’ஆரம்பத்துல.. கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருந்துச்சு’: திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி

’ஆரம்பத்துல.. கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருந்துச்சு’: திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி
’ஆரம்பத்துல.. கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருந்துச்சு’: திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி

ஆரம்பத்துல.. கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருந்துச்சு’: மனம் திறக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி

ஆடிய காலும் பேசிய வாயும் சும்மா இருக்காது என்று சொல்வார்கள். அதற்கேற்ப தனது நகைச்சுவை பேச்சால் பட்டிதொட்டி முதல் பாரின் வரை ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டுள்ளவர் திண்டுக்கல் ஐ.லியோனி. பட்டிமன்றம் பாட்டுமன்றம் பொதுக்கூட்டம் என எப்போதுமே பிஸியாக இருப்பார். ஊர்ஊராக சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் லியோனி இந்த ஊரடங்கு காலத்தில் என்ன செய்கிறார் என்று அவரிடம் சில கேள்விகளை கேட்டோம்.


எப்போதும் சுறு சுறுப்பாக இருக்கும் நீங்கள் கொரோனாவின் ஆரம்ப காலத்தை எப்படி உணர்ந்தீர்கள்?

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோபேர் இருந்தாலும் அதில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று சொன்னால் பொதுக்கூட்டத்தை மையமாக வைத்து அந்த கூட்டத்தின் முன் தனது திறமைகளை வெளிப்படுத்துகிற கலைஞர்கள் பேச்சாளர்கள்தான். அப்படி பாதிக்கப்பட்டவர்களின் நானும் ஒருவன். ஒருமாசத்தில் இருபது மேடைகளிலாவது பேசிவிடுவேன். இதில் ஒருநாளைக்கி குறைந்தது ஆயிரம்பேர் என்று வைத்தாலும் கிட்டத்தட்ட இருபதாயிரம் பேரை நேரடியாக பேச்சாலும் பாட்டாலும் சந்தித்து பழக்கப்பட்ட எனக்கு கடந்த மார்ச் இருபத்தி நான்காம் தேதியில் இருந்து ரசிகர்களை நேரடியாக சந்திக்க முடியாமல் போனது எனக்கு பெரிய குறையாக இருக்கிறது.

கொரோனா காலத்தில் வீட்டில் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்?

பட்டிமன்றம் பொதுகூட்டம்னு பிஸியாக இருந்த நாட்களில் அங்கே பேசுவதற்குத் தேவையான செய்திகளை சேகரிப்பது. அதற்குரிய புத்தகங்களை படிப்பது. பேச்சாளர்களின் பேச்சை கேட்பது. மற்றும் செய்தித்தாள்ளை படிப்பது என மூளை ரொம்ப பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. ஆனால் அந்த இயக்கம் இப்போது நின்றுவிட்டதாக உணர்கிறேன். ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 144 தடைஉத்தரவு போட்டதில் இருந்து ஒரு பத்துநாட்கள் என்ன நடந்தது என்றே தெரியல. கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருந்தது.

தங்களது லியோனி டாக்கீஸ் யூ டியூப் சேனல் எப்படி உருவானது?
 
கொரோனாவுக்கு பயந்து எந்தனை நாளைக்கிதான் வீட்டுக்குள்ளேயே இருக்குறதுன்னு யோசித்தேன். பொதுக்கூட்ட மேடையில போயிதான் பேசணுமா அல்லது நம்மகூட பேசுற பட்டிமன்ற பேச்சாளர்கள் இருந்தால்தான் பேசமுடியுமா. இல்லாட்டி கோவில் திருவிழாவுல மேடைபோட்டு கொடுத்தால்தான் பேசணுமா? மேடை, பேச்சாளர்கள், கூட்டம் இது மூன்றும் இல்லாம நாம்முடைய ரசிகர்களை சந்திக்க முடியாதா அப்படீன்னு யோசனைபண்ணி அதிலிருந்து உருவனதுதான் லியோனி டாக்கீஸ் என்ற யூ டியூப் சேனல்.

