கடந்த ஐந்து மாதங்களாக தமிழக அரசியலை புரட்டிப்போடும் முக்கிய திருப்பங்கள் பெரும்பாலானவை நள்ளிரவிலேயே அரங்கேறி வருகின்றன. அப்படிப்பட்ட இரவு நேர திருப்பங்களை திரும்பி பார்ப்போம்...
* முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி இரவு 10.15 மணிக்கு திடீர் உடல்நலக்குறைவால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இதுதான் அண்மைக்கால அரசியல் சூழலுக்கு வித்திட்ட தொடக்கப்புள்ளியாக இருந்தது.
* 75 நாட்கள் சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார். மாலை 4 மணி அளவில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரின் மரண செய்தி குறித்து வதந்திகள் பரவின. ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது இரவு 12.30 மணிக்கு தான்.
* ஜெயலலிதா காலமான நேரத்தில் இறுதி அஞ்சலிக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போதே நள்ளிரவு கடந்து 1.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது.
* டிசம்பர் 31-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்ற நிலையில் அதிமுக சட்டமன்றத் குழு தலைவராக பிப்ரவரி 5-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய தினமே முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். பிப்ரவரி 7-ஆம்தேதி இரவு 9 மணி அளவில் மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் தியானம் செய்த 45 நிமிடங்கள், இன்னொரு திருப்பத்தை ஏற்படுத்தியது. கட்டாயப்படுத்தி ராஜினாமா பெறப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.
*அன்றைய தினம் நள்ளிரவில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆவேசமாக பேசி, ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.
* இதையடுத்து பல திருப்பங்கள் நடந்தேற, ஆர்கே நகர் இடைத்தேர்தல் நெருங்கிய நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோரின. இந்தச்சூழலில் மார்ச் 22-ஆம் தேதி இரவு 11 மணி அளவில் இரட்டை இலைச்சின்னம் முடக்கப்படுவதாக அறிவித்தது தேர்தல் ஆணையம்.
* இரட்டை இலைச்சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில், அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் தினகரனுக்கு கடந்த 19-ஆம் தேதி இரவு 10 40 மணிக்கு டெல்லி போலீசார் சம்மன் அளித்தனர்.
*டெல்லியில் 4 நாட்கள் விசாரணை நடந்த நிலையில், ஏப்ரல் 25-ஆம்தேதி இரவு 11 மணி அளவில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார் தினகரன்.
* இந்த நிகழ்வுகள் ஒருபுறம் எனில் அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு பேச்சுவார்த்தையும் 25-ஆம் தேதி நள்ளிரவே நடந்துள்ளது. மொத்தத்தில் செப்டம்பர் 22-ஆம் தேதியின் இரவுக்குப் பிறகு பல்வேறு திருப்பங்களும் இரவு நேரத்திலேயே நடந்தேறியிருக்கின்றன.