தமிழகத்தை மூன்றாக பிரிக்கும் கோரிக்கை எழுவது ஏன்? - ஒரு விரிவான பார்வை

தமிழகத்தை மூன்றாக பிரிக்கும் கோரிக்கை எழுவது ஏன்? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தை மூன்றாக பிரிக்கும் கோரிக்கை எழுவது ஏன்? - ஒரு விரிவான பார்வை

தமிழகத்தை மூன்றாக பிரிக்கும் கோரிக்கை என்பது தற்போது அரசியல் தளத்தில் அனலை கிளப்பியிருக்கிறது. இந்த கோரிக்கை சாத்தியமா, எந்த நோக்கத்திற்காக இந்த விவாதம் உருவானது என்று விரிவாக பார்ப்போம்.

நிர்வாக வசதிக்காக தமிழகத்தை மூன்றாக பிரிக்கலாம் என்ற பாமக நிறுவனர் ராமதாஸின் கோரிக்கை பல மட்டங்களிலும் விவாதப்பொருளாகியிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் மூன்று மாநிலங்கள் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டன, பீகாரிலிருந்து ஜார்கண்டும், உத்தரபிரதேசத்திலிருந்து உத்தராகண்டும், ஆந்திராவிலிருந்து தெலங்கானாவும் உருவாக்கப்பட்டன. ஒரு மாநிலம் பிரிக்கப்பட்டு, மற்றொரு மாநிலம் உருவாக்கப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதல் தேவை.

தமிழகத்தில் பாமகவை தவிர எந்த கட்சியும் மாநில பிரிப்பு கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை. ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்ற பெரிய கட்சிகளான திமுக, அதிமுக போன்ற கட்சிகளும் இக்கோரிக்கையை ஏற்பதில்லை. அதனால் இந்த கோரிக்கை என்பது பாமக தனது வாக்குவங்கியை அதிகரிக்கும் யுக்திதானே தவிர, இது மக்கள் கோரிக்கையாக மாற வாய்ப்பேயில்லை. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இதனை ஆதரிக்காத காரணத்தால் சட்டமன்றத்திலும் மாநில பிரிப்பு கோரிக்கை நிறைவேற வாய்ப்பே இல்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இது தொடர்பாக பேசும் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் “தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்கலாம் என்ற பாமக தலைவர் மருத்துவர் இராமதாஸின் கருத்து தமிழர் தாயகத்தைக் கூறுபோடுவதுடன், முற்றிலும் தமிழினத்திற்கும், தமிழர் உரிமைக்கும் எதிரானது.

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மொழிவழி தேசிய இனத் தாயகங்கள் மாநிலங்களாக உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இந்த மாநிலச் சீரமைப்புக் குழு மாநிலத்தை உருவாக்குவதற்கான அடிப்படைக் கோட்பாடு வளப் பகிர்வா, வளர்ச்சிப் பகிர்வா, மொழிவழி தேசிய இனத் தாயக ஏற்பா என்பது குறித்தெல்லாம் விவாதித்து, மொழிவழி தேசிய இனத் தாயகம் என்பதுதான் மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்கு அடிப்படைக் கோட்பாடாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதனடிப்படையிலேயே 1956 நவம்பர் 1 அன்று பல்வேறு மாநிலங்களும் உருவாக்கப்பட்டன.

அன்றைக்கே கூட ஆர்.எஸ்.எஸ்.சும், அன்றைய இந்து மகா சபையும் மொழிவழி மாநிலங்கள் கூடாது, இந்தியா முழுவதையும் “ஜன்பத்” என்ற பெயரால் பல்வேறு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என்று கூறியது. ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தைத்தான் தன்னுடைய சொற்களில் மருத்துவர் இராமதாசு கூறுகிறார்.

அவ்வாறு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது தீர்க்கப்படாத மாநிலக் கோரிக்கைகளை முன்வைத்த பல்வேறு மொழிவழி தேசிய இனங்களும், இனக்குழு மக்களும் தங்களுடைய தாயகம் தனி மாநிலமாக ஏற்கப்பட வேண்டும் என்று போராடி வருகிறார்கள். தமிழ்நாட்டை மூன்றாகக் கூறுபோடலாம் என்ற தனது கோரிக்கைக்கு ஆதாரவாக மருத்துவர் இராமதாசு முன்வைப்பதெல்லாம் இவ்வாறான மொழிவழி தேசிய இனங்கள் மற்றும் இனக்குழு மக்களின் கோரிக்கைகள்தான்.

