‘தாய்ப்பால் வங்கிதான் என் குழந்தையை காப்பாத்துனது..!’ நெகிழும் ராஜலட்சுமி

‘தாய்ப்பால் வங்கிதான் என் குழந்தையை காப்பாத்துனது..!’ நெகிழும் ராஜலட்சுமி

‘தாய்ப்பால் வங்கிதான் என் குழந்தையை காப்பாத்துனது..!’ நெகிழும் ராஜலட்சுமி

பிறந்த குழந்தைக்கு அடிப்படையான உணவு தாய்ப்பால். சில தாய்மார்களுக்கு இயற்கையாகவே பால் அதிகமாகச் சுரக்காமல் போகும் நிலையையும், பிரசவத்தின்போது தாய் இறப்பதால் தவிக்கும் குழந்தைக்கு பால் கிடைக்காத நிலையையும் சமாளிக்க 2014-ம் ஆண்டில் ‘ஹ்யூமன் மில்க் பேங்க்’ (Human Milk Bank) திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள்.

‘பிஞ்சுகளின் பசி போக்குவதே மனநிறைவு...’

எனக்கு திருமணம் ஆகி 5 வருஷம் ஆகிடுச்சு. என்னோட இரண்டாவது குழந்தைக்கு ஏற்பட்ட சிறு தொற்றுகாரணமா இங்கதான் அட்மிட் பண்ணிருக்கேன். தினமும் என்னோட குழந்தைக்கு கொடுத்த பால் போக மீதமிருக்கும் பாலை இங்கவந்து கொடுத்துடுவேன். ஒருநாளைக்கு இரண்டு முறையாவது தானமாக கொடுத்துடுவேன். மற்ற குழந்தைகளின் பசியாத்தணுங்குற நோக்கத்துலதான் தானாவே முன்வந்து பாலை தானமாக கொடுப்பேன். என்னால முடிஞ்சவர மற்ற தாய்மார்களுக்கும் பால் வங்கி குறித்து அறிவுறுத்திட்டுவறேன்.


நிறைய தாய்மார்கள் கிட்ட இதுகுறித்த விழிப்புணர்வு இருக்குறது மகிழ்ச்சியா இருக்கு. மேலும், மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்மார்களும் தாங்களாகவே முன்வந்து தாய்ப்பால் தானம் பண்ணுறது இன்னும் மகிழ்ச்சியா இருக்கு. சரியான டயட் கண்ட்ரோல் (Diet Control) இருந்தாலே பால் நல்லா சுரக்கும்; இதுக்குன்னு தனியா மருந்து, மாத்திரைகள் எடுக்கணும்கிற அவசியமே இல்ல. சத்தான சாப்பாடே போதுமானது. இன்னும் பெரியளவுல இந்த தாய்ப்பால் வங்கி குறித்து விழிப்புணர்வு கிடைச்சு இன்னும் பல தாய்மார்கள் தாய்ப்பால் தானம் பண்ண முன்வந்தா மனநிறைவா இருக்கும் என தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார் தீபா...

‘தாய்ப்பால் வங்கிதான் என் குழந்தையை காப்பாத்துனது..!’

எனக்கு குறைப்பிரசவத்துல குழந்தை பிறந்ததால 2 மாதமா மருத்துவமனையிலதான் இருக்கேன். எனக்கு பால் சரியா சுரக்கவே இல்ல. இவர்கள மாதிரி சில நல்ல உள்ளங்கள் முன்வந்து தாய்ப்பால் கொடுக்குறதாலதான் என் குழந்தைக்கு இப்போ எடை கூடி நல்லா இருக்கு. 1.8 கிலோ இருந்த என் குழந்தை இப்போ 3 கிலோ இருக்கு.

இங்க தானமா கொடுக்கப்படுற பால் முழுமையான பரிசோதனைக்குப் பிறகு, குளிரி்ல் பதப்படுத்தப்பட்டு குழந்தைகளுக்கு கொடுக்கப்படுது. அதனால நோய்த் தொற்று பத்தின பயம் இல்ல. தானமாக சேகரிக்கப்பட்ட பாலை 2 மணிநேர இடைவெளில ஒரு நாளைக்கு 12 முறை என் குழந்தைக்கு குடுத்துட்டுவறேன். இந்த பால் வங்கி உதவியால என் குழந்தை இப்போ குணமானத நினைச்சாவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என நெகிழ்ந்தார் ராஜலட்சுமி...

தாய்ப்பாலின் முக்கியத்துவம்...

தாய்-சேய் பிணைப்பு தாய்ப்பால் கொடுப்பதனால் ஊக்குவிக்கப்படுகிறது. குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கவேண்டியது மிக அவசியம். இது 22% பிரசவத்துக்குப் பிந்தைய குழந்தை இறப்புகளை தடுக்கும் என்பது ஒரு ஆய்வின் தகவல். குறைந்தது ஒரு வருடத்திற்காவது தாய் குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிக மிக அரிது, மூளை வளர்ச்சிக்கும் தாய்ப்பால் பெரிதும் உதவுவதால் அதிக ஞாபகசக்தியை தருகிறது.

மேலும், அதிக கால்சியம் சத்து நிறைந்த தாயின் பால் குழந்தைகளின் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. வைட்டமின்கள், கொழுப்புகள், தாதுக்கள், புரதங்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் என குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துகளும் தாய்ப்பாலில் கிடைக்கும். தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்கிற ஆர்வம் கூட தாயின் பால் சுரப்பு திசுக்களை தூண்டுகிறது. குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு குழந்தைக்கு பாலூட்டுவதும் தாய்க்கு மிக முக்கியம். தாய்ப்பால் ஊட்டாத பெண்களுக்கு கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் வரும் அபாயம் அதிகமாக உள்ளது.

தாய்ப்பால் ஊட்டுவதற்கு தடையாக இருக்கும் சில காரணங்கள்...

தாய்ப்பால் ஊட்டும் தாயின் சத்து குறைபாடு, பொது இடங்களில் தாய்ப்பால் ஊட்டுவதற்கு கூச்சப்படுவது, வேலைக்கு செல்லும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட நேரமின்மை, தாய்ப்பால் ஊட்டுவதை ஓரிருமாதங்களில் விட்டுவிடுவது, தாய்ப்பால் பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது ஆகும். குழந்தைக்கு இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் தரவேண்டும். பால் சுரக்கும் நேரங்களில் தாய்க்கு அதிக சத்து தேவைப்படுகிறது என்பதனால் அதிக பழங்கள், பச்சை காய்கறிகள், கீரை, பால், தண்ணீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். தாய்ப்பால் அழகை குறைக்காது; அழகை கூட்டும் என்பதை தாய்மார்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

தன்னலமின்றி உதவிக்கரங்கள் நீட்டும் மனம் கொண்ட கொடையாளர்களை போற்றுவோம்..! தீபா போன்ற எத்தனையோ தன்னிகரற்ற தாய்மார்களால்தான் 'சுதந்திரம்' போன்ற எத்தனையோ பிஞ்சுகள் மறுவாழ்வு பெறுகின்றனர்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com