மீன்களில் ஃபார்மலின்... ஆபத்தான ரசாயனக் கலப்பை எளிதில் கண்டறிவது எப்படி? - A to Z கைடன்ஸ்

மீன்களில் ஃபார்மலின்... ஆபத்தான ரசாயனக் கலப்பை எளிதில் கண்டறிவது எப்படி? - A to Z கைடன்ஸ்
மீன்களில் ஃபார்மலின்... ஆபத்தான ரசாயனக் கலப்பை எளிதில் கண்டறிவது எப்படி? - A to Z கைடன்ஸ்

மீன் பிரியர்களை 'வாட் யூ மீன்?' என்று அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது 'ஃபார்மலின்' என்கிற ரசாயனம் மீன்களில் கலக்கப்படும் தகவல். திருச்சி உறையூரில் ஃபார்மலின் கலக்கப்பட்ட 650 கிலோ மீன்களை கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள். ஏற்கெனவே, "ஃபார்மலின் மனித செல்களில் புகுந்து புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் உள்ளது" என்று அமெரிக்காவின் தேசிய நச்சுயியல் துறை எச்சரிக்கை செய்துள்ளது. இப்படி, ஆபத்தை உண்டாக்கும்  ஃபார்மலின் ரசாயனம் மீன்களில் கலக்கப்படுவதை பொதுமக்களே  எப்படி கண்டுப்பிடிப்பது? ஃபார்மலின் கலந்த மீனை உட்கொள்ளுவதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் என்னென்ன? எப்படி புகார் அளிக்கலாம்? தமிழக மீனவர்கள் என்ன சொல்கிறார்கள்? - சற்றே விரிவாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.

"ஃபார்மலின் ரசாயனம் கலந்த மீனை எப்படி கண்டுப்பிடிப்பது?" என்று விழிப்புணர்வூட்டி பேசும் தமிழக உணவுப் பாதுகாப்புத்துறை திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு நம்மிடம் கூறும்போது, "வெறும் கண்களால் ஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டுப்பிடிக்கவே முடியாது. 'ஃபார்மலின் ரீ ஏஜெண்ட் டெஸ்ட் கிட்' மூலமே கண்டுப்பிடிக்க முடியும். இதனை, ஆய்வகங்களில்தான் செய்யவேண்டும் என்றில்லை. பொதுமக்களே சோதனை செய்துகொள்ள அனுமதி உண்டு.

மீனை வாங்கிக்கொண்டுச் செல்லும் மக்களுக்கு சந்தேகம் வந்தால் வீட்டிலேயேகூட சோதனை செய்யலாம். 'ஃபார்மலின் ரீ ஏஜெண்ட் டெஸ்ட் கிட்' கெமிக்கல் கடைகளிலேயே கிடைக்கிறது. இதனை மீன் மீது ஒரேயொரு சொட்டு ஊற்றினால் கலப்படம் இல்லாத மீனாக இருந்தால் நிறம் மாறாது. ஃபார்மலின் கலந்திருந்தால் ரோஸ் கலரில் மாறிவிடும். அதிகப்பட்சம் 2 நிமிடங்களில் கலர் மாறி உறுதியாகிவிடும். ஃபார்மலின் டெஸ்ட் கிட் பெரிய விலையெல்லாம் கிடையாது. 400 ரூபாய்தான். ஒரு கிட்டில் 300 டெஸ்ட் வரை பார்க்கலாம்.

மற்றபடி, சோதனை செய்யமால் கண்டுப்பிடிக்கவும் சில வழிகள் உள்ளன. ஆழ்கடலிலிருந்து வரும் மீன்கள் ஒரு வாரம் கழித்து வருவதால் பொதுவாகவே மீனை அழுத்திப் பார்த்தால் கொஞ்சமாவது அமுங்கச் செய்யும். ஆனால், ஃபார்மலின் கலந்த மீன்களை அழுத்திப் பார்த்தால் கம்பிபோல் உறுதியாக இருக்கும். அதோடு, பலர் மீன்களின் செதில்களை பார்த்து வாங்குகிறார்கள். செதில்கள் கருப்பாக இருந்தால் கெட்டுப் போன மீன் என்றும், சிவப்பாக இருந்தால் நல்ல மீன் என்றும் வாங்குகின்றனர். அந்த செதில்கள் கெட்டுப்போகாமல் சிவப்பாக இருப்பதற்கும் ஃபார்மலின் பயன்படுத்தப்படுகிறது. இதனால், எது ஃபார்மலின் கலந்த மீன், கலக்காத மீன் என்று கண்டுப்பிடிக்க முடிவதில்லை. அதனால், செதில்களை வைத்தும் நல்ல மீன் என்று முடிவுக்கு வந்துவிடக்கூடாது.

