"எடியூரப்பா செய்த அதே தவறு" - கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எச்சரிக்கை மணி ஏன்?
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, பதவியேற்றபின் எழுந்த உட்கட்சி பிரச்சனையை இப்போதுதான் ஓரளவு சமாளித்த நிம்மதியில் இருந்தார். ஆனால், இப்போது தனது குடும்பத்தின் மூலமாக சிக்கல்களை எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறார். அதுகுறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
கர்நாடக முதல்வர் பதவிக்கு பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்ட இரவிலேயே அவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஊடகங்கள் மூலமாக ஒரு செய்தியை பகிர்ந்துகொண்டார். "இந்த தருணத்தில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், அரசியலுக்கு வரவேண்டாம். விலகி இருங்கள். என் தொழிலில் (அரசியல்) இருந்து விலகி இருங்கள். தனிப்பட்ட முறையில் என்னிடம் நெருக்கமாக இருங்கள்" என்றார்.
இப்படி சொல்லிவிட்டு பதவியேற்ற சில வாரங்களிலேயே, அவரின் குடும்பத்தின் மூலமாக சிக்கலை எதிர்கொண்டிருக்கிறார். கர்நாடக முதல்வராக பதவியேற்ற பின் பெங்களூருவின் தொழில் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு பற்றி விவாதிக்க தொழில்துறையை சேர்ந்த பலர் பசவராஜ் பொம்மையை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதன்பின் கர்நாடக தலைமைச் செயலகமான விதான சவுதாவில் விருந்தும் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விருந்தை பயோகான் லிமிடெட் நிர்வாக தலைவர் கிரண் மசும்தார் ஷா என்பவர் பசவராஜ் பொம்மைக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். முன்னதாக, இந்த ஆலோசனை கூட்டத்தில், ஐடி துறையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அசிம் பிரேம்ஜி மற்றும் மோகன்தாஸ் பாய் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்ட நிலையில், பசவராஜ் உடன் அவரின் மகன் பரத்தும் கலந்துகொண்டார்.
இது எதிர்க்கட்சியினர் மத்தியில் ஒரு தீயை பற்றவைத்தது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், தொழில் அதிபர்களுடனான முதல்வரின் சந்திப்பில் அவரின் மகன் பரத்தின் பங்கு குறித்து கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக காங்கிரஸ், "தொழிலதிபர்களுடன் அரசாங்க சந்திப்பில் உங்கள் மகனின் பங்கு என்ன? குடும்ப அரசியலை தொடரும் எண்ணம் இருக்கிறதா..?" என்று விமர்சனத்தை முன்வைத்தது. சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக 2014 தேர்தல்களுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, கட்சி விவகாரங்களில் சோனியா காந்தி குடும்பத்தின் அணுகுமுறையை காரணம் காட்டி 'குடும்ப அரசியல்' என்று கடுமையாக விமர்சித்து வந்தது பாஜக.
இந்தநிலையில், இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு காங்கிரஸ் கண்டனங்களை தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தை எடியூரப்பா உடன் சம்பந்தப்படுத்தியது. முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா ஆட்சி நடத்தியபோது அவரது மகன் விஜயேந்திரா அடிக்கடி இதுபோன்று அரசின் அதிகாரபூர்வ கூட்டங்களில் பங்கேற்பார். இதனால், எதிர்க்கட்சிகள் மட்டுமின்று பாஜக எம்எல்ஏக்கள் உட்பட பலர் பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருக்கும் விஜயேந்திராவை 'சூப்பர் சிஎம்' என்று அழைத்து வந்தனர். கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சித்தராமையா, விஜயேந்திராவை உண்மையான முதல்வர் என்றும், விஜயேந்திரா நிர்வாகத்தில் குறுக்கிடுவதாகவும் வெளிப்படையாகவே பலமுறை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
மாநில அரசியலில் அதிகரித்தது வந்த விஜயேந்திராவின் செல்வாக்கும், அவரின் நிர்வாக தலையீடும், எடியூரப்பா பதவி பறிப்புக்கு காரணமாக அமைந்தது என இப்போதும் பேசப்படுகிறது. இப்படியான நிலையில் பசவராஜ் மகன் பரத் கலந்துகொண்டது கூடுதல் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. என்றாலும், விஜயேந்திராவை போல் இல்லாமல் பரத் தீவிர அரசியலில் இல்லை. மேலும் தொழிலதிபராக இருக்கிறார். இந்த அடிப்படையில் அவர் கூட்டத்தல் கலந்துகொண்டிருக்கலாம் என்று பசவராஜ் தரப்பு நபர்கள் சொல்கிறார்கள்.
அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் சம்பி பூரணிக் என்பவர் இது தொடர்பாக பேசுகையில், "பசவராஜ் முதலமைச்சராக இருப்பதால் இதுபோன்ற விஷயங்களை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும். முதல்வர் ஒன்றும் வயதானவர் இல்லை, எப்போதும் அவர் மகன் உடன் இருப்பதற்கு. முதல்வர் ஒரு தூய்மையான நபராக இருக்க விரும்பினால், அவர் கவனமாக இருக்க வேண்டும். முந்தைய முதல்வர் இதுபோன்ற செயலால் தனது இமேஜை கெடுத்தார். இல்லையென்றால் இந்நேரம் முதல்வராக இருந்திருப்பார். ஆனால் குடும்பத்தினரால் அதை இழந்தார்" என்று எச்சரித்துள்ளார்.
மற்றொரு அரசியல் நிபுணரான கவுதம் மச்சையா என்பவரோ, "எடியூரப்பா வீழ்ச்சிக்கு ஒரு காரணம் அவரது மகன் ஆட்சியில் தலையிட்டதாகக் கூறப்படுவதுதான். இப்போது, முதல்வர் பொம்மையின் மகன் அரசின் அதிகாரபூர்வ சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார். பொம்மை, எடியூரப்பா செய்த அதே தவறை செய்யக் கூடாது" என்று வலியுறுத்தியுள்ளார்.
- மலையரசு