’சோனியா, ராகுல், ப்ரியங்கா’ இந்த மூவரில் ஒருவர் தலைவராக வேண்டும் - குமரி ஆனந்தன் பேட்டி !

’சோனியா, ராகுல், ப்ரியங்கா’ இந்த மூவரில் ஒருவர் தலைவராக வேண்டும் - குமரி ஆனந்தன் பேட்டி !

’சோனியா, ராகுல், ப்ரியங்கா’ இந்த மூவரில் ஒருவர் தலைவராக வேண்டும் - குமரி ஆனந்தன் பேட்டி !
Published on

சோனியா காந்தியின் ’இடைக்கால’ காங்கிரஸ் தலைவர் பொறுப்பு முடிவடைந்ததையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்? என்பதில் சர்ச்சை வெடித்திருக்கிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் குமரி ஆனந்தனிடம் பேசினோம்,

காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக யார் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

         ”இப்போதும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் என்ற முறையிலும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் என்ற முறையிலும் எங்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை சோனியா காந்திதான் ஏற்கவேண்டும். இல்லையென்றால் ராகுல் காந்தியிடம் முழுப் பொறுப்பையும் கொடுத்துவிட வேண்டும்.

அப்படியென்றால், கட்சியிலுள்ள மற்றத் தலைவர்களுக்கு தலைவருக்கான தலைமைப் பண்பு இல்லை என்று நினைக்கிறீர்களா?

இப்போதுள்ள சூழலில் கட்சியின் தலைவராக சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இவர்கள் மூவரில் யார் வேண்டுமென்றாலும் வரவேண்டும் என்பதே எனது எண்ணம். அதேசமயத்தில், மற்றத் தலைவர்களுக்கும் தலைமைப் பண்பு இருக்கிறது. ஆனால், நேரு குடும்பத்தினரிடம் தலைமைப்பண்பு நிச்சயமாக இருக்கிறது என்று தெரிந்ததற்குப் பிறகு அவரா? இவரா என்று ஏன் பார்க்கவேண்டும்? மூவருமே திறமையானவர்கள். தியாக பரம்பரையில் இருந்து வந்தவர்கள். அதனால், நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் காங்கிரஸ் தலைவராக வேண்டும்.

ஆனால், பாஜக குடும்ப அரசியல் என்று காங்கிரஸை குற்றம் சாட்டுகிறதே?

வெறும் நேரு குடும்பம் என்று சுருக்கிவிட முடியாது. நேரு குடும்பம் இந்திய தேசியக் குடும்பம். சுதந்திரம் பெறுவதற்கு முன்பே தனது ஆனந்தபவன் என்ற பெரிய வீட்டை நாட்டுக்குக் கொடுத்தவர்கள். அப்படிப்பட்ட பரம்பரையில் வந்தவர்களை குடும்ப அரசியல் என்று சொல்ல முடியாது. வழிவழியாக தியாகத்தையும் நாட்டுப் பற்றையும் முழு மூச்சாக கொண்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்த, இம்மூவரில் ஒருவரை கட்சியின் தலைவராக  பயன்படுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். இது அவர்களுக்கு கொடுக்கின்ற பதவி அல்ல. நம்மை நாமே திருத்திகொள்வதற்கும் வெற்றிகரமாக கட்சியை வழிநடத்திச் செல்வதற்கும் செய்யவேண்டிய கடமை.

மேலும், மோதிலால் நேரு இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டார். அவருடைய மகன் ஜவகர்லால் நேருவும் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டார். அவருடைய மகள் இந்திரா காந்தியும் பாடுபட்டார். அப்போதெல்லாம் ஒரே குடும்பம்தான் சுதந்திரத்திற்காக பாடுபடவேண்டுமா? என்று யாரும் கேட்கவில்லை. இப்போது மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? நேரு குடும்பத்தினரின் தியாகத்தாலும் கோடிக்கணக்கானவர்களின் வியர்வையாலும் கிடைத்த சுதந்திரம் இது. அதனால், நேரு குடும்பம்தான் எந்த நேரத்திலும் தலைமையை ஏற்க தகுதி படைத்தது.

தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை மீது பாஜக ஊழல் குற்றச் சாட்டை சாட்டியிருக்கிறதே?

தன்னை பற்றியக் குற்றச்சாட்டை பிறரிடம் சொல்வதற்கு முயல்கிறார்கள். அவ்வளவுதான்.

  • வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com