'காயப்பட்ட சிங்கம்; திரும்பி வருவோம்' - 2020ல் தோற்ற பிறகு தோனி சொன்ன மேஜிக் வார்த்தை!

'காயப்பட்ட சிங்கம்; திரும்பி வருவோம்' - 2020ல் தோற்ற பிறகு தோனி சொன்ன மேஜிக் வார்த்தை!
'காயப்பட்ட சிங்கம்; திரும்பி வருவோம்' -  2020ல் தோற்ற பிறகு தோனி சொன்ன மேஜிக் வார்த்தை!

'நீண்ட நாட்களுக்குப்பிறகு நாங்கள் 3 போட்டிகள் தோல்வியைத் தழுவினோம். நிறைய விஷயங்கள் நாங்கள் நினைத்தபடி அமையவில்லை. இருப்பினும் அடுத்த வருடம் கூடுதல் பலத்துடன் வருவோம்'' கடந்த ஆண்டு இப்படிதான் கூறினார் தோனி. கடந்த 2020ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் முதல் ஆளாக ப்ளேஆஃபிலிருந்து வெளியேறியது சிஎஸ்கே. ரசிகர்கள் உடைந்துபோனாலும், 'காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனையவிட பயங்கரமா இருக்கும்' என நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள். அந்த காத்திருப்புக்கு கைமேல் பலன்!

தண்ணீரில் மூழ்கடிப்பபடும் பந்து, அழுத்தும் வேகத்தை விட இருமடங்கு வேகத்தில் திமிறி எழும் என்பது இயற்கையின் விதி. சிஎஸ்கே அணி மட்டும் இயற்கைக்கு அப்பாற்பட்டதா என்ன?. குழுமியிருந்த ஒளியை கிழித்துக்கொண்டு சென்றது அந்த பந்து. பார்வையாளர்களின் 'தோனி தோனி' என்ற சத்தம் பந்தை மேலும் உந்தி தள்ளியிருக்க கூடும். களத்திலிருந்த ஃபீல்டர்கள் கூட, இது எப்படியும் பந்து மைதானத்தை தாண்டிதான் விழப்போகிறது என்ற நினைத்து ரிலாக்ஸாக விட்டார்கள். காரணம் அது தோனியின் சிக்னேச்சர் ஷாட்.

பந்து கூரையை அடைந்த நொடியில் சிஎஸ்கே முதல் ஆளாக ப்ளே ஆஃப்-க்குள் நுழைந்தது. கடந்த வருடம் எந்த அணி ப்ளே ஆஃப்-பிலிருந்து முதல் ஆளாக வெளியேறியதோ அதே அணி இந்த முறை முதல் ஆளாக ப்ளே ஆஃப்க்குள் நுழைந்தது. 'வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு' என்பதை உணர்த்தும் வகையில் இருந்தது தோனியின் அந்த ஷாட்.

சரியான திட்டமிடல் இல்லாதது, மூத்த வீரர்களின் தேர்வில்சொதப்பல், தடுமாற்றங்கள் என கடந்தாண்டு தவறுகளை சிஎஸ்கே திருத்திக்கொண்டது அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. 'இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை' என தோனி கூறியது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. சொல்லப்போனால் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல்லின் முதல் ஆட்டத்தில் சீட்டுக்கட்டுப்போல சிஎஸ்கே பேட்டிங் சரிய, ஒற்றை ஆளாக நின்று அணியை தன் பேட்டில்தாங்கி வெற்றியைத் தேடித்தந்தார் ருத்ராஜ் கெய்வாட். இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு பக்கபலமாக இருக்கிறார். 

கடந்த ஐபிஎல் போட்டியில் ஓப்பனிங், மிடில் ஆர்டர் சொதப்பல் அணிக்கு பெரும் பலவீனமாக இருந்தது. போட்டி துவங்கியதும் முதல் ஓவர் முடிந்து டீ சாப்பிட்டு வந்து பார்த்தால் ஒப்பனிங் வந்த வீரர்கள் நடையைக்கட்டிக்கொண்டிருப்பார்கள். 'பேட்ட மாத்த போறாங்க' என்று நினைத்து ஸ்கோரைப்பார்த்தால் 2 விக்கெட் என இருக்கும். இந்த ஆண்டு அப்படியல்ல. ஓப்பனிங் சிறப்பாகவே இருக்கிறது. ருத்ராஜ், டுபிளசிஸ் இணை நீடித்து நின்று ஆடுகிறது.

கடந்த ஐபிஎல் போட்டியில் பவுலிங்கும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. தற்போதைய ஐபிஎல் போட்டியில் ஷர்துல் தாக்கூர் தேவையான நேரங்களில் எதிர் அணி பேட்ஸ்மேன்களை பத்திரமாக பெவிலியனுக்கு அனுப்பும் பணியை சிறப்பாக செய்கிறார். 'மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக' திரும்பியிருக்கும் பிராவோ அணிக்கு தன் தேவையை நிரூபித்திருக்கிறார். தோனியும், ரெய்னாவும் பொறுப்புடன் ஆட வேண்டிய தேவை இருக்கிறது. சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் கூட ரெய்னாவுக்கு பதிலாக ஜெகதீசனுக்கு வாய்ப்புக்கொடுக்கலாம் என்று கூறிவருகிறார்கள்.

தொடர்ந்து சரியான திட்டமிடலுடன், இதே வேகத்தில் சிஎஸ்கே விளையாடி வந்தால் 'கோப்பைய எடுத்து வைங்க' என்ற ரசிகர்களின் ஆருடம் சாத்தியமாகும் என்பதில் சந்தேகமில்லை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com