ஆட்கொல்லி புலிகளை சுட்டுக்கொல்வதுதான் தீர்வா? - ஒரு பார்வை

ஆட்கொல்லி புலிகளை சுட்டுக்கொல்வதுதான் தீர்வா? - ஒரு பார்வை
ஆட்கொல்லி புலிகளை சுட்டுக்கொல்வதுதான் தீர்வா? - ஒரு பார்வை

தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டுக்கு பின்பு ஆட்கொல்லி புலியொன்று இப்போது பேசுபொருளாகி இருக்கிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களை ஒன்றரை ஆண்டாக அச்சுறுத்திவரும் புலி T23 என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புலி, முதுமலையை ஒட்டிய தொரப்பள்ளி வனப்பகுதியில் 2012 முதல் 2020 வரை வாழ்ந்துவந்தது. இதன் வாழிடப்பகுதி சுமார் 40 கிலோமீட்டர் சுற்றளவு வரை இருந்தது. தற்போது 13 வயதாகும் இந்த புலியை, வயது முதிர்வால் அங்குள்ள இளம் புலிகள் அடித்து விரட்டியதையடுத்து வனத்தை விட்டு வெளியேறியது. அதன்பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட்மாதம் மசினகுடியில் கௌரி என்ற பெண்ணை அடித்துக்கொன்றது.

தொடர்ந்து கடந்த ஜூலையில் முதுமலையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரையும், கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியில் சந்திரன் என்பவரையும் அடித்துக்கொன்ற புலி, இதுவரை 30 க்கும் அதிக கால்நடைகளை அடித்துக்கொன்றுள்ளது. புலியை பிடிக்க வலியுறுத்தி மக்களின் போராட்டம் வலுத்தநிலையில், அதனை மயக்க ஊசி செலுத்திப்பிடிக்க அனுமதி கிடைத்தது. இதையடுத்து புலியை பிடிக்க கடந்த 6 நாட்களாக வனத்துறையினர் முயன்று வந்தனர். அதேவேளையில், 4 ஆவது நபராக மசினகுடியில் மங்கல பஸ்வான் என்ற 55 வயது முதியவரை புலி அடித்துக் கொன்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுவரை மனிதர்களை தாக்கிவந்த புலி அவர்களை சாப்பிடவில்லை. 4 ஆவதாக அடித்துக்கொன்ற நபரை சாப்பிட்டதால் இனி மனிதர்களை தாக்கும் என்று வனத்துறையினர் தெரிவிக்கிறார்கள்

மக்களின் கோரிக்கையை அடுத்து புலியை சுட்டுக்கொல்ல முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டிருக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் மனிதர்களைக் கொல்லும் புலிகளை சுட்டுக்கொன்ற பிடிக்க உத்தரவிடுவது இது முதன்முறை கிடையாது. ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு குந்தசப்பையில் ஒரு ஆட்கொல்லி புலி அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டது. 2015 ல் பிதர்காடு பகுதியில் 13 நாள் போராட்டத்துக்குப்பின் ஒரு புலி சுட்டுக்கொல்லப்பட்டது. 2016 ல் தேவர்சோலை பகுதியில் 10 நாள் முயற்சிக்குப்பின் ஒரு ஆட்கொல்லி புலி சுட்டுக்கொல்லப்பட்டது.

புலிகளுக்கான "என்கவுண்ட்டர்"

குற்றவாளிகளை போலீஸ் சில நேரங்களில் என்கவுன்ட்டர் செய்து கொல்லும். அதேபோலதான் "மேன் ஈட்டராக" மாறும் புலியை வனத்துறையினர் என்கவுன்ட்டர் செய்து கொல்வார்கள். தமிழகத்தில் 2014, 2015, 2016 ஆம் ஆண்டில் மேன் ஈட்டராக அறியப்பட்ட புலிகள் நீலகிரி மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டது. இந்த மேன் ஈட்டர் புலிகளால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது இத்தகைய நடவடிக்கையில் இறங்குகிறது வனத்துறை. அண்மையில் மகாராஷ்டிராவில் மேன் ஈட்டராக கருதப்பட்ட ஆவ்னி என்ற பெண் புலி 13 பேரை கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் புலியை அம்மாநில வனத்துறை சுட்டுக்கொன்றது.

எப்போது ஒரு புலி மேன் ஈட்டராக மாறுகிறது ?

