நம்முடைய ஃபேஸ்புக் தகவல்களை யாரோ திருடுகிறார்கள்: அதிர்ச்சி தகவல்
ஃபேஸ்புக்கில் உள்ள தகவல்கள் திருடப்பட்டு உள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது.
‘ஃபேஸ்புக்’ என்ற வார்த்தையை கேள்விப்படாத இளைஞர்கள் இருக்க முடியாது ? இன்றைய காலத்தில் இளைஞர்கள், முதியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் பெரும்பாலானோர் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் தான். தொடங்கிய 14 ஆண்டுகளே ஆன ஃபேஸ்புக் சமூக வலைதளத்திற்கு 200 கோடிக்கும் மேல் பயன்பாட்டாளர்கள். செல்போன் எண்ணைப் போல் ஃபேஸ்புக் ஒரு அத்தியாவசியம் ஆகிவிட்டது. ஒரு இளைஞர் போன் பேசுகிறாரோ இல்லையோ ஃபேஸ்புக்கில் பதிவுகள் பார்த்துக்கொண்டே இருக்கும் நிலைதான் தற்போது உள்ளது. தன்னை குறித்து தனிப்பட்ட தகவல்களை எல்லோரும் மகிழ்ச்சியாக இதில் பதிவிடுகிறார்கள். அந்த அளவிற்கு ஃபேஸ்புக் வலைதளம் பாதுகாப்பானது என்ற நம்பிக்கை எல்லோருக்கும் தற்போது வரை இருந்து வருகிறது. கருத்துச் சுதந்திரம் இன்றளவில் அதிகம் காக்கப்படுவது ஃபேஸ்புக்கில் தான் என்று சொன்னால், அது மிகையில்லா உண்மைதான். காதல், நட்பு, அரசியல் என எல்லாமே இந்த வலைதளத்தில் உலாவுகிறது.
இப்படி நம்முடைய வாழ்க்கையில் ஒன்றாக கலந்துவிட்ட ஃபேஸ்புக்கில் நம்முடைய தகவல்கள் நமக்கே தெரியாமல் திருடப்படுகிறது என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைப்பெற்ற அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்குப் பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை அந்நிறுவனம் அளித்தது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுவெறும் குற்றச்சாட்டாகவே இருந்த நிலையில், 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களைத் திருடி, ட்ரம்ப்பை வெற்றி பெற உதவி செய்ததற்கான ஆதரங்கள் என்று சிலவற்றை பிரிட்டனின் சேனல் 4 என்ற தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இது ஃபேஸ்புக் மீதான நம்பிக்கையில் ஒரு பெரிய சம்மட்டி அடியை அடித்துள்ளது.
அதுவும் ஃபேஸ்புக் தகவல்களை எடுத்து அரசியலில் ஒரு தலைவரை வெற்றிப் பெற செய்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. கேம்பிரிட்ஜ் நிறுவனம் எவ்வாறு தகவல்களைத் திருடியது, ட்ரம்ப் எப்படி வெற்றிபெற்றார், ஃபேஸ்புக்கில் இருந்து தகவல்கள் எவ்வாறு திருடப்பட்டன என்பது போன்ற பல கேள்விகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதுபற்றி விசாரணை நடத்த இங்கிலாந்து எம்.பி. டாமியன் கொலின்ஸ் என்பவர் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, ஃபேஸ்புக் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க், 26-ந் தேதிக்குள் தங்கள் முன்பு நேரில் ஆஜராகி, இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது.
சர்ச்சை வெடித்துள்ளதை அடுத்து, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் தலைமை அதிகாரி(சிஇஓ) அலெக்ஸாண்டர் ஃபிக்ஸை தாற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தது. விசாரணை உண்மை தன்மையுடன் நடைபெறவேண்டும் என்பதற்காகவே இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலெக்ஸாண்டரின் பேசிய ரகசிய வீடியோ பதிவை தான் சேனல் 4 வெளியிட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவன சர்ச்சையைத் தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனம் ஒரே நாளில் தனது சந்தை மதிப்பில் 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு வருவதால், அந்நிறுவன பங்குகளின் மதிப்புகள் சரியத் தொடங்கின. ஒரே நாளில் 6.8 சதவிகிதம் குறைந்த நிலையில், இந்திய மதிப்பில் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை பேஸ்புக் பங்குகள் சரிந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
நிரூபிக்கப்படாத வரை எல்லாமே குற்றச்சாட்டுகள்தான். குற்றச்சாட்டுகள் எழுவது இயல்புதான் என்று நம் கடந்துவிட்டு சென்றிருக்கலாம். ஆனால், இந்த பிரச்னையில் வாட்ஸ்அப் செயலியின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டனின் ட்விட்டர் பதிவு நம்மை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. பிரையன் ஆக்டன் தனது ட்விட்டில், 'ஃபேஸ்புக்கை டெலிட் செய்வதற்கான நேரம் இது' எனப் பதிவிட்டுள்ளார். இவரின் கருத்து, சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அதிரவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் ஃபேஸ்புக் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. பாதுகாப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டால்..அந்த அதிர்ச்சிக்கும் நாம் தயாராக தான் இருக்க வேண்டியுள்ளது.