
புகைப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என மனதில் உறுதியாக முடிவெடுத்துவிட்டாலே ‘பாதி போரில் வென்றது’ போலத்தான். ஏனெனில் மனதை ஒருமுகப்படுத்தி, புகைப்பதை விடும் முயற்சியில் இறங்குவதே உடல் மற்றும் மனதளவில் மேம்படுவதற்கான முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. ஆனால் நிகோட்டின் பயன்பாட்டை கைவிடும்போது சந்திக்க நேரும் அறிகுறிகள், பலரை மீண்டும் அந்த பழக்கத்திற்கே ஆளாக்குகிறது.
இதை ‘நிகோட்டின் பழக்கத்தை ஒருவர் கைவிடும்போது, அவரின் உடலும் மனமும் நிகோட்டின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது’ என்கிறது தேசிய கேன்சர் நிறுவனம். இந்த தூண்டுதலானது புகைபிடித்த ஒன்று அல்லது இரண்டு மணிநேரங்களுக்குள் தொடங்கி சில நாட்களோ, வாரங்களோ அல்லது மாதக்கணக்கிலோ இருந்துகொண்டே இருக்கும் என்கிறது.
1. இந்தியாவில் ஏறக்குறைய 100 மில்லியன் மக்கள் (15 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையோர்) தற்போது புகைப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.
2. புகைப்பழக்கத்திற்கும் மனநலத்திற்கும் இடையேயான தொடர்பை பல ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர். அவர்கள் பலரும் புகைப்பழக்கம் இல்லாதவர்களைவிட புகைப்பிடிப்போரின் மன ஆரோக்கியம் மோசமானதாக இருப்பதாகவே கூறுகின்றனர்.
3. மனநல பிரச்னைகளுக்கு ஆளானவர்கள் புகைப்பிடிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
4. புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட நினைத்து மீண்டும் அப்பழக்கத்திற்குள் செல்பவர்கள் மன அழுத்தம், பதற்றம், பைபோலார் டிஸார்டர், ஸ்கிசோஃப்ரினியா போன்ற பிற மனநல பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர் என்கிறது ஆய்வுகள்.
இந்தியாவில் மனநல பிரச்னைகளுக்கான சிகிச்சைகள் மிகவும் குறைவாகவே கிடைப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. 70% - 92% மனநல பிரச்னைகளுக்கு ஆளானவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதில்லை என்கின்றது.
புகைப்பழக்கத்தை கைவிட நினைப்பவர்களுக்கு பாதுகாப்பான சிகிச்சை முறைகளில் ஒன்று நிகோட்டின் மாற்று சிகிச்சை. இது பாதுகாப்பான வழியில் நிகோட்டின் எடுத்துக்கொள்ளுதலுக்கு அனுமதிக்கிறது. அதாவது பீடி, சிகரெட் என்று இல்லாமல், பேட்சஸ், சூயிங்கம், நாசி ஸ்ப்ரே, இன்ஹேலர்கள் மற்றும் லோசன்ஜ்கள் போன்ற வடிவங்களில் நிகோட்டினை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது.
இதிலும் நிகோட்டின் மாற்று பேட்சஸானது பசி மற்றும் நிகோட்டின் உணர்வை குறைக்கும் விஷயத்தில், புரட்சிகரமான ஒரு முயற்சி என்கின்றனர் நிபுணர்கள். இது புகைப்பிடித்தலை கைவிட வைப்பது மட்டுமல்லாமல் மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவற்றையும் குறைக்கிறது. மருத்துவரின் உதவியுடன் NRT-ஐ (Nicotine replacement therapy) திறன்பட கையாண்டால் புகைப்பழக்கதை வெற்றிகரமாக கைவிடமுடியும்.
மன அழுத்தத்தை கையாள கற்றுக்கொண்டால் புகைப்பிடித்தல் பழக்கத்தை கைவிட முடியும் என்கின்றன ஆராய்ச்சிகள். தியானம், யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி போன்றவை மன அழுத்தத்திலிருந்து வெளிவர உதவும். தினசரி உடற்பயிற்சி செய்வதும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் மன பதற்றத்தை குறைத்து, மனநிலையை மேம்படுத்தி, நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். அதேபோல் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற வேண்டும். மேலும் மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டும்.
புகைப்பிடித்தலை கைவிடுதல் என்பது ஒரு பயணம். இதில் ஒரே வழிமுறை அனைவருக்கும் பொருந்தாது. அதேசமயம் பொறுமையும் விடாமுயற்சியும் அவசியம்.
இந்த பயணத்தில் சிலநேரங்களில் பின்னடைவுகளை சந்திக்க நேர்ந்தாலும், சிறிது நேரம் செலவிட்டு எந்த வழிமுறை நமக்கு பொருந்தும் என்பதை கண்டறிந்து அதனை பின்பற்ற வேண்டும். இந்த பயணத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடிய நபர்களை நம்மை சுற்றி வைத்துக்கொள்வது மிக முக்கியமானது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியை நாடுவதுடன், உதவும் குழுக்களில் தங்களை இணைத்துக்கொள்வது ஆதரவாக இருக்கும். ஒரு ஆதரவு அமைப்பானது பொறுப்புணர்வையும், உந்துதலையும் மற்றும் சமூக உணர்வையும் வழங்கும் என்பதை மறக்கவேண்டாம்.