\
Groundwater Crisis: Science-Backed Solutions Explained
GroundwaterAI

நிலத்தடி நீர் குறைவு.. அறிவியல் கூறும் தீர்வுகள்!!

நம் முன்னோர்கள் நீரை ஒரு இயற்கை வளமாக மட்டும் கருதவில்லை; உயிரின் அடையாளமாகக் கருதினர். அதனால்தான் அவர்கள் நீர்நிலைகளை வழிபட்டனர்; குளங்களை வெட்டினர்; ஏரிகளைப் பராமரித்தனர்.
Published on

கட்டுரையாளர் : அ . இராமதாஸ்

நீரைச் சேமிப்பதே நாளைய தலைமுறையைச் சேமிப்பதாகும். “நீரின்றி அமையாது உலகு" என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் உலகிற்குச் சொல்லிய எச்சரிக்கை, இன்று அறிவியல் உலகம் ஒலிபெருக்கியில் மீண்டும் மீண்டும் அறிவித்துக் கொண்டிருக்கிறது. மனித நாகரிகத்தின் முதுகெலும்பாக விளங்கிய நீர்வளம், இன்று உலகம் முழுவதும் மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் வேகமாகக் குறைந்து வருவது சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல; அது உணவுப் பாதுகாப்பு, பொருளாதாரம், பொதுச் சுகாதாரம் மற்றும் எதிர்கால தலைமுறையின் வாழ்வாதாரத்தையே தொட்டுச் செல்லும் பெரும் கேள்வியாகும்.

தமிழர் நாகரிகம் நீரை மையமாகக் கொண்ட நாகரிகம். ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஊரணிகள், கால்வாய்கள் என மழைநீரின் ஒவ்வொரு துளியையும் சேமிக்கும் அறிவு நம் முன்னோர்களிடம் இருந்தது. கரிகால சோழன் கட்டிய கல்லணை முதல் கிராமக் குளங்கள் வரை அனைத்தும், "மழை பெய்யும் காலத்தில் சேமி; வறட்சி காலத்தில் பயன்படுத்து" என்ற அறிவியல் சிந்தனையின் சான்றுகளாகும்.

நீர் பற்றாக்குறை
நீர் பற்றாக்குறைPt web

ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. நகரமயமாக்கல், மக்கள் தொகைப் பெருக்கம், ஆழ்துளைக் கிணறுகளின் கட்டுப்பாடற்ற பயன்பாடு, குளங்கள் மற்றும் ஏரிகளின் ஆக்கிரமிப்பு, காடுகள் குறைதல், பருவநிலை மாற்றம், ஒழுங்கற்ற பாசன முறைகள் ஆகியவை நிலத்தடி நீர்மட்டத்தை ஆண்டுதோறும் கீழ்நோக்கித் தள்ளுகின்றன. நிலத்தடி நீர் என்பது பூமிக்கடியில் மறைந்திருக்கும் ஒரு "நீர் வங்கி". மழைநீர் நிலத்தில் ஊடுருவி மணல், சரளை, பாறை இடைவெளிகளில் சேமிக்கப்படுவதுதான் நிலத்தடி நீர். இந்த வங்கியில் நாம் தொடர்ந்து பணத்தை எடுத்துக் கொண்டே இருந்து, புதிய சேமிப்பு செய்யாவிட்டால் ஒரு நாள் அது காலியாகிவிடும். இன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நிகழ்வதும் இதுவே.

ஒரு காலத்தில் 30 அல்லது 40 அடி ஆழத்தில் கிடைத்த நீர், இன்று 600, 800, சில இடங்களில் ஆயிரம் அடிக்கும் கீழே சென்றுவிட்டது. இதன் விளைவாக விவசாயச் செலவு உயர்கிறது; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது; கடலோர மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீரின் தரம் கெடுகிறது; மண்ணின் உப்புத்தன்மையும் அதிகரிக்கிறது.

அறிவியல் இந்தப் பிரச்சினைக்கு பல தெளிவான தீர்வுகளை முன்வைக்கிறது.

முதலாவதாக, மழைநீர் சேகரிப்பு என்பது மிகவும் எளிமையானதும் மிகச் சிறந்ததுமான தீர்வு. வீடுகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என ஒவ்வொரு கட்டிடமும் மழைநீரை நிலத்திற்குள் செலுத்தும் அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். ஒரே ஒரு பருவமழை பல மாதங்களுக்கான நிலத்தடி நீரை நிரப்பக்கூடிய சக்தி கொண்டது.

இரண்டாவதாக, தமிழ்நாட்டின் பாரம்பரிய ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் மற்றும் ஊரணிகளை மீட்டெடுப்பது காலத்தின் கட்டாயமாகும். மழைநீர் முதலில் நீர்நிலைகளில் தேங்க வேண்டும்; பின்னரே அது மெதுவாக நிலத்திற்குள் ஊடுருவி நிலத்தடி நீரை நிரப்பும்.

