சிறப்புக் களம்
ஹிட் மேனுக்கு இன்று பிறந்த நாள் - ‘ஆஃப் ஸ்பின்னர் முதல் கேப்டன் வரை’ சுவாரஸ்ய தகவல்கள்
ஹிட் மேனுக்கு இன்று பிறந்த நாள் - ‘ஆஃப் ஸ்பின்னர் முதல் கேப்டன் வரை’ சுவாரஸ்ய தகவல்கள்
இந்திய அணியின் ஹிட் மேன் ரோகித் சர்மாவுக்கு இன்று 31வது பிறந்தநாள். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரராக ரோகித் சர்மா திகழ்ந்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். ஒருநாள் போட்டியில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர், ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்(264) அடித்த வீரர் என்ற பல்வேறு சாதனைகளையும் தன் வசம் வைத்துள்ளவர்.
அவரை பற்றிய தகவல்கள்:-
- முழுப் பெயர் ரோகித் குருநாத் சர்மா - ரசிகர்கள் அன்பாக ஹிட் மேன் என்று அழைக்கிறார்கள்
- நாக்பூரில் பிறந்த ரோகித் சர்மா தனது இளம் பிராயத்தில் தாத்தா-பாட்டி வீட்டில் தங்கி படித்தார். தந்தையின் குறைவான வருமானமே இதற்கு காரணம். ஸ்காலர்ஷிப் வாங்கிதான் படித்தார். ரோகித்தின் சகோதரர் விஷால் சர்மா
- தன் மாமாவிடம் பெற்ற பணத்தைக் கொண்டு 1999-ல் கிரிக்கெட் முகாமில் முதலில் ரோகித் சேர்ந்தார்.
- ஆஃப் ஸ்பின்னராக தான் ரோகித் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார்.
- பயிற்சியாளர் தினேஷ் லேட்தான் ரோகித்திடம் இருந்த பேட்டிங் திறமையை கண்டறிந்து வெளிக் கொண்டு வந்தார்.
- 2005 மார்ச் மாதம் குவாலியரில் நடைபெற்ற தியோதர் டிராபியில் தான் லிஸ்ட் ஏ அணிக்காக ரோகித் முதலில் களமிறங்கினார். அந்தத் தொடரின் ஒரு போட்டில் 123 பந்துகளில் 142 ரன்கள் குவித்து அசத்தினார்.
- ஜூலை 2006ல் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் தரப் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக ரோகித் களமிறங்கினார்.
- 2006-07 ஆண்டில் மும்பையில் நடைபெற்ற ராஞ்சி டிராபியில் முதன்முதலாக களமிறங்கினார்.
- 2007-ம் ஆண்டு அயர்லாந்து சுற்றுப் பயணத்தின் போதுதான் ரோகித் சர்வதேசப் போட்டிக்காக முதலில் தேர்வு செய்யப்பட்டார். பெல்பாஸ்ட்டில் நடைபெற்ற போட்டியில்தான் அவர் களமிறங்கப்பட்டார். ஆனால் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
- 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தன்னுடைய திறமைய காட்டினார்
- 2007ல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் அரைசதம் அடித்தார்.
- 2008-ல் சுரேஷ் ரெய்னா, விராட் கோலி வருகையால் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிட்டவில்லை.
- 2009-ல் ராஞ்சி டிராபியில் முச்சதம் அடித்ததன் மூலம் மீண்டும் வங்கதேசத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடருக்கான ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார்.
- 2010-ம் ஆண்டில் டெஸ்ட் அணிக்காக அவர் தேர்வு செய்யப்பட்டாலும் விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டவேயில்லை.
- 2010-ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
- தென்னாப்பிரிக்கா தொடரில் சரியாக விளையாடாததால் 2011 உலகக் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
- 2011-ல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடி முத்திரை பதித்தார்.
- 2013 சாம்பியன் டிராபியில் ஷிகார் தவானுடன் தொடக்க வீரராக முதன்முறையாக களமிறங்கினார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 141*, 209 ரன்கள் அடித்து அசத்தினார். ஒரே போட்டியில் 16 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார்.
- 2013-ல் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார். இது சச்சினை வழியனுப்பும் போட்டி. முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தார்.
- 2014-ல் முதல் வீரராக 250 ரன்களுக்கு மேல் குவித்தார். கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இந்தப் போட்டியில் 264 ரன்கள் அடித்தார்.
- 2015ல் தென்னாப்பிரிக்கா தொடரில் இரண்டாவது இந்திய வீரராக டி20 போட்டியில் சதம் அடித்தார்.
- 2015-16 ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் அடுத்தடுத்து இரண்டு சதங்களும், இறுதிப் போட்டியில் 99 ரன்களும் அடித்து அசத்தினார். 441 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது பெற்றார்.
- 2017-ல் மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் தனது மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். அன்று அவரது திருமண நாள்.
- 2017-ல் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் 35 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.
- 2017-ல் இலங்கை சுற்றுப் பயணத்தில் ஒருநாள், டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வெற்றியை தேடித் தந்தார்.
அரிய தகவல்கள்:-
- ரோகித்தின் தாய் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் சற்றே தெலுங்கு பேசுவார்
- ஒரு முறை வீரேந்திர சேவாக்கை பார்ப்பதற்காக பள்ளியை கட் அடித்துவிட்டு சென்றார்
- ரோகித் ஒரு சைவர். இருப்பினும் முட்டைகள் அதிகம் சாப்பிடுவார். ஆனால் வீட்டில் முட்டை சாப்பிட மாட்டார்.
- ஒரு சமயம் நண்பர் வைத்த போட்டியில் 45 முட்டைகளை ரோகித் சாப்பிட்டார்
- ரோகித் ஒரு ஞாபக மறதிக்காரர். ஹோட்டல், விமானங்களில் அடிக்கடி தனது பொருட்களை மறந்து வைத்துவிடுவார்.
- ஒரு முறை தனது திருமண மோதிரத்தையே ஹோட்டலில் மறந்து சென்றுவிட்டார்.
- ஒருமுறை விராட் கோலி கூறுகையில், ‘ரோகித் ஒரு தூக்க பிரியர்’ என்றார்.
- 6 ஆண்டுகள் காதலித்து ரித்திகாவை 2015 டிசம்பர் 13ல் கரம்பிடித்தார்
- ரித்திகா ஒரு விளையாட்டு நிறுவன மேனேஜர். ரோகித் சர்மாவும் அவரது வாடிக்கையாளராக இருந்தார்.
- ரோகித் ரியல் மேட்ரிட் கால்பந்து அணியின் ஆதரவாளர்
- ரோகித்தின் ஜெர்ஜி எண் 45.
- ரோகித் சர்மா பீட்டா அமைப்பில் ஒரு உறுப்பினராக உள்ளார்
- ரெய்னாவுக்கு அடுத்து இராண்டாவது பேட்ஸ்மேனாக மூன்று வகையான போட்டிகளிலும் சதம் அடித்துள்ளார்
- ஒரு இன்னிங்சில் அதிக பவுண்டரிகள் அடித்தவர். பவுண்டரிகள் மூலம் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்தவர். ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்
- பெர்த் நகரில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ரோகித்
- டெஸ்டில் அறிமுகமான அடுத்தடுத்த போட்டியில் செஞ்சுரி அடித்த மூன்றாவது இந்தியர்
- ரோகித் சர்மாவுக்கு 2015-ல் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
- ஐபிஎல் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன்
- ஐபிஎல் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர்
- டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்