\
இந்தியாவின் சிட்டுக்குருவி மனிதர்

இந்தியாவின் சிட்டுக்குருவி மனிதர்

இந்தியாவின் சிட்டுக்குருவி மனிதர்
Published on

சிட்டுக்குருவி இனத்தின் பாதுகாப்புக்காக தொடர்ந்து உழைத்து வரும் நாசிக்கைச் சேர்ந்த முகமது திலாவர், இந்தியாவின் சிட்டுக்குருவி மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.

கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த திலாவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக சிட்டுக்குருவிகள் பாதுகாப்புக்கான முயற்சிகளைத் தொடங்கினார். அதற்காக நேச்சர் பாரெவர் சொசைட்டி எனும் அமைப்பைத் திலாவர் தொடங்கினார். அந்த அமைப்பு பிரான்ஸைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வுக்காக ஒரு நாளை ஒதுக்க வேண்டும் என்று முதன்முறையாகக் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, உலக சிட்டுக்குருவிகள் தினம், கடந்த 2010ம் ஆண்டு முதல், உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சிட்டுக்குருவிகளுக்காக உலகம் முழுவதும் 52,000த்துக்கும் மேற்பட்ட உணவிடங்கள் இவரால் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக திவால்கருக்கு கின்னஸ் உலக சாதனை அமைப்பு, அங்கீகாரம் அளித்துள்ளது. அதேபோல், இவரது சாதனைகளை லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பும் அங்கீகரித்துள்ளது.

சிட்டுக்குருவிகள் தினம் ஏன்?

நகரமயமாதலால் பாதிக்கப்பட்டுள்ள சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பறவைகளைக் காக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவம்

உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் பறவையாக ஒரு காலத்தில் இருந்த சிட்டுக்குருவிகள் இனம், கடந்த 25 ஆண்டுகளில் கணிசமாகக் குறையத் தொடங்கியது. இதனாலேயே, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், சிட்டுக்குருவிகளை அழிந்துவரும் கவனிக்கப்படாத பறவை என்று பட்டியலிட்டுள்ளது. நகர்ப்புறங்களின் கொசு ஒழிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் சிட்டுக்குருவிகள், செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு, உணவு, நீர் கிடைக்காதது, உரிய வசிப்பிடம் இல்லாதது போன்ற காரணங்களால் வேகமாக அழிந்து வருகின்றன. நவீனகால கட்டிடங்களில் சிட்டுக்குருவி வசிப்பதற்காக இடம் இல்லாதது, அந்த இனம் அழிய, மிகப்பெரிய காரணமாக அமைந்துவிடுகிறது. புலியினால் காட்டுக்கு எந்தளவுக்கு நன்மை ஏற்படுகிறதோ, அதே அளவு நன்மை சிட்டுக்குருவிகளால் நகர்ப்புறங்களுக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் சுற்றுப்புற ஆர்வலர்கள்.

விருதுகள்

சிட்டுக்குருவிகளின் பாதுகாப்புக்காக, பல்வேறு முயற்சிகளை எடுத்துவருபவர்களைக் கவுரவிக்கும் விதத்தில், கடந்த 2011ம் ஆண்டு முதன்முதலாக குஜராத்தின் அகமதாபாத் நகரில் விருதுகள் வழங்கப்பட்டது. அரசின் உதவியும், அங்கீகாரமும் இல்லாமல் சிட்டுக்குருவிகளின் பாதுகாப்புக்கான முயற்சிகள் எடுத்துவருபவர்கள், இதன் மூலம் அங்கீகரிக்கப்படுகிறார்கள். டெல்லி அரசின் மாநில பறவையாகச் சிட்டுக்குருவிகள் கடந்த 2012ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com