(தமிழக உணவுப் பாதுகாப்புத்துறை திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு)

அதேசமயம், ஃபார்மலின் கலந்த மீனில் இருந்து எந்த வாசனையும் வராது. மீனுக்கென்று இயல்பிலேயே இருக்கும் வாசனைக்கூட வராது. கெட்டுப்போன வாசனையும் வராது. வெளியில் பார்த்தால் புதிதாக பிடித்துவந்த மீன்போல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். ஈக்கள் கூட ஃபார்மலின் கலந்த மீன்களில் நெருங்காது. இதன் அடிப்படையில் மக்களுக்கு சந்தேகம் வந்தால் உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளிக்கலாம்.

தமிழகம் முழுக்க புகார் தெரிவிப்பதற்காக, 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையம் புகார் எண்ணை அளித்துள்ளது. இந்த நம்பருக்கு ஃபோன் செய்தோ, வாட்ஸப்பிலோ புகார் அளிக்கலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர்கள் உள்ளனர். அவர்களிடமும் புகார் தெரிவிக்கலாம்.

பொதுவாகவே கடல் மீன்களில்தான் ஃபார்மலின் கலக்கப்படுகிறது. ஆற்று மீன், குளத்து மீன்கள் அன்றைக்கே விற்பனை செய்யப்படுவதால் ஃபார்மலின் கலக்கப்படுவதில்லை. ஆனால், கடல் மீன்கள் அப்படியல்ல. மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் எடுத்துச்செல்லப்படும்போது கெட்டுப்போகாமல் இருக்க ஃபார்மலின் கலக்கப்படுகிறது. தண்ணீரில் ஃபார்மலினை கலந்து மீன்களை அப்படியே கொட்டி எடுக்கிறார்கள். இல்லையென்றால், ஃபார்மலின் கலந்த நீரைத் தெளிக்கிறார்கள்.

 இப்படி ரசாயனம் கலப்பவர்களுக்கு தர நிர்ணயச் சட்டப்பிரிவு 55 வது பிரிவின் படி முதலில் இரண்டு வார அவகாசம் கொடுத்து ”மீன்களில் ஃபார்மலின் கலக்கக்கூடாது. சுகாதாரமான முறையில் விற்கவேண்டும்” என்று நோட்டிஸ் அனுப்பப்படும். அந்த நோட்டிஸை கடைப்பிடிக்காமல் மீண்டும் இதே தவறைச் செய்தால் உணவு பாதுகாப்பு துறையினர் 2000 ரூபாய் வரை அபராதம் விதிப்பார்கள். அபராதம் விதித்தும் கேட்கவில்லை என்றால், மீன்களின் மாதிரிகளை எடுத்து உணவு பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பி சான்றிதழ் வாங்கி நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்வார்கள். குறைந்தப்பட்சம் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்” என்று எச்சரிக்கை செய்து பேசுகிறார் ரமேஷ் பாபு.

(டாக்டர் புகழேந்தி)

"ஃபார்மலின் கலந்த மீனை உட்கொள்வதால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகள் என்ன?” என்பது குறித்து பிரபல மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டபோது, "ஃபார்மலின் (Formal Dehyde) என்பது ஒரு கெமிக்கல். எல்லா வேதிப்பொருட்களுக்கும் இதனுடையத் தன்மை கிடையாது. ஃபார்மலினை முதன்முதலில் எகிப்து நாட்டிலுள்ள பிரமிடில் மன்னர்களின் இறந்த உடல்களை பதப்படுத்தவே பயன்படுத்தினார்கள். பாக்டீரியா கிருமிகள் எளிதில் தாக்காதவாறு பாதுகாக்கும் திறன் ஃபார்மலினுக்கு உண்டு. எளிதில் கெட்டுப்போகாது என்பதால் மன்னர்களின் உடலுக்கு ஃபார்மலினை பயன்படுத்தினார்கள். இறந்த மனிதர்களையும் மீனையும் பதப்படுத்த ஐஸ் வைத்தால் இரண்டு வாரங்கள்தான் தாங்கும். அதுவே, ஐஸ்கட்டிகளுக்குப் பதில் ஃபார்மலினைச் சேர்த்தால், எவ்வளவு சேர்க்கிறோமோ, அதனைப் பொறுத்து கெடாமல் இருக்கும்.

