இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இனிதே நிறைவு பெற்றுள்ளது. இரண்டு போட்டியையும் வென்றதன் மூலமாக தொடரையும் வென்றுள்ளது இந்திய அணி. டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட்ட ரோகித் ஷர்மா தனது முதல் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளார்.
இந்த தொடரில் பேட்டிங்கில் ஜடேஜா, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், கருணரத்னே, விஹாரி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். அதே போல அஷ்வின், பும்ரா, ஜடேஜா, லசித் எம்புல்டேனியா மாதிரியான பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இருந்தாலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் சிலர் சோபிக்க தவறியுள்ளனர்.
ரவீந்திர ஜடேஜா!
டெஸ்ட் கிரிக்கெட் உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர் என அறியப்படுபவர் ஜடேஜா. இந்த தொடரின் முதல் போட்டியில் 175 ரன்கள் எடுத்து அசத்தியவர். அதே போட்டியில் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 9 விக்கெட்டுகளை அள்ளியவர். ஒரு இடைவேளைக்கு பிறகு அணிக்குள் திரும்பிய அவருக்கு சிறப்பான கம்பேக்காக அமைந்தது அந்த ஆட்டம்.
ரிஷப் பண்ட்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக பேட் செய்யும் திறன் படைத்தவர் ரிஷப் பண்ட். சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களில் ஒருவர். இந்த தொடரின் இரண்டு போட்டிகளையும் சேர்த்து 185 ரன்கள் எடுத்துள்ளார். அதோடு விக்கெட் கீப்பராக 3 ஸ்டம்பிங் மற்றும் 5 கேட்ச்களை பிடித்துள்ளார் பண்ட். அதனால் அவர் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.
ஷ்ரேயஸ் ஐயர்!
இரண்டு போட்டிகளையும் சேர்த்து 186 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர். 2 அரைசதங்களை இந்த தொடரில் பூர்த்தி செய்துள்ளார் ஷ்ரேயஸ். அதே போல ஹனுமா விஹாரி டாப் ஆர்டரில் தனது பங்களிப்பை அளிக்க தொடங்கியுள்ளார். இந்த தொடரில் மூன்று இன்னிங்ஸ் விளையாடியுள்ள அவர் 124 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது அபார பேட்டிங் திறனை வெளிப்படுத்தியிருந்தார். இந்திய அணியின் தரமான பந்துவீச்சை சமாளித்து சதம் விளாசி இருந்தார் அவர். அதற்காக இந்த போட்டியை மைதானத்தில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களின் பாராட்டுகளை அவர் பெற்றிருந்தார்.
அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள்!
அஷ்வின் (12 விக்கெட்டுகள்), பும்ரா (10 விக்கெட்டுகள்), ஜடேஜா (10 விக்கெட்டுகள்) மாதிரியான பவுலர்கள் இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் டாப் 3 இடங்களை பிடித்திருந்தனர். அதே போல இலங்கை அணியின் பந்து வீச்சாளர் லசித் எம்புல்டேனியா 8 விக்கெட்டுகளை இந்த தொடரில் கைப்பற்றியுள்ளார்.
மறுபக்கம் விராட் கோலி, மயங்க் அகர்வால், மேத்யூஸ் மாதிரியான வீரர்கள் மீது பலமான எதிர்பார்ப்பு இருந்தும் அவர்கள் ஏனோ இந்த தொடரில் சோப்பிக்க தவறினர். ஜடேஜா, பண்ட், பும்ரா, அஷ்வின் ஆகியோர் இந்த தொடரில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.