் மூலம் சாதிக்க நாள் பார்த்து வளர்க்கின்றனர் பெற்றோர்கள்.

இதனால் பெரும்பாலான குழந்தைகள் தங்களது மனக் குமுறலை பெற்றோர்களிடம் கூட சொல்ல முடியாமல் தவிப்பது உண்டு. உலகமே பெற்றோர்கள் தான் நம்பிக் கொண்டிருக்கும் குழந்தைகளும் பெற்றோர்கள் பேச்சை அப்படியே கேட்டு சிறுவயதில் நடக்கின்றனர். சிறுதவறு செய்தாலும் கூட பெற்றோர்கள் அதற்கு கடுமையான தண்டனை கொடுத்து விடுகின்றனர். இதனால் பெற்றோர்களை பார்த்தாலே பயம், வெறுப்பு.. உண்டாகி விடுகிறது. நாளடைவில் அன்பில்லாமலும் குழந்தைகள் சென்றுவிடுகின்றனர். ஆனால் இன்றைய குழந்தைகள் பெற்றோர்களுக்கே அறிவுரை வழங்குகின்றனர்.

சமீபத்தில் குழந்தை ஒன்று தனது அம்மாவுக்கு அறிவுரை வழங்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதில்

தாய்: சேட்டை பண்றது தப்பா..? தப்பில்லையா..?
குழந்தை: தப்புத்தான்.. அதற்கு என்ன சொல்லணும்..?
தாய்: அதுக்குத்தான் அடிக்கிறது.. புரிஞ்சதா..?
குழந்தை: அடிச்சா தப்பு.
தாய்: என்ன..?
குழந்தை: மெதுவாக வாய்ல சொல்லணும். திட்டாம.. அடிக்காம வாய்ல சொல்லணும்.
தாய்: அதுக்கு நீ சேட்டை பண்ணாம இருக்கணும்..
குழந்தை: சேட்டை பண்ணாலும் வாய்ல குணமா சொல்லணும்.
தாய்.. இப்படி எதுக்கு நீ அழுதுகிட்டு இருக்கிற..?
குழந்தை: அடிச்சா.. இப்படி அழுகாம என்ன செய்வாங்க..? நீயே சொல்லு..
தாய்: சேட்டை பண்ணா அடிக்காம என்ன பண்ணுவாங்க.. நீயே சொல்லு..
குழந்தை: குணமா வாய்ல சொல்லணும்.

குழந்தைகள் இப்போதெல்லாம் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். பெற்றோர்கள் தான் வயது வந்த பின்பும் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த வீடியோ பதிவு..

குழந்தையின் மழலை பேச்சை ரசிக்கும்படி அந்த வீடியோ இருந்தாலும் அதில் உள்ளது ஆழமான கருத்து. என்னை உடல் அளவில் காயப்படுத்தாதீர்கள்.. எடுத்துச் சொல்லுங்கள். நாங்கள் புரிந்து கொள்வோம் என நெத்தியடியாய் சொல்லியிருக்கிறது குழந்தை. குழந்தைகள் வைத்துள்ள ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ இது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com