எடுத்துக்காட்டாக, உத்திரப்பிரதேசத்தில் ஆவத்பிரதேசம், புந்தல்கண்ட் போன்ற கோரிக்கைகள் இருப்பதைக் குறிப்பிடுகிறார். அவத்தி மொழி, அந்த மொழி பயிலும் மக்களின் தாயகம் ஆகியவை தனித்தன்மையானவை. அந்த அவத்தி மொழியை இந்தி மொழி என்று கபளீகரம் செய்து, உத்திரப்பிரதேசத்தில் இணைத்தபோது அவத்தி மொழி பேசும் சற்றொப்ப நான்கரை கோடி மக்கள் தங்களுடைய மொழித் தாயகம் “ஆவத்பிரதேசம்” எனத் தனி மாநிலமாக பிரிக்கப்பட வேண்டும் என்று கோரினர். இன்றும் கோரி வருகின்றனர். இந்தி மொழி இராமாயணம் என்று சொல்லப்படும் துளசிதாசர் இராமாயணமே் அவத்தி மொழியில் எழுதப்பட்டதாகும். அது தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டதால், அதை இந்தி என்று சொல்லி விழுங்கிவிட்டார்கள் என்பது அம்மக்களின் ஆவேசக் குரலாக இருக்கிறது.

அதேபோல், புந்தல்காண்ட் என்பது உத்திரப்பிரதேசத்தில் ஆறு மாவட்டங்கள், மத்தியப் பிரதேசத்தில் ஏழு மாவட்டங்கள் அடங்கிய தனித்த இனக்குழு மக்களின் தாயகமாகும். அதேபோல், பீகாரில் மைதிலி மொழி பேசக்கூடிய சற்றொப்ப 3 கோடியே 80 இலட்சம் மக்கள் தங்களுக்கு மிதிலை மாநிலம் தனியாக உருவாக்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறார்கள். போஜ்புரி மொழி பேசும் சற்றொப்ப 5 கோடி மக்கள், தங்கள் மொழிக்கு அங்கீகாரத்தையும், தங்கள் தேசிய இனத்திற்குரிய போஜ்புரி மாநிலத்தையும் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள். போடோலோந்து கோரிக்கையும் இவ்வாறு இனத்தாயகம் சார்ந்த கோரிக்கையாகும். போடோலாந்து மக்கள் தனிநாடு கோரி போராடி, அது கிடைக்கவில்லை என்ற நிலையில், அசாமிலிருந்து தனி போடோலாந்து மாநிலம் வேண்டுமென்று போராடு கிறார்கள்.

ஏற்கெனவே உருவான ஜார்க்கண்ட், உத்தரகண்ட், சத்தீசுகார் ஆகிய மாநில உருவாக்கங்களும் தனித்த பண்பாடு, வரலாறு கொண்ட இனக்குழு மக்களின் தாயக ஏற்பாகும். அதுபோல், தெலங்கானாவும் தனித்த மொழி உச்சரிப்பும், பண்பாடும், வரலாறும் கொண்ட அம்மக்களின் தொடர் போராட்டத்தால் உருவானதாகும். இவ்வாறு மருத்துவர் இராமதாசு அவர்கள் எடுத்துக்காட்டியுள்ள அனைத்து வரலாற்று நிகழ்வுகளும் மொழிவழி தேசிய இனங்கள் – இனக்குழுக்கள் தாயகம் படைப்பதற்குத்தான் எடுத்துக்காட்டுகளே தவிர, தாயகத்தைக் கூறுபோடுவதற்கான எடுத்துக்காட்டுகள் அல்ல. அவர் கூறுவதுபோல் தமிழர் தாயகமான தமிழ்நாட்டைக் கூறுபோட்டுத் தனித்தனி மாநிலம் ஆக்கினால், வரலாற்றவர்களாக – தாயகம் அற்றவர்களாக தமிழர்கள் மாற்றப்படுவார்கள். அவ்வாறு கூறுபோடப்படும் மூன்று மாநிலங்களிலுமே மிக விரைவில் தமிழர்கள் சிறுபான்மை யினராக மாறிப் போவார்கள். இந்திக்காரர்களும், மார்வாடிகளும், பிற மாநிலத்தவரும் ஆதிக்கம் செய்யும் ஆட்சிப்பகுதியில் உரிமையற்ற கொத்தடிமைகளாக அனைத்துச் சாதி தமிழர்களும் ஒடுக்கப்படுவார்கள்.

