"திருவிழாவுக்கு செல்வதும் திரையரங்குக்கு செல்வதும் ஒன்றுதான்" நினைவுகளை பகிர்ந்த நட்டி !

"திருவிழாவுக்கு செல்வதும் திரையரங்குக்கு செல்வதும் ஒன்றுதான்" நினைவுகளை பகிர்ந்த நட்டி !
"திருவிழாவுக்கு செல்வதும் திரையரங்குக்கு செல்வதும் ஒன்றுதான்" நினைவுகளை பகிர்ந்த நட்டி !


கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரையரங்கிலேயே படம் பார்த்து படம் பார்த்து பூத்துப் போனக் கண்கள், இன்று வேறு வழியில்லாமல் ஓடிடியில் விழிபிதுங்க அமர்ந்து இருக்கின்றன. இந்நிலையில் மத்திய அரசு வரும் 15 ஆம் தேதியிலிருந்து 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையங்குகளை இயக்க அனுமதித்துள்ளது.

இந்தத்தருணத்தில் இந்த அறிவிப்பு என்ன விதமாக அமைந்திருக்கிறது. திரையரங்கிற்கும் அவருக்கும் இருக்கும் தொடர்பு எவ்வளவு ஆழமானது என்பன குறித்து பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ் என்ற நட்டியை தொடர்பு கொண்டு பேசினேன்.

அவர் கூறும் போது “ நான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, பரமகுடியில் உள்ள தனலட்சமி திரையரங்கில் திரையிடப்பட்ட “யானை வளர்த்த வானம் பாடி மகன்” என்ற திரைப்படத்திற்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

அந்தப்படத்தில் இடம்பெற்றிருந்த யானை சம்பந்தமான காட்சிகளை பார்த்து நாங்கள் பயந்து விட்டோம். அந்தக்காலத்தில் திரையங்கிற்கு செல்வது என்றால் திருவிழாவிற்குச் செல்வது போல இருக்கும். வண்டிக்கட்டிக் கொண்டு செல்லும் அந்த அனுபவமே அலாதியானது.

அதேபோல மாதத்தின் முதல் வாரத்தில் வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பா படம் பார்க்க அழைத்துச் செல்வார். அதன் பின்னர் நகர வாழ்விற்கு வந்த பிறகு கல்லூரி வகுப்புகளைத் தவிர்த்து விட்டு பலப் படங்களை காண திரையரங்கிற்கு சென்றிருக்கிறேன்.

ஊரடங்கு காரணமாக திரையங்குகள் அடைக்கப்பட்டிருந்தது எனக்கும் மன வருத்தத்தைத் தந்தது. தற்போது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு மனதிற்கு மிகுந்த மன மகிழ்ச்சியை தந்துள்ளது. தினசரி வாழ்வில் நமது எல்லோருக்கும் மன அழுத்தம் இருக்கும். நாம் திரையங்கிற்குச் சென்று படம் பார்க்கும் போது அந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவர அந்தப்படம் பெரும் உதவிகரமாக இருக்கும். ஆகையால் திரையரங்கு அனுபவம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான அனுபவமாக கருதுகிறேன். 

திரைக்கலைஞனாக முதல் நாள் திரையிடப்படும் காட்சி எனக்கு மிக முக்கியமானது. முதல்நாளில் ரசிகர்கள் காட்சிகளுக்கு, காட்சி வெளிப்படுத்தும் உணர்வுகள் எனக்கு மிகப்பெரிய பாடம்” என்றார்.

நேற்று அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் இன்ஃபினிட்டி படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், அது குறித்து கேட்ட போது ஒரு மருத்துவ பிரச்னையை படம்  பேசும்” என முடித்துக்கொண்டார் நட்ராஜ்.

- கல்யாணி பாண்டியன் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com