அரசியலில் தடம் பதித்த முதல் பெண்ணை கவுரவப்படுத்திய கூகுள்!

அரசியலில் தடம் பதித்த முதல் பெண்ணை கவுரவப்படுத்திய கூகுள்!
அரசியலில் தடம் பதித்த முதல் பெண்ணை கவுரவப்படுத்திய கூகுள்!

இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர், முதல் பெண் அரசியல்வாதியான கமலாதேவி சட்டோபாத்யாய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் அவரின் புகைப்படத்தை முகப்பில் வைத்து பெருமைபடுத்தியுள்ளது.

இன்றைய இளம் பருவத்தினருக்கு யார் இந்த கமலா சட்டோபாத்யாய்? என்ற கேள்வி எழுவதுண்டு. இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல்வாதி, சங்கீத நாடக அகாதெமியின் துணைத்தலைவர், பாரதீய நாட்டியசங்கத்தின் தலைவர், அகில இந்திய கைவினைஞர்கள் வாரியத் தலைவர், யுனெஸ்கோவின் உறுப்பினர் எனப் பல பதவிகளை வகித்து பல்கலை வித்தகராக விளங்கியவர் இந்த கமலாதேவி.   

கமலாதேவி ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி 1903 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தார். இன்று கமலாதேவிக்கு 115வது பிறந்த நாள். இதனை கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது. கமலாதேவி, தனது தந்தையை 7 வயதில் இழந்தார். அதன்பின் 14 வயதில் திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளிலேயே தனது 16வது வயதில் கணவனையும் இழந்தார். இதையடுத்து தனது 20 வயதில் எழுத்தாளர், கலைஞர்,  நடிகர் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஹரிந்தரநாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். விதவையான கமலாதேவின் இரண்டாவது திருமணத்துக்கு சமூகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்த தம்பதியினருக்கு ஒரே ஒரு மகன் ராமா. பின்னர் கமலா தேவிக்கும் அவரது கணவர் ஹரிந்தரநாத்துக்கும் இடையே சில பிரச்னைகளால் விவாகரத்தானது. பிற்காலத்தில் இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முதன்முதலில் ஊமைப்படங்களில் தான் இவரின் நடிப்பு பயணம் தொடங்கியது. கமலாதேவி பத்ம விபூஷண் விருது, பத்ம பூஷண் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். மல்டி டாஸ்கராக விளங்கிய கமலாதேவியின் புகைப்படத்தை பல கலைகளுக்கு சொந்தக்காரர் என்பதை உணர்த்தும் விதமாக ஓவியமாக வரைந்து கூகுளின் முகப்பு பக்கத்தில் வைத்து கூகுள் நிறுவனம் கவுரப்படுத்தியுள்ளது. 

பல எதிர்ப்புகளைகளை கடந்து, லண்டனுக்கு படிக்கச் சென்ற கமலா தேவி பின்னர் 1927 - ல் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றார். பின்னர் இந்தியா திரும்பியதும் சேவாதளத்தளம் என்னும் காந்திய அமைப்பில் சேர்ந்தார். காந்தியுடன் இணைந்து உப்பு சத்தியகிரக போராட்டத்தில் பங்கேற்றார். முதன்முறையாக சட்டமன்றத்தில் ஒரு பெண்ணாக சென்னை மாகாண சட்டசபைக்கு போட்டியிட்ட இவர், தேர்தலில் தோல்வியை தழுவினார். இருப்பினும் கமலாதேவி, தனது அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்ந்தார். சமூகத்தில் பெண்களின் கல்வி, உரிமைக்காக தனது கருத்துகளை கலைகளின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் கமலாதேவி. டெல்லியில் ஹோம் சயின்ஸ் என்ற கல்லூரியை பெண்களுக்காக தொடங்கினார். பெண்ணியத்துக்கு குரல் கொடுத்து கமலாதேவி சுமார் 26 நூல்களை எழுதியுள்ளார். இவர் தனது 85 வது வயதில் காலமானார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com