மதத்தைக் காட்டி காசுமீரிகளின் வரலாற்றுத் தாயகமான சம்மு காசுமீரை இரண்டு ஒன்றிய ஆட்சிப் பகுதியாக மோடி அரசு சிதைத்தது. மருத்துவர் இராமதாசு, சாதியை முதன்மைக் காரணியாகக் கொண்டு, தமிழர்களின் வரலாற்றுத் தாயகத்தை மூன்றாகக் கூறுபோடுவதற்கு வழி ஏற்படுத்த முயல்கிறார். இதற்கு நிர்வாகச் சீரமைப்பு, வளர்ச்சிப் பங்கீடு என்று பட்டாடைப் போர்த்தப் பார்க்கிறார்.

மொழிவழி தேசிய இனத் தாயகங்கள் என்ற நிலையில் இருக்கும்வரை தான் அந்தந்த மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தவாவது முடியும். அது இல்லையென்றால், பா.ச.க.வின் ஒற்றை இந்தியா என்ற டாங்கிகளின் பல் சக்கரத்தில் சிக்கி தமிழ்நாடு அழிந்து போகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என தெரிவித்தார்

இந்த கோரிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் “ ராமதாஸ் அவ்வப்போது அரசியல் ஆதாயத்திற்காக வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறார். ஒருவேளை வடதமிழகம் பிரிக்கப்பட்டால் தங்கள் கட்சி ஆட்சியமைக்கும் என்று நம்புகிறார், இந்த அஜெண்டாவை புதுச்சேரியில் பயன்படுத்தி ஏற்கனவே தோற்றுப்போனார். சாதிய அரசியல் நோக்கத்துக்காகவே இந்த கோரிக்கையை முன்வைக்கிறார், ஆனால் அந்த சமூக மக்களே இதனை ஏற்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

உண்மையில் மாநிலத்திற்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டால் மட்டுமே அம்மாநிலம் வளருமே தவிர, மாநிலங்களை பிரிப்பதால் மட்டுமே அம்மாநிலம் வளர்ச்சி பெறாது.  ஒவ்வொரு மாநிலத்தையும் சிறிது சிறிதாக உடைத்து சிதறடிப்பதுதான் பாஜகவின் நோக்கம்.  பெரிய மாநிலங்களை பிரித்து யூனியன் பிரதேசங்கள் போல அதிகாரமில்லாதவைகளாக மாற்றவேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸின் நோக்கம், இதற்கு சமீபத்திய உதாரணம் டெல்லிதான். எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன் போன்ற அழிவுத்திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுகள் தடையாக உள்ளது, இந்த தடையை நீக்கி  நாட்டின் வளங்களை சூறையாடுவதே பாஜகவின் நோக்கமாகும். தற்போது ராமதாஸ் முன்னெடுப்பது பாஜகவின் அஜெண்டாவாகும்.

ஏற்கனவே ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநில பிரிப்பின்போது தமிழகம் இழந்த எல்லைகள் அதிகம், அதற்கான போராட்டங்களும், குரல்களும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஒருவேளை தமிழகம் பிரிக்கப்பட்டால் நமக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் சூழல் உருவாகும். இந்த போன்ற சூழல் உருவாகத்தான் பாஜக விரும்புகிறது, அவர்களின் குரலாகவே ராமதாஸ் இங்கு பேசுகிறார். இவருடைய கோரிக்கையை தமிழக மக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதுதான் உண்மை” என தெரிவித்தார்

- வீரமணி சுந்தரசோழன்   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com