ஏற்கெனவே, உணவுப் பொருட்களில் ஃபார்மலினை பயன்படுத்தினால் புற்றுநோய் அபாயம் உண்டு என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது. ஃபார்மலின் கலந்த மீனை உட்கொள்வதால் உடனடி விளைவுகளும் நீண்டகால விளைவுகளும் உடலில் ஏற்படுகின்றன. கண்களில் எரிச்சல், தோலில் எரிச்சல், தொண்டை எரிச்சல், வயிற்றெரிச்சல், குமட்டல், வாந்தி, மயக்கம் போன்றவை உடனடி விளைவுகள். அதுவே, தொடர்ச்சியாக வருடக்கணக்கில் ஃபார்மலின் கலந்த மீன்களை உண்டால் புற்றுநோய், குறிப்பாக ரத்தப் புற்றுநோய், ஈரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு போன்றவை நீண்டகால விளைவுகளாக மனிதர்களைத் தாக்கும்.

  ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மீன்களைக் கொண்டு செல்லும்போதுதான் ஃபார்மலினின் தேவை அதிகரிக்கிறது. ஆனால், வியாபாரிகள் மீன்கள் விலை எங்கு அதிகமாக போகிறது, எங்கு தேவை அதிகமாக இருக்கிறது என்பதையே லாபநோக்கில் பார்க்கிறார்கள். மீன்களை ஏலம் எடுத்தபிறகு ஃப்ரெஷ்ஷாக இருக்கவேண்டும் என்பதற்காகவே அதிகம் சேர்க்கிறார்கள். முடிந்தளவிற்கு உள்ளூர் சந்தைகளிலேயே விற்றால் இப்பிரச்னை குறைய வாய்ப்புள்ளது.

வெளிநாடுகளில் உணவுப்பொருளை இறக்குமதி செய்யும்போது சோதனை செய்தபிறகே எடுக்கிறார்கள். இல்லையென்றால், தடை செய்து விடுவார்கள். ஆனால், இங்கு அப்படி கிடையாது. சென்னையில் சில இடங்களில் அதிகம் ஃபார்மலின் கெமிக்கல் கிடைக்கும். எளிதாக வாங்கிவிடலாம். இதற்கெல்லாம், அரசு விதிமுறைகளை கொண்டுவரவேண்டும். இந்தியாவில் முன்பிருந்த அளவை விட ரத்தப் புற்றுநோய் அதிகரித்துக்கொண்டேச் செல்கிறது. எனவே கவனம் அவசியம்' என்கிறார் அக்கறையுடன்.

(நுகர்வோர் ஆர்வலர் சோமசுந்தரம்)

”புற்றுநோயை உண்டாக்கும் ஃபார்மலின் வேதிப்பொருளை தமிழக மீன்களில் கலக்கிறார்கள்” என்று கேரள உணவுத்துறையினர் தமிழக மீன்களுக்கு தடைப்போட்டு சர்ச்சையான பிறகும் ஃபார்மலின் கலக்கப்படுவது தொடர்கிறதே என்னதான் தீர்வு?” என்று நுகர்வோர் ஆர்வலர் சோமசுந்தரத்திடம் கேட்டபோது, ”இரண்டு வகைகளில் உணவு பதனப்பொருட்கள் பயன்படுத்த அரசு அனுமதித்துள்ளது. உப்பு, சர்க்கரை போன்ற இயற்கையான பதனப்பொருட்கள் கிளாஸ் 1 என்று அழைக்கப்படுகிறது. சர்பத், பெப்சி, கொக்ககோலா போன்றவை கெடாமல் இருக்க கெமிக்கல் கலக்கப்படுகிறது. இவை கிளாஸ் 2-வில் வந்துவிடும். ஆனால், ஃபார்மலினை எந்த உணவுப் பொருட்களிலும் கலக்க அரசு அனுமதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது, இந்தியாவில்தான் மீன்களில் ஃபார்மலினைக் கலக்கிறார்கள்.
உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எந்த உணவு பொருட்களாக இருந்தாலும் பொதுமக்களே புகார் கொடுக்கும்வரை காத்திருக்காமல், உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி கண்காணிப்பு உணவு மாதிரிகளை எடுத்து அடிக்கடி செய்யவேண்டும். புகார் வந்தால் மட்டுமே அல்லது விபரீதம் நடந்தால் மட்டுமே அந்த சமயத்தில் நடவடிக்கை எடுக்கிறார்கள். முன்கூட்டியே எடுப்பதில்லை. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உள்ள மாவட்ட நியமன அலுவலர்களிடம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி பெற்றுவிட்டு மாதிரிகள் எடுத்து சோதனை செய்து நடவடிக்கை எடுக்கலாம். சென்னையில் மட்டுமே உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் 20 பேரும் தமிழகம் முழுக்க 350 பேரும் இருக்கிறார்கள். இவர்களின் அலட்சியப் போக்கும், நிர்வாக குளறுபடிகளும்தான் இதற்கு காரணம்” என்கிறார் அவர்.

