கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா? - ஓர் அலசல்

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா? - ஓர் அலசல்

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா? - ஓர் அலசல்
Published on

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கிட்டத்தட்ட ஒரு வருடம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நாம், சற்று தைரியத்துடன் வெளியே நடமாடக் காரணம். கொரோனா தடுப்பூசி. கொரோனா என்ற கொடும் நோய்க்கிருமியை கட்டுப்படுத்த உலக நாடுகளே ஒன்றிணைந்து போராடிவருகிறது. இதுவரை வரலாற்றில் நிகழ்ந்திராத ஒரு சாதனையாக, மிகக் குறுகிய காலத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்தியா உட்பட பல நாடுகளிலும் முன்களப் பணியாளார்களுக்கு முன்னுரிமை
அளிக்கும்விதமாக, அவர்களுக்கு முதல்கட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. ஆனால், தடுப்பூசியைப் பொறுத்தவரை பல சந்தேகங்களையும் கேள்விகளையும் பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்தியாவில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தற்போது தடுப்பூசி வழங்கப்படமாட்டாது என அறிவித்துள்ள நிலையில், அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த சந்தேகம் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் பெரும்பாலும் விவாதிக்கப்படும் ஒன்றாக உள்ளது.

முன்கள கர்ப்பிணி பணியாளர்களும் தடுப்பூசியும்

மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற முன்கள பணியாளர்களில் கர்ப்பிணிகளும் அடக்கம். தடுப்பூசி சோதனையில் கர்ப்பிணிகள் உட்படுத்தப்படாததால் இந்த தடுப்பூசி தாய் மற்றும் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஏதேனும் பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதுகுறித்து சிடிசி மற்றும் ஏசிஐபி போன்ற சுகாதார நிறுவனங்கள் கூறுகையில், 'முன்களப் பணியாளர்களில் உள்ள கர்ப்பிணிகளும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்குமுன், அவர்கள் நிபுணரின் ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது' என்று வலியுறுத்துகின்றனர்.

இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களை கண்காணித்ததில் பக்கவிளைவுகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. சாதாரணப் பெண்களைவிட கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது அவர்களுக்கு தீவிர உடல்நலக் குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதனால் அவர்கள் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் செலுத்தி சிகிச்சைபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். மேலும், இவர்களுக்கு முன்கூட்டியே பிரசவம் ஆனதாகவும் சில தரவுகள் கூறுகின்றன.
அதனால், தடுப்பூசிகளை அவர்களுக்கு செலுத்துவதில் பலநாட்டு அரசுகள் தயக்கம் காட்டிவருகின்றன.

ஃபைசர் தடுப்பூசிகளில் உள்ள எம்-ஆர்என்ஏ(mRNA)களில் கொரோனா நோய்த்தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமிகள் இல்லை. மேலும், இந்த mRNA-ஆனது மனித செல்களின் கருவுக்குள் நுழைய முடியாததால் டி.என்.ஏவுடன் வினைபுரியாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, இவை கர்ப்பிணிகள் மற்றும் கருவுக்கு தனிப்பட்ட பக்கவிளைவை ஏற்படுத்தாது என்றும் அவர்கள் நம்புகின்றனர். அதேசமயத்தில், இந்த mRNA தடுப்பூசி சோதனைகளை இதுவரை கர்ப்பிணிகள்மீது நடத்தாததால்
தெளிவான விவரம் அளிக்கமுடியவில்லை என்கின்றனர். சிடிசி மற்றும் எஃப்டிஏ இரண்டும் ஃபைசர் - பயோடெக் தடுப்பூசிகளை கர்ப்பிணிகளுக்கு செலுத்தி அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் கர்ப்பிணிகள் கடைபிடிக்கவேண்டியவை:

தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் கர்ப்பிணிகள் மாஸ்க் அணிதல், மற்றவர்களிடம் இருந்து 6 அடி விலகி இருத்தல், கூட்டத்தை தவிர்த்தல், அடிக்கடி கைகளை சோப்பால் கழுவுதல் போன்ற சில கொரோனா விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அதேபோல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிறகு நிபுணரிடம் தாய் மற்றும் குழந்தையின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை அடிக்கடி சோதனை செய்து தெரிந்துகொள்ளவேண்டும். 

ஃபைசர் தடுப்பூசியை 16 வயதுக்கு மேல் உள்ளவர்களும், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை 18 வயதுக்கு மேல் உள்ளவர்களும் போட்டுக்கொள்ள சில நாடுகள் அனுமதி அளித்துள்ளது. அதேசமயத்தில் முன்கள் பணியாளர்கள் மற்றும் விருப்பமுள்ள கர்ப்பிணிகள் வேண்டுமானால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறது.

உலக நாடுகளில் தடுப்பூசிகள்

அதேசமயத்தில் பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதே பாதுகாப்பானது என்கிறது சில நாடுகள். காரணம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் கொடுக்கும் தாய்ப்பாலில்கூட ஆன்டிபாடிகள் இருக்கிறது. இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்வது குழந்தையையும் சேர்த்து பாதுகாக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

சில நாடுகள் கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும் அனுமதி அளித்துள்ளன. கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ள கர்ப்பிணிகள் தயக்கம் காட்டாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்பதை உலக சுகாதார நிறுவனமும் தெளிவுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள பல நாடுகள் அனுமதி அளிக்காததற்கு காரணம், அவர்கள் தடுப்பூசி சோதனையில் ஈடுபடுத்தப்படாததுதான். ஆனால் அதுவே பொதுமக்களிடையே வேறுவிதமான சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதேநேரம், கர்ப்ப காலத்தில் பொதுவான தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது தாய் மற்றும் சேய்க்கு பாதுகாப்பு கொடுக்கக் கூடியதாகத்தான் இருக்கும். எனவே, கொரோனா தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள கர்ப்பிணிகள் தயக்கமின்றி முன்வரவேண்டும் என சுகாதார நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com