செங்கோட்டையின் வரலாறு : கொடியேற்றும் வழக்கத்தின் பின்னணி

செங்கோட்டையின் வரலாறு : கொடியேற்றும் வழக்கத்தின் பின்னணி

செங்கோட்டையின் வரலாறு : கொடியேற்றும் வழக்கத்தின் பின்னணி
Published on

நாடு சுதந்திரமடைந்து 71 ஆண்டுகள் முடிந்துவிட்டன. மாபெரும் மனித வளம், தொழில்நுட்ப வளர்ச்சி, ராணுவ பலம் என எல்லா துறையிலும் வியக்க வைத்து வரும் இந்தியா, 72 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றும் வழக்கம் ஏன் கடைபிடிக்கப்படுகிறது? சுதந்திர தின கொண்டாட்டத்தில் கடைபிடிக்கப்படும் மரபுகள், நடைமுறைகள் என்னென்ன? விரிவாக பார்க்கலாம்.

வரலாற்றில் இடம்பிடித்திருக்கும் செங்கோட்டை

நாட்டின் விடுதலையில் செங்கோட்டையின் பங்கு. நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு தொடங்கி தற்போதைய பிரதமர் மோடி வரையில் செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றுவதே மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முகலாய பேரரசர் ஷாஜஹான் ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு‌ தலைநகரை மாற்றிய போது 1639 ல் செங்கோட்டையை கட்டினார். எனினும் சுதந்திர தினத்தன்று பிரதமர் தேசியக்கொடியை ஏற்றிவைக்கும் லாஹோரியா வாயில் பகுதியை பேரரசர் ஷாஜஹானின் மகன் ஔரங்கசீப் கட்டினார்.

245 ஏக்கர் பரப்பிலான செங்கோட்டைக்கும், இந்திய சுதந்திர போராட்டத்துக்கும் நிறைய தொடர்புக‌ள் உள்ளன. 1857 ஆம் ஆண்டு வெள்ளையர் அறிமுகப்படுத்திய துப்பாக்கித்தோட்டாக்களின் உறைகளில் மாடு மற்றும் பன்றிக்கொழுப்பு இருந்தது. இதனை பல்லால் கடித்து அகற்ற இந்திய வீரர்களுக்கு ஆங்கிலேய அரசு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீரட்டைச்சேர்ந்த மங்கள்பாண்டே என்ற வீரர் ஆங்கிலேயே அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றார். இதற்காக மங்கள் பாண்டேவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது‌ வடமாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன.

அப்போது கலகக்காரர்கள் என்று ஆங்கிலேயர்களால் தேடப்பட்டவர்கள் அனைவரும் தஞ்சம் புகுந்தது டெல்லி செங்கோட்டையில்தான். கலகக்காரர்களுக்கு கடைசி முகாலாய பேரரசர் பகதூர் ஷா ஜாபர், புரட்சியாளர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவினார். விரைவிலேயே டெல்லி செங்கோட்டை ஆங்கிலேயருக்கு தலைவலியாக மாறியது.பின்னர் டெல்லியில் உள்ள ஹூமாயூன் கல்லறையில் ஒளிந்து கொண்ட பகதூர் ஷா, தனது வாரிசுகளை ஆங்கிலேயர் சுட்டுக்கொன்றதையடுத்து அவர்களிடம் சரணடைந்‌தார். அதன் தொடர்ச்சியாக பர்மாவுக்கு அவர் நாடு கடத்தப்பட்டார். பின்னர் அங்கேயே அவர் உடல் நலிவுறுற்று மரணமடைந்தார்.

சிப்பாய் புரட்சிக்குப்பிறகே கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்து, நேரடியாக இங்கிலாந்து அரசியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் நாடு வந்தது நாட்டின் விடுதலையில் செங்கோட்டை முக்கியத்துவம் பெறுவதற்கான மற்றொரு முக்கிய காரணம், அங்கு இந்திய ராணுவ வீரர்கள் மீது நடந்த விசாரணை. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானுக்கு ஆதரவாக போர் புரிந்ததாகக்கூறி நாடு முழுவதும் சுபாஷ் சந்திரபோசின் இந்திய ராணுவ படையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். முக்கியமாக ராணுவ அதிகாரி‌களான நவாஸ் கான், பிரேம் குமார் சாகல், குர்பாக்ஸ் சிங் தி ல்லான் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி செங்கோட்டையில் உள்ள படிக்கிணறுகளில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பம்பாய் கலகம் என அடுத்தடுத்து நாடு முழுவதும் வன்முறைகள் ஏற்பட்டு ஆங்கிலேய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத எழுச்சியை ஒற்றுமையை வெகுஜன போராட்டத்தை செங்கோட்டையில் நடத்தப்பட்ட விசாரணைகள் உருவாக்கியிருந்தன. இப்படி பல காரணங்களால்தான் செங்கோட்டை முக்கியத்துவம் பெறுவதற்கான முக்கிய காரணமாக அமைந்து இன்றுவரை ஆகஸ்ட் 15 ஆம் தேதி தேசியகொடியை பிரதமர் ஏற்றி வைத்து உரையாற்றுவதற்கான அடித்தளமாக அமைந்தது. பல போர்கள், போராட்டங்கள், கலகங்கள், புரட்சிகள், தியாகங்களின் மேல் கட்டமைக்கப்பட்ட சுதந்திரத்தை பேணிக்காப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com