நெருங்கும் பொதுத் தேர்வுகள்.. மாணவர்கள் செய்ய வேண்டியவை என்னென்ன.?

நெருங்கும் பொதுத் தேர்வுகள்.. மாணவர்கள் செய்ய வேண்டியவை என்னென்ன.?
நெருங்கும் பொதுத் தேர்வுகள்.. மாணவர்கள் செய்ய வேண்டியவை என்னென்ன.?

பள்ளி சேர்ந்த காலத்தில் இருந்தே அனைவரும் தேர்வுகளை சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் பொதுத்தேர்வு என்று வந்துவிட்டால் மட்டும் ஒரு பயம் தொற்றிக்கொள்கிறது. அதற்கு காரணம் பொதுத்தேர்வுதான் முக்கியமான தேர்வு. இதில் தேர்வாகவில்லை என்றால் வாழ்க்கையே போய்விடும். வாழவே முடியாது என்றெல்லாம் சில பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளை பயமுறுத்தி வைத்திருப்பதுதான்.

அந்த வகையில் இப்போதிலிருந்தே தேர்வுக்கான ஜுரம் மாணவர்கள் மத்தியில் ஆரம்பித்து விட்டது. பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவிகள் பலரும் எப்படி தேர்வை எதிர்கொள்வது என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல்13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்பது குறித்தும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் எந்த மாதிரியான கேள்விகள் இடம்பெறலாம் என்பது குறித்தும் ஆசிரியர்கள் ஆலோசனைகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர் வரதராஜன் கூறுகையில், “புத்தகத்தின் பின்பக்கத்தில் உள்ள கேள்விகள் தேர்வுகளில் இடம்பெறும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதுவும் இடம்பெறலாம். மாணவர்கள் சுயமாக சிந்தித்து பதிலளிக்கக்கூடிய வகையிலும் கேள்விகள் கேட்கப்படலாம். புத்தகத்தில் உள்ள கேள்விகளை மட்டுமே எதிர்பார்த்து சென்றால் தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் மட்டுமே பெற முடியும். புத்தகத்தில் உள்ள கேள்விகளை உள்ளார்ந்து படிப்பதால் மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற முடியும்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து ஆசிரியர் மலர்விழி கூறுகையில், “கையெழுத்து அழகாக இருந்தால் அதற்கு தனியாக மதிப்பெண்கள் கிடைக்கும். என்ன சொல்ல வருகிறார்களோ அதை மட்டும் சொல்ல வேண்டும். தேவையில்லாத கதையெல்லாம் சொல்லக்கூடாது. தலைப்புகளை போல்டாக கொடுக்க வேண்டும். பதில்கள் நீளமானவையாக இருந்தால் அதில் உள்ள முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிட்டு காண்பித்தால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

“12ஆம் வகுப்பை பொருத்தவரை கணிதத்தில் வெட்டர் அல்ஜீப்ராவில் சூத்திரங்கள் அதிகமாக இருக்கும். சூத்திரங்களை படிப்பது மட்டுமல்லாது நன்கு எழுதிப் பார்க்க வேண்டும். கணிதத்தில் எண்கள் புரிகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இயற்பியலை பொருத்தவரை மாதிரி வினாத்தாள்களை நன்றாக ஆய்வு செய்து படிக்க வேண்டும். மின்காந்த தூண்டல், மின்னோட்டவியல், மற்றும் மாறுதிசை மின்னோட்டம் குறித்து படிக்க வேண்டும். தாவரவியல் மற்றும் வேதியியல் பாடங்களை பொருத்தவரை நடைமுறை, வாழ்வியல் வேதியியலை நன்கு படிக்கவும். கடினமான பகுதிகளை ஃப்ளோசார்ட் முறையில் படிக்கவும். கடினமான பகுதிகளில் 8 முதல் 9 மதிப்பெண்களுக்கு வினா வர வாய்ப்புள்ளது. வணிகவியலில் 25 அத்தியாயங்கள் உள்ளன. இவற்றை விளக்கப்படம் போட்டு படிக்கவும். கணக்குப்பதிவியலை பொருத்தவரை கோட்பாடுகளை கண்டிப்பாக படிக்க வேண்டும். விலங்கியலை பொருத்தவரை இனப்பெருக்கவியல் அதன் நலன், உயிர் பாதுகாப்பு போன்ற பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும். படத்திற்கும் ஓரிரு மதிப்பெண்கள் கொடுக்கப்படும்” என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், “எதைப்படிப்பது என்ற தீர்மானத்துடன் படித்தால் எதிர்மறை எண்ணங்கள் விலகிவிடும். அமைதியான மனநிலையை ஏற்படுத்தி எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும். பாடத்தின் முக்கியச் சொற்களைக் கண்டறிந்து தயாராவது முக்கிய அம்சமாகும். கடைசி நேரத்தில் புதிதாக எதையும் படிக்கக்கூடாது. அதிக பக்கங்கள் அதிக மதிப்பெண்களை தராது. வினாக்களை தேர்வு செய்வதில் கவனம் தேவை. விடைதெரியாத வினாக்களுக்கு அதிக நேரம் செலவிடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். நேரமில்லை என்பது கூடுதல் நேர விரயத்திற்கே வழிவகுக்கும். படிக்கும்பொதே முழுமையாக கவனத்தை குவித்து படிப்பது அவசியம்” எனவும் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com