லியோனி டாக்கீஸ் அனுபவம் எப்படி இருக்கிறது?

லியோனி டாக்கீஸ் யூ டியூப் சேனல்ல என்னுடைய நிறைய கருத்துக்களை சொல்லியிருக்கேன்.  எப்பவும் பத்திரிகை நிருபர்கள்தான் என்னை பேட்டி எடுப்பார்கள். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமேன்னு எனது மருமகள் என்னை பேட்டி எடுத்தார். இந்நிகழ்சியில் எந்த மாதிரியான கேள்விகளை கேட்டாரென்றால் நீங்கள் பட்டிமன்ற நடுவராக இருக்கும்போது சந்தோஷமாக இருக்கின்றீர்களா அல்லது வாத்தியாராக இருக்கும்போது சந்தோஷமாக இருந்தீர்களா ரெண்டு வேலையையும் சேர்ந்தாப்புல எப்படி பாத்தீங்க என்று கேட்டார்.

அதுக்கு நான் என்னா பதில் சொன்னேன்னா அப்ப நான் திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் ஸ்கூல்ல வாத்தியாரா இருந்தேன். அதுவும் சயின்ஸ் வாத்தியார். பாடம் எடுப்பதற்கு முன்னாடி பசங்கள்ட கொஞ்சநேரம் பொது விசயங்களை பேசுவேன். அப்ப வகுப்புல பாடம் நடத்தாம அங்கேயும் பட்டிமன்றம் நடத்திக்கிட்டு இருந்தீங்களான்னு கேட்கக்கூடாது. நான் சொல்லும் செய்திகளை மாணவர்கள் எப்படி கேட்டு ரசிக்கிறார்கள் என்பதை பார்ப்பேன் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தால் அதே கருத்தை மேடையிலும் பேசுவேன். வாத்தியார் பட்டிமன்ற நடுவர் என்று ரெண்டு வேலையையும் பிரித்து பார்க்கவில்லை என்று சொன்னேன் இந்த நிகழ்ச்சியை ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்து ரசித்தனர்.

உங்களுடைய யூ டியூப் பட்டிமன்றத்துக்கு வரவேற்பு இருந்ததா?

  மருமகளை வைத்து பேட்டியெடுத்தே சேனல்ல போடமுடியுமா. அதுக்காக நான் நடுவராக இருந்து எனது துணைவியாரையும் மருமகளையும் பேச்சாளர்களாக வைத்து மனைவியா மருமகளா என்ற தலைப்பில் ஒரு பட்டிமன்றத்தை நடத்தலாம் என்று யோசித்தேன். பிறகு இந்த கொரோனா காலத்துல ஏய்யா நீவேற மாமியாள மருமகளான்னு. வீட்ல மாமியாரையும் மருமகளையும் வெச்சுக்கிட்டு அவங்கள்ட இருந்து எப்படி தப்பிகிறதுன்னு தெரியாம முழுச்சுக்கிட்டு இருக்கோம். இப்பயோயி மாமியாரா மருமகளான்னு பட்டிமன்றம் போடுறீங்களேன்னு மக்கள் நினைப்பார்கள் என்று கோரோனா ஊரங்கை பற்றிய தலைப்பில் ஒரு பட்டிமன்றம் நடத்தினோம். இதுல ஆட்சியாளர்கள் சார்பாக துணைவியும் மக்கள் சார்பாக மருமகளும் பேசுனாங்க. மாமியாரையும் மருமகளையும் பேச்சாளர்களாக வெச்சு நான் நடுவராக இருந்து பட்டிமன்றம் நடத்துனது எனக்கு புது அனுபவத்தை கொடுத்தது. இந்த பட்டிமன்றத்தையும் ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இதுமாதிரியான புதிய முயற்சிகளுக்கு வழிவகுத்து கொடுத்தது இந்த ஊரடங்கு காலம்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com