நட்பற்ற நாடுகளுக்கு இனி ரூபிள் மூலமே வர்த்தகம்! புதின் அறிவிப்பின் பின்னணி என்ன?

நட்பற்ற நாடுகளுக்கு இனி ரூபிள் மூலமே வர்த்தகம்! புதின் அறிவிப்பின் பின்னணி என்ன?
நட்பற்ற நாடுகளுக்கு இனி ரூபிள் மூலமே வர்த்தகம்! புதின் அறிவிப்பின் பின்னணி என்ன?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த நட்பற்ற நாடுகள் தங்களிடம் வாங்கும் எரிவாயுவுக்கு ரஷ்ய ரூபிள் மூலமே பணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது அறிவிப்பின் பின்னணி என்ன? என்பதை பார்ப்போம்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 4 வாரங்களை தொட்டுவிட்டது. இன்றும் இருதரப்பும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன. ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய யூனியன் ஆகியவை ரஷ்யாவின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தன. பொருளாதார ரீதியாக உலகளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் முயற்சியாக தொடர்ந்து தடைகள் விதிக்கப்பட்டன.

போரால் சரிந்த ரஷ்யாவின் ரூபிள்!

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்தும் விதமாக “ஸ்விஃப்ட் வங்கி” நடைமுறையிலிருந்து ரஷ்யாவின் முக்கிய வங்கிகள் நீக்கப்பட்டன. இதனால் ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ நாணயமான ரூபிள் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷ்ய ரூபிள் மதிப்பு 80-தில் இருந்து 119 ஆக சரிந்தது. ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 29% சரிவை சந்தித்தது. மேலும் அணு ஆயுதங்களை தயாராக வைக்கச் சொல்லி புதின் உத்தரவிட்டதாக செய்தி பரவிய போது தான் , ரஷ்யா ரூபிள் இவ்வளவு மோசமான சரிவை சந்தித்தது.

ரூபிளை மீட்க புது திட்டம்!

தனது நாணயமான ரூபிளின் மதிப்பை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புதின் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் ஸ்விஃப்ட் வங்கி நடைமுறையில் இருந்து தடை செய்யப்படாத சிறிய ரஷ்ய வங்கிகளை முன்பைவிட ஆக்டிவாக செயல்பட அறிவுறுத்தப்பட்டது. ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய விரும்பும் நாடுகளுக்கு அந்த வங்கிகள் தேவையானவற்றை செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கைகள் நிலைமை மோசமாவதை தடுக்க மட்டுமே உதவும் என்பதும் ரஷ்யாவுக்கு தெரிந்து இருந்தது.

இனி ரூபிள் வர்த்தகம்தான்! நோ டாலர்!

சர்வதேச சந்தையில் சரிந்த ரூபிளை தூக்கி நிறுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ரஷ்யா. அதுவும் தங்கள் மீது பொருளாதார தடை விதித்து இந்த நிலைக்கு காரணமான நாடுகளை குறிவைத்து அந்த அறிவிப்பை வெளியிட்டார். தங்கள் மீது பொருளாதார தடை விதித்த “நட்பற்ற நாடுகளுக்கும்” ரஷ்யா பெரிய மனதுடன் தொடர்ந்து எரிவாயுவை வர்த்தகம் செய்யும். ஆனால் அமெரிக்க டாலரில் அல்ல! ரஷ்யாவின் ரூபிளில்! என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார் புதின். இந்த புதிய வர்த்தகத்துக்கான நெறிமுறைகள் இன்னும் ஒரே வாரத்தில் வெளியாகும் என அறிவித்துவிட்டார் புதின்.

எரிவாயுவில் மட்டும் ஏன் ரூபிள் வர்த்தகம்?

ரஷ்யாவின் இந்த அறிவிப்பு அவர்களது நாணயத்தை சரிவிலிருந்து மீட்பது மட்டுமல்ல! தங்கள் மீது தடையும் விதித்துவிட்டு தங்களிடம் பல வர்த்தகங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கும் ஐரோப்பிய யூனியனுக்கு சரியான பாடம் புகட்டவும் தான். ஏகப்பட்ட வர்த்தகங்களை செய்து வந்த போதிலும் ஐரோப்பிய யூனியனுக்கு அதிக எரிவாயுவை வழங்கிக் கொண்டிருந்த நாடு ரஷ்யா. மொத்த எரிவாயு தேவையில் 40% க்கு மேல் ரஷ்யாவை, அதை மட்டுமே நம்பியுள்ளது. ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு ஏற்றுமதிக்கு தடை விதிக்க அமெரிக்கா வலியுறுத்திய போது பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் சம்மதிக்க மறுத்துவிட்டன. ஏனென்றால் அந்த நாடுகளுக்கு ரஷ்யாவை விட்டால் எரிவாயுக்கு சிக்கல் ஏற்பட்டு அவர்கள் பொருளாதாரத்தின் ஆணிவேரே ஆடிப்போய்விடும். அதனால் தான் ரஷ்யா எரிவாயுவில் இறங்கி அடித்திருக்கிறது.

பலன் அளித்ததா புதினின் அறிவிப்பு?

