'நாங்க வேற மாதிரி' - இங்கிலாந்தின் 'ஸ்லெட்ஜிங்'கும் இந்தியாவின் பதிலடியும்

'நாங்க வேற மாதிரி' - இங்கிலாந்தின் 'ஸ்லெட்ஜிங்'கும் இந்தியாவின் பதிலடியும்
'நாங்க வேற மாதிரி' - இங்கிலாந்தின் 'ஸ்லெட்ஜிங்'கும் இந்தியாவின் பதிலடியும்

இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றிப் பெற்றது. 5-ஆம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் முதல், விமர்சகர்கள் வரை அனைவரும் முன்வைத்த விஷயம் இந்தியா 20 ஓவருக்குள் ஆல் அவுட் ஆகிவிடும். 200 ரன்கள் முன்னிலைப் பெறும், அதனை இங்கிலாந்து வீரர்கள் எளிதாக சேஸ் செய்து வெற்றிப்பெற்றுவிடுவார்கள் என்பதுதான் அது.

முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா ஒரு கட்டத்துக்கு மேலே சென்று "என்னை கொன்றாலும் பரவாயில்லை, நிச்சயம் இங்கிலாந்துதான் வெற்றிப் பெறும்" எனக் கூறினார். இப்போது என்ன செய்வார் என தெரியவில்லை.

சின்னதா ஒரு "மேட்ச் ரீவைண்ட்"

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ஆம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 364 ரன்களும், இங்கிலாந்து 391 ரன்களும் குவித்தன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 4-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 14 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் பரபரப்பான 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று அரங்கேறியது. தொடர்ந்து பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 22 ரன்னில் வேகப்பந்து வீச்சாளர் ராபின்சனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் ஆனார். இஷாந்த் ஷர்மாவும் 16 ரன்களில் அவரது பந்து வீச்சுக்கே வீழ்ந்தார். அப்போது இந்தியா 8 விக்கெட்டுக்கு 209 ரன்களுடன் சிக்கலில் தவித்தது. இங்கிலாந்தின் கை சற்று ஓங்கியதுபோல் தெரிந்தது. அப்போதுதான் களத்துக்கு பும்ராவும், ஷமியும் வந்தனர்.

திருப்புமுனை தந்த "ஸ்லெட்ஜிங்"

ஆண்டர்சனுக்கும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் ஏழாம் பொருத்தமாகவே போட்டி முழுவதும் இருந்து வந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 17-ஆவது ஓவரின்போது, ஆண்டர்சன் வீசிய பந்தில் புஜாரா ரன் எடுக்க ஓடினார். அப்போது பிட்சின் குறுக்கே ஆண்டர்சன் நடந்து சென்றதால் கடுமையான கோபம் அடைந்த மறுமுனை பேட்ஸ்மேன் கோலி, ‘இது போட்டியின் பிட்ச், உங்கள் வீட்டு தோட்டம் கிடையாது' எனத் தெரிவித்து சில கெட்ட வார்த்தைகளையும் பேசினார். இவையெல்லாம் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து இங்கிலாந்து பேட் செய்யும்போது ஆண்டர்சன் வந்ததும் பும்ரா பவுலிங் போட்டார். அந்த ஓவரில் அசுரத்தனமாக பந்துவீசிய பும்ரா ஆண்டர்சனின் ஹெல்மெட்டை பதம்பார்த்தார். அனைத்து பந்துகளையும் உடம்பிலேயே வாங்கிக் கொண்டு இருந்தார் ஆண்டர்சன். பின்பு ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பும்போது பும்ராவை கடுமையாக சாடினார். ஆனால் பும்ராவோ சிரித்துக்கொண்டே சட்டை செய்யாமல் சென்றுவிட்டார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் லெஜண்ட் ஆண்டர்சனுக்கு இந்த நிலைமையா என ஒட்டுமொத்த இங்கிலாந்து வீர்ரகளும் பும்ராவை பழிவாங்க துடித்தனர்.

அதற்கான சமயம் நேற்று அமைந்தது. பும்ராவுக்கு, தொடக்கத்தில் அடுக்கடுக்கான பவுன்சர் பந்துகளை  இங்கிலாந்த பவுலர் மார்க் வுட் வீசினார். பல்வேறு குடைச்சல்களும் கொடுத்தனர். இதில் மார்க் வுட் வீசிய ஒரு பந்து அவரது ஹெல்மெட்டை பயங்கரமாக தாக்கியது. உடனடியாக அணியின் பிசியோதெரபிஸ்ட் வந்து அவரை சோதித்து பார்த்தார். காயம் எதுவும் இல்லை என்று கூறியதையடுத்து தொடர்ந்து பேட்டிங் செய்தார். அடுத்த பந்தை பவுண்டரியாக்கினார் பும்ரா. பின்பு மார்க் வுட் ஏதோ சொல்ல பும்ராவும் பதில் பேசினார்.

இந்த விஷயத்தில் சம்பந்தமே இல்லாமல் ஆஜரான ஜோஸ் பட்லருக்கும், பும்ராவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக நடுவர் தலையிட்டு சமாதானப்படுத்தினார். எப்போதும் அமைதியாக இருக்கும் பும்ராவையும், ஷமியையும் ஆக்ரோஷமாக்கியது இங்கிலாந்து வீரர்களின் வார்த்தை போர்தான். இதன் பின்பு மறுமுனையில் முகமது ஷமி, சிரமமின்றி இங்கிலாந்தின் பந்து வீச்சை வறுத்தெடுத்தார். மொயின் அலியின் பந்தை சிக்ஸருக்கு விரட்டி அரைசதமடித்து கலக்கினார். பழி வாங்கியே தீர வேண்டும் என ஆண்டர்சனிடம் பந்து கொடுக்கப்பட்டது. ஆனால் அவராலும் பும்ரா - ஷமியை வீழ்த்த முடியவில்லை.

ஆண்டர்சனுக்காக வரிந்துக்கட்டிக்கொண்டு பழதீர்க்க நினைத்து இங்கிலாந்து வீரர்கள் மேற்கொண்ட வார்த்தை சீண்டல்கள் அவர்களுக்கு எதிராக திரும்பியதுதான் சோகம். இங்கிலாந்து வீரர்களால் தூண்டப்பட்ட ஆக்ரோஷம் இந்தியாவுக்கு போட்டி முடியும் வரை இருந்தது.

இங்கிலாந்து விக்கெட்டுகளை, ஆக்ரோஷத்துடன் பந்துவீசியதால்தான் இந்திய பவுலர்களால் எடுக்க முடிந்தது. ஒரு காலத்தில் இந்தியாவிடம் வார்த்தை சீண்டலில் ஈடுபட்டால் பெரிதாக எந்த ரியாக்சனும் இருக்காது. ஆனால் இப்போதுள்ள இந்திய அணி கோலி தலைமையில் உருமாறியிருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com