பொதுவாக ஒரு புலி எப்போதும் மனித மாமிசத்தை விரும்பாது. புலிகள் ஒரு கூச்சசுபாவம் கொண்ட விலங்கினம் என்று உலகப் புகழ்ப்பெற்ற வேட்டைக்காரரும் காட்டுயிர் ஆர்வலருமான ஜிம் கார்பட் தனது புத்தகங்களில் கூறியுள்ளார். மனிதனின் வாடையை நுகர்ந்தாலே புலி பல கிலோ மீட்டருக்கு அப்பால் சென்றுவிடும். உதாரணத்துக்கு ஒரு புலி மானை வேட்டையாடினால், உடனடியாக அதனை தின்றுவிடாது. அந்த மானை சில மணி நேரம் வைத்து அதன் மாமிசம் லேசான பின்புதான் உண்ணும். அப்படிப்பட்ட நிதானமான குணமுடையது புலி. ஒரு புலியின் அதிகப்பட்ச ஆயுட்காலம் 15 ஆண்டுகள். வயதான புலிகளே பொதுவாக மேன் ஈட்டராக மாறும் என்று சில விலங்கியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஒரு சில புலிகள் காயத்தின் காரணமாகவும் மேன் ஈட்டராக மாறும். அதாவது, வயோதிகம் காயம் காரணமாக அதனால் வேகமாக ஓடி வேட்டையாட முடியாது. எனவே, அப்போது ஒரு மனிதனின் ரத்தத்தை ருசித்துவிட்டால், பின்பு அது மனிதனை மட்டுமே வேட்டையாடும் மேன் ஈட்டராக மாறிவிடும். ஒரு பெண் புலி மேன் ஈட்டராக மாறிவிட்டால் அதன் குட்டிகளும் எதிர்காலத்தில் அதாவது வயதான பின்பு மேன்ஈட்டராக மாறிவிடும் என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேன் ஈட்டர்களை சுட்டுக்கொல்வதுதான் தீர்வா?

ஊருக்குள் புகும் மேன் ஈட்டர்களை சுட்டுக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்களை திருப்திப்படுத்துவதற்காகவே வனத் துறை அதிகாரிகள் புலிகளை சுட்டுக் கொல்கின்றனர் என்று சூழலியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உதாரணத்துக்கு 1997 ஆம் ஆண்டு வால்பாறை பகுதியில் சுற்றித் திரிந்த மேன் ஈட்டர் புலி மயக்க மருந்து செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டது. பிறகு, இந்தப் புலி வன உயிரியல் காப்பகத்துக்கு கொண்டு சென்று பராமரிக்கப்பட்டது. பின்பு அந்தப் புலி இயற்கையாகவே மரணம் அடைந்தது.

காட்டில் சுற்றித் திரியும் புலிகளை கூண்டில் அடைப்பது மரணத்தை விட கொடுமையானது. மேலும், உயிரியல் பூங்காவில் மேன் ஈட்டர் புலிகளைப் பராமரிப்பது சிரமம். இட நெருக்கடி ஏற்படும். உலகின் எல்லா இடங்களிலும், மேன்ஈட்டர் புலிகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைச் சுட்டுக் கொல்லும் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேன் ஈட்டர் புலிகளை சுட்டுத்தான் கொல்ல வேண்டும்; இது அறிவியல் சார்ந்த விஷயம். இதில் கருணைக்கு இடம் கிடையாது. ஒரு புலி வயதான பிறகோ, காயமடைந்த பின்னரோ தனது இறையை வேகமாக ஓடி வேட்டையாட முடியாமல் போகும். இதனால் மனிதனையும், கால்நடைகளையும் தாக்கி உணவாக்கி மேன் ஈட்டராக உருவாகிறது.

இதை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து உயிரியல் காப்பகத்தில் வைத்து பராமரிப்பதால் எந்த உபயோகமும் இல்லை. அப்படி பராமரித்தால் அரசாங்கத்துக்கும் லட்சக்கணக்கில் செலவாகும். மேலும், அரசின் நோக்கம் காடுகளில் புலிகளின் எண்ணிக்கையைப் பெருக்குவதே. அவற்றைக் கூண்டில் அடைத்து என்ன செய்யப் போகிறோம்? மேன்ஈட்டர் புலி காட்டில் இருந்தால், சக புலிகளுக்கும் ஆபத்துகளை உருவாக்கக் கூடும். புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், காடுகள் சுருங்கி வருவதுமே பிரச்னைக்கு காரணம். தென்னிந்தியாவில் மேன் ஈட்டர் புலிகள் அரிதே என்கின்றனர் காட்டுயிர் ஆர்வலர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com