புதினின் அறிவிப்பு செயல்பாட்டுக்கு வர நிச்சயம் காலம் பிடிக்கும் . ஏனெனில் பல எரிவாயு ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டவை. அவற்றில் மாற்றம் கொண்டுவரப்பட்டு அவை மற்ற நாடுகளால் ஏற்கப்பட வேண்டும். ஆனால் இது பற்றியெல்லாம் புதின் யோசித்திருப்பாரா என்னவோ.... அவரது இந்த அறிவிப்புக்கே கைமேல் பலன் கிடைத்துவிட்டது. ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு சட்டென்று உயரத் துவங்கி 95 ரூபாய்க்கு வந்துவிட்டது. 119 ரூபாயில் இருந்து 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. இன்னும் 15 ரூபாய் மட்டும் உயர்ந்துவிட்டால் உக்ரைன் போருக்கு முந்தைய நிலையை ரூபிள் எட்டிவிடும்.

டாலர் வர்த்தகம் Vs ரூபிள் வர்த்தகம்

மேலோட்டமாக பார்த்தால் ரஷ்யா ஐரோப்பிய யூனியனுடன் மோதுவது போல் தெரிந்தாலும் அது கமுக்கமாக கைவைத்திருப்பது அமெரிக்காவின் டாலர் வர்த்தகத்தில்! உலகம் முழுக்க சந்தை அமெரிக்க டாலரை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. ஒரு நாடு எந்த பொருள் வாங்கினாலும் முதலில் தனது பணத்தை அமெரிக்க டாலராக மாற்றும். அதன் பின் மற்றோரு டாலரை வைத்து வணிகம் செய்யும். எந்த சிரமமும் இல்லாமல் பயணிக்கும் இந்த இடைத்தரகர் “டாலர்” மூலம் அமெரிக்கா கொள்ளை லாபம் பார்ப்பதாக அடிக்கடி புகார் எழுந்து அது அடங்கிப் போய்விடும். எந்த நாடாவது டாலர் வணிகத்தை விட்டு வெளியேறினால் அந்த நாட்டில் அமெரிக்கா தன்னாலான அனைத்தையும் செய்து அந்த எண்ணத்தை வேரோடு நீக்கிவிடும்.

ஆனால் பல நாடுகள் மறைமுகமாக, நேரடியாக பல நாடுகள் டாலர் வணிகத்தை சின்னச் சின்ன விசயங்களில் மீறத் துவங்கி விட்டன. இந்தியா பல முறை ஈரான், ஈராக்கிடம் இருந்து பெட்ரோலை டாலரல்லாத வர்த்தகத்தில் பெற்றுவிட்டது. ஐரோப்பிய யூனியனின் யூரோவை வைத்து ரஷ்யாவும் இன்னும் பல நாடுகளும் வணிகத்தில் ஈடுபட்டு இருந்தன. சர்வதேச வணிகத்தில் மிக முக்கியமான கச்சா எண்ணெய் அடிக்கடி டாலர் வணிகத்தை விட்டு வெளியேறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கும்.

டாலரல்லாத வர்த்தகத்தால் என்ன பலன்?

இப்படி டாலரை புறக்கணித்து வணிகம் செய்வது யாருக்கு லாபம் தரும் என்று சந்தேகம் வரலாம். குழப்பம் தேவையில்லை. இரு நாடுகளின் வணிகத்தில் எதையும் கிள்ளிப்போடாமல் நாணயத்தின் மூலம் பைசா செலவில்லாமல் லாபம் பார்க்கும் அமெரிக்காவின் பங்கு “கட்” ஆகி விடும். அந்த பங்கு வணிகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு அவைகளின் சக்திக்கு ஏற்ப பிரித்துக் கொள்ளப்படும். அது அந்த நாடுகளுக்கு இடைப்பட்ட பிரச்னை. ஆனால் இந்த “கட்” ஆகும் லாபம் தான் அமெரிக்காவுக்கு பெரும் பிரச்னை.

அவ்வளவு லாபமா டாலரல்லாத வணிகத்தில்?

ஏதோ கொசுறு லாபம் கிடைக்கும், இதற்கு ஏன் வல்லரசை பகைக்க வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் தனது நாணயத்தை வைத்து மட்டுமே அதிகமாக வணிகம் செய்து இப்போழுது பொருளாதாரத்தில் வல்லரசு அந்தஸ்தை நெருங்கி விட்டது சீனா. தொடர்ந்து 30 நாள் போர், பொருளாதாரத் தடை என எல்லாவற்றையும் தாண்டி ரஷ்யா கம்பீரமாக நிற்பதற்கும் பின்னிருப்பது இது தான். தனது வணிகத்தில் 30%க்கு மேல் தனது நாணயம் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது ரஷ்யா. பல நாடுகளும் சர்வதேச வணிகத்திற்கு புது நாணயத்தை கொண்டு வந்து அனைவரும் பயன்படுத்துவோம் என கூறிவருகின்றன. போரோடு இந்த டாலரல்லாத வணிகம் என்பது பேச்சோடு நின்று போகுமா? அல்லது சர்வதேச சந்தை புத்தொளி பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-முத்துகிருஷ்ணன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com