மூன்றாவதாக, சொட்டு நீர் மற்றும் தெளிப்பு பாசனம் போன்ற நுண்ணீர்ப்பாசன முறைகளை விரிவுபடுத்த வேண்டும். பாரம்பரிய வெள்ளப் பாசனத்தில் பெருமளவு நீர் வீணாகிறது. ஆனால் சொட்டு நீர்ப்பாசனம் தாவரத்தின் வேருக்கு தேவையான அளவு நீரை மட்டும் வழங்குவதால் நீர்ச் சிக்கனம் பெருமளவில் ஏற்படுகிறது.

நான்காவதாக, பயிர் திட்டமிடல் அவசியம். தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் அதிக நீர் தேவைப்படும் பயிர்களைத் தவிர்த்து, குறைந்த நீரில் வளரும் பயிர்களை ஊக்குவிக்க வேண்டும். காலநிலைக்கு ஏற்ற சாகுபடி முறைகளே எதிர்கால விவசாயத்தின் அடித்தளமாக அமையும்.

ஐந்தாவதாக, செயற்கை நிலத்தடி நீர் நிரப்பும் (Artificial Recharge) தொழில்நுட்பங்களைப் பரவலாகப் பயன்படுத்த வேண்டும். ஊடுருவல் கிணறுகள், ரீசார்ஜ் குழிகள், பர்கலேஷன் குளங்கள், தடுப்பணைகள், சிறிய நீர்த்தேக்கங்கள் போன்ற அமைப்புகள் மூலம் மழைநீரை விரைவாக நிலத்திற்குள் செலுத்த முடியும்.

Tamil Nadu Ground water Crisis 9 Districts in Red Zone
நிலத்தடி நீர்X

ஆறாவதாக, நகரங்களில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை தொழிற்சாலைகள், பூங்காக்கள் மற்றும் சில வேளாண் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தும் நடைமுறை அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் குடிநீரின் மீது ஏற்படும் அழுத்தம் குறையும்.

இன்று உலகம் முழுவதும் செயற்கைக்கோள்கள், தொலை உணர்வு (Remote Sensing), புவியியல் தகவல் அமைப்பு (GIS), செயற்கை நுண்ணறிவு (AI), தானியங்கி சென்சார்கள் ஆகியவை நிலத்தடி நீரின் அளவையும் பயன்பாட்டையும் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய நவீன தொழில்நுட்பங்களை தமிழ்நாட்டிலும் மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து பயன்படுத்தினால், நீர்வள மேலாண்மை மேலும் அறிவியல் அடிப்படையில் அமையும்.

இதனுடன் மக்கள் பங்களிப்பும் இன்றியமையாதது. மழைநீரை வீணாக்காமல் சேமிப்பது, நீர் கசிவுகளைத் தடுப்பது, மரங்களை வளர்ப்பது, ஏரிகள் மற்றும் குளங்களைப் பாதுகாப்பது போன்ற சிறிய செயல்களே பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

நம் முன்னோர்கள் நீரை ஒரு இயற்கை வளமாக மட்டும் கருதவில்லை; உயிரின் அடையாளமாகக் கருதினர். அதனால்தான் அவர்கள் நீர்நிலைகளை வழிபட்டனர்; குளங்களை வெட்டினர்; ஏரிகளைப் பராமரித்தனர். அந்தப் பாரம்பரிய அறிவையும் நவீன அறிவியலையும் இணைப்பதே இன்று நாம் செய்ய வேண்டிய மிகப் பெரிய பணியாகும்.

நிலத்தடி நீர் என்பது நமக்குச் சொந்தமான சொத்து அல்ல; எதிர்கால தலைமுறையிடமிருந்து நாம் கடனாகப் பெற்றிருக்கும் இயற்கைச் செல்வம். அந்தச் செல்வத்தை முழுவதுமாகச் செலவழித்துவிட்டு அடுத்த தலைமுறைக்குப் பாழடைந்த நிலத்தை விட்டுச் செல்ல நமக்கு உரிமை இல்லை.

திருவள்ளுவர் கூறிய "நீரின்றி அமையாது உலகு" என்ற வரி ஒரு இலக்கியச் சொல் மட்டுமல்ல; அது காலத்தை வென்ற அறிவியல் உண்மை. அந்த உண்மையை உணர்ந்து, ஒவ்வொரு மழைத்துளியையும் நிலத்திற்குள் செலுத்தும் பணியில் அரசு, அறிவியல் உலகம், விவசாயிகள், தொழில்துறையினர், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் தமிழ்நாட்டின் நிலத்தடி நீருக்கு மீண்டும் உயிர் ஊட்ட முடியும்.

நீரை பாதுகாப்பது சுற்றுச்சூழலைக் காப்பதல்ல; நமது சந்ததியினரின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதாகும்.

Groundwater Crisis: Science-Backed Solutions Explained
பயனற்ற கைபேசி, மடிக்கணினியை குப்பையில் வீசுகிறீர்களா? எதிர்வரும் பேராபத்து!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com