இது Time Machine இல்ல; ஆனாலும் காலம் கடந்து செல்லலாம்! #Photography
புகைப்படங்கள் என்பது நம் கடந்த கால வாழ்க்கைக்கு நம்மையே கூட்டி செல்லும் கால இயந்திரம்!
நண்பர்களுடனான கூடுகைகள், சந்தோஷமான தருணங்கள், முக்கியமான குடும்ப நிகழ்வுகள் போன்ற முக்கிய தருணங்களில் நம்மை நாமே கவனிக்க மறந்துவிடுவோம். அப்படியான வாழ்வின் பல்வேறு பரிணாமங்களை மீண்டும் பார்க்க வேண்டுமென்றால், இந்த கால இயந்திரம்தான் நமக்கு உதவும்! காலம் கடந்து சென்று பார்த்தால் என்ன மாதிரியான உணர்ச்சி நமக்கு கிடைக்குமோ, அப்படியான ஒன்றை இவையும் கொடுக்கும்.
ஒரு அழுத்து அழுத்தினால் போதும்... வாழ்க்கையின் தருணங்களை தன்னகத்தே சிறை பிடித்துக்கொள்ளும் தன்மை கொண்டவை கேமிராக்கள்!
இப்படி பல சிறப்புகளைக் கொண்ட புகைப்படங்களையும் அதன் கலைஞர்களையும் கொண்டாட, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19ம் தேதி ‘உலகப் புகைப்பட தினமாக’ கொண்டாடப்படுகிறது.
தருணங்களை சிறைப்பிடிக்கும் கண்ணாடி:
ஒவ்வொறு தருணங்களையும் அழகாக சிறை பிடித்துக் காட்டுவதில் கெட்டிகாரத்தனம் கொண்டவை, புகைப்படக்கருவிகள்.
குடும்பத்துடனான சந்தோஷமான நிகழ்வுகள், நண்பர்களுடனான கூடுகைகள் போன்றவற்றை படம்பிடித்து, பத்து வருடங்கள் கழித்து பார்த்தாலும்... நிகழ்வின்போது எவ்வித உணர்வை பெற்றோமோ அதையே அப்படியே இப்போதும் பெறுவோம். சொல்லப்போனால் இதுபோன்ற மகிழ்ச்சியான தருணங்களை நினைவுகூறும்போது, அதைவிட அதிக மடங்கு ஆனந்தத்தை நமக்கு கண்ணாடி போல பிரதிபலித்துக் காட்டுவிடும் புகைப்படங்கள்.
ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்:
ஒரு மணி நேரமோ, அரைமணி நேரமோ.. ஒரு தலைப்பை பற்றி வார்த்தைகளால் நாம் பேசி புரிய வைப்பதை, ஒரே ஒரு புகைப்படம் தன் மௌனத்தில் கூறிவிடும். அந்தளவுக்கு புகைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது மிகப்பெரியது. நமது வரலாற்றில் கூட, வார்த்தைகளால் பேச முடியாத பலவற்றை புகைப்படங்கள்தான் தெரிவித்திருக்கின்றன. அந்தவகையில், எழுச்சியின் உருவாக்க கருவிகள் இவை!
புகைப்படக்கலைஞர்...!
ஏற்கெனவே ரசிக்கும் வகையில் இருக்கும் புகைப்படத்தை ரசிக்க வைப்பது பாரட்டுக்குரியது அல்ல, ரசிக்கும் வகையில் இல்லாத ஒன்றையும் ரசிக்க வைப்பவரே சிறந்த புகைப்படக்கலைஞர்.
பொழுது போக்குக்காக கேமராவை கையில் எடுப்பவர்கள் கூட மீண்டும் அதை கீழே வைக்க முடியாத அளவிற்கு அதன் மீது தீரா காதல் கொண்டவர்களாக மாறிவிடுவர். அந்தளவுக்கு வல்லமை படைத்தவை, கேமராக்கள். விளையாட்டுத்தனமாக கேமராவை கையில் எடுத்தவர்கள் கூட தற்போது அதை கொண்டு தங்களது வாழ்வையே முன்னேற்றி செல்லும் அளவிற்கு அதில் சிறந்தவர்களாக மாறியிருக்கின்றனர்.
ஒரு நல்ல புகைப்படம், நம்மை எப்படியெல்லாம் மாற்றும்?
சுயநலம் பொது நலமாக...
புகைப்படம் எடுக்கும் பொழுது நாம் நம்மை காட்டிலும் நம்மை சுற்றி உள்ளவர்களையே அதிகம் நேசிக்க ஆரம்பிக்கிறோம். பிறருடைய உணர்வுகளை கவனிக்க ஆரம்பிக்கிறோம். சுயநலம் என்னும் நிலையை உடைத்து, பொதுநலம் படைத்தவராக நம்மை நாமே மாற்றிக்கொள்கிறோம்.
பார்க்கும் விதத்தில் மாற்றம்:
புகைப்படங்கள், ஒருவரின் உணர்ச்சியை வெளிப்படுத்தும் கண்ணாடியாக இருக்கும். ஒரேயொரு புகைப்படம், இருவேறு நபர்களுக்கு வேறு வேறு எண்ணங்களை கொடுக்கும். இப்படி எண்ணங்களின் கலவை, புகைப்படத்தின் வெளிப்பாடாக அமைகிறது.
பேசும் புகைப்படங்கள்:
பல நாடுகளில் ஏற்பட்ட கொடூரமான போர்கள் புகைப்படங்கள் வாயிலாக முடிவுக்கு வந்துள்ளன. எங்கும் காணாத அதிசயங்களை கண் முன்னே கொண்டு வந்து பரவசத்தை உருவாக்கிடும் நிலையையும் புகைப்படங்களால் நமக்கு தர இயலும்.
அதனால் தான் இன்றளவும் புகைப்படங்கள் அழியாத புகழை கொண்டுள்ளது.! இப்படி பல பெருமைகளை கொண்டுள்ள புகைப்படங்களை, ஒருநாளில் மட்டுமல்ல... ஒவ்வொரு நாளும் கொண்டாடுவோம்!