(இந்திய மீனவர் சங்கத் தலைவர் எம்.டி தயாளன்)

“மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க மீனவர்கள் ஃபார்மலின் கலக்கிறார்களா? என்பதை அறிய ராயபுரத்தைச் சேர்ந்த இந்திய மீனவர் சங்கத் தலைவர் எம்.டி தயாளளனிடம் பேசினோம். 

     ”தமிழக மீனவர்கள் ஃபார்மலின் கலந்து மீன்களை விற்க 1000 சதவீதம் வாய்ப்பில்லை. எங்களுக்கு லோக்கலில் கொடுப்பதற்கே மீன்கள் சரியாக கிடைப்பதில்லை. மக்கள் தேவைகளுக்கு கொடுப்பதில்லை என்பதாலேயே கர்நாடகா, குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து மீன்கள் இங்கு வருகின்றன. அம்மாநிலங்களில், மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. எங்கு அதிக ஆறுகளும் முகத்துவாரங்கள் அடைக்கப்படாமலும் இருக்கிறதோ அங்கெல்லாம் மீன்வளம் அதிகரிக்கும். ஆனால், தமிழகத்தில் அப்படி கிடையாது. வெளிமாநிலங்களில் மீன்கள் அதிகம் கிடைப்பதால் விலைக்குறைவாக விற்கிறார்கள் என்பதால், இங்கிருப்பவர்கள் நான்கைந்து நாட்கள் லாரிகளில் ஏற்றிக்கொண்டு வந்து சப்ளை செய்கிறார்கள். அப்படி, கொண்டுவரும் மீன்களை வானகரம், புழல், சிந்தாதரிப்பேட்டை போன்ற பெரிய மீன் மார்கெட்டுகளில் குறைந்த விலைக்கு விற்கிறார்கள். மாவட்டங்களுக்கும் செல்கிறது.



தமிழகத்தில் சரியாக மீன்கள் கிடைப்பதில்லை என்பதால் நாங்கள் ஒடிசா, கொல்கத்தா வரை ஆயிரக்கணக்கான லிட்டர் டீசல் போட்டுக்கொண்டுச் சென்று மீன்களை பிடித்து வருகிறோம். அதனால், அதிக விலைக்கு விற்கிறோம். ஏற்கெனவே, ஃபார்மலின் பிரச்னை வந்தபோது அதிகாரிகள் ஆய்வு செய்தனர். யாரும் அப்படி செய்தோம் என்று உறுதியாகவில்லை. வெளிமாநிலங்களிருந்து வரும் மீன்களில்தான் ஃபார்மலின் கலந்து எடுத்து வருகிறார்கள். நாங்கள் மீன் பிடித்துக்கொண்டு வருவதற்கு 15 நாட்கள் ஆவதால், மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க கேன் சிஸ்டம் பயன்படுத்துகிறோம். காற்று கூட புகாதவாறு இருக்கும் ஃபைபர் ரூமில் கேன்களில் ஐஸ்கட்டிகளையும் மீன்களையும் போட்டுவிடுவோம். அந்த மீன்கள் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும். தமிழக மீனவர்கள் மீது பழிபோடுவது நியாயமற்றது. அரசு ஃபார்மலின் கலக்கும் வியாபாரிகள் மீது கடுமையாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com