அசரவைக்கும் DSN அமைப்பு... செயற்கைகோள் வழியாக நாம் எப்படி தகவல் பெறுகிறோம் தெரியுமா?

அசரவைக்கும் DSN அமைப்பு... செயற்கைகோள் வழியாக நாம் எப்படி தகவல் பெறுகிறோம் தெரியுமா?
அசரவைக்கும் DSN அமைப்பு... செயற்கைகோள் வழியாக நாம் எப்படி தகவல் பெறுகிறோம் தெரியுமா?

மனித இனம் ஆராய்ச்சிக் கூடத்திற்குள் என்று நுழைந்ததோ, அன்றிலிருந்து அறிவியல் தொழில்நுட்பங்கள் மனித வாழ்வின் அன்றாட செயல்முறைகளை எளிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றி வந்துள்ளது. எடுத்துக்காட்டாக, மருத்துவத் துறையின் தற்கால நோய் சிகிச்சைத் தொழில்நுட்பத்திலிருந்து முன்கூட்டியே வானிலையை கணித்து நம்மை காப்பாற்றிக்கொள்ளக் உதவும் செயற்கைக்கோள் வரை எத்தனையோ விஷயங்களைச் சொல்லலாம்.

தொழில்நுட்பங்கள் வளர வளர, அதன் நம்பகத்தன்மை குறித்தான கேள்விகள் எழச் செய்யும். அதையொத்து மனிதனின் அன்றாடத் தேவைகளே இன்னும் பூர்த்தியடையாமல் இருக்க, இம்மாதிரியான ஆராய்ச்சிகளும் தொழில்நுட்பங்களும் நமக்குத் தேவை தானா என்கிற கேள்வியும் எழும். கேள்வி கேட்பது மனித இயல்புதான் என்றாலும், நமது கேள்விகள் மனித குல வளர்ச்சியை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்வதும் நமது கடமைதான். இதை இங்கு சொல்வதற்கு காரணம் உண்டு. சமீபத்திய சூழலில் அறிவியலின் பல தொழில்நுட்பங்கள் நமக்கு ஆகப்பெரும் நன்மை விளைவித்தாலும், புரிதலற்ற சிலரால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவதும் உண்டு.

தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுங்கள். தடுப்பூசி கண்டுபிடிக்காவிடில் மனிதகுலத்தின் பாதியை நோய்களுக்கு பலி கொடுத்திருப்போம். இன்று நம்மால் போலியோ, அம்மை போன்ற நோய்கள் இல்லாமல் வாழ முடிகிறது. இருந்தும் நம்மில் சிலருக்கு இன்னும் தடுப்பூசி மீதான பயம் இருந்து கொண்டுதான் வருகின்றது. இது ஒருபுறமிருக்க, தடுப்பூசியைவிட அதிக விமர்சனத்திற்குள்ளாகும் ஒரு விஷயம் என்றால், அது விண்வெளி ஆராய்ச்சிகள்தான். இதற்கு பின்னான அரசியலை விடுங்கள். இந்த ஆராய்ச்சிகள் மூலம் நமக்கு நடந்த நன்மைகளை கணக்கில் கொள்ளுங்கள். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு நான் எழுதுவதை, உங்களால் ஒரு கையடக்க அலைபேசியில் படிக்க முடிகிறது. இந்தத் தொலைத்தொடர்புகளை சாத்தியப்படுத்தியது எது? - செயற்கைக்கோள்கள்தான்.

செயற்கைக்கோள்கள் நமக்கு அளித்த பயன்கள் ஏராளம். அந்த செயற்கைக்கோள்களிலிருந்து நமது அலைபேசிக்கு தொடர்பை ஏற்படுத்த நாம் ரேடியோ அலைகளையும் ,மைக்ரோ அலைகளையும் பயன்படுத்தி வருகிறோம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால், நம் பூமிக்கு அப்பால் பிற கோள்களை ஆராய அனுப்பும் செயற்கைக்கோள்கள் / விண்கலன்கள் நம்மோடு எப்படி தொடர்பு கொள்கின்றன என சிந்தித்தது பார்த்தது உண்டா?

முதலில் பிற கோள்களுக்கு செயற்கைக்கோள் அனுப்புகிறோமா? எதற்காக? - இந்தக் கேள்விகள் உங்களுக்கு இப்போது எழக்கூடும். நான் முன்பே சொன்னதுபோல், கேள்வி கேட்பது மனிதனின் இயல்பு. சிந்திக்க தெரிந்த எந்த ஒரு மனிதனும் தன் இருப்பு குறித்து கேள்வி கேட்காமல் இருக்கமாட்டான். அப்படி நம் கேள்விகள் பலவற்றிற்கு விடை காண, நாம் விண்வெளியில் பயணிக்க ஆரம்பித்தோம். தேடலின் பயனாக பதில்களும் கிடைத்தன. எங்கெல்லாம் தேடினோம் என்பதற்கு பதில்தான் நாம் பிற கோள்களுக்கு அனுப்பிய செயற்கைக்கோள்கள். செவ்வாய் கிரகம் - மங்கள்யான், கியூரியாசிட்டி எந்திர ஊர்தி, இன்சைட் தரை-நில் கலம், வியாழன் - ஜுனோ, சனி - காசினி, யுரேனஸ், நெப்டியூன் - வாயேஜர்-2 மற்றும் விண்மீன் இடை முகிழ் படலம் (Interstellar space) தாண்டி பயணித்து கொண்டிருக்கும் வாயேஜேர் 1 மற்றும் 2 ஆகிய செயற்கைக்கோள்கள் நமது சூரியக் குடும்பத்தைப் பற்றி நன்கு ஆராய நமக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தன. மேலும், சூரியனை நெருங்கி ஆராய அனுப்பிய பார்கர் சோலார் திட்டம் சூரியப் புயலை பற்றி பல்வேறு உண்மைகளை நமக்கு தெரியப்படுத்தியது. அதன்மூலம் நம்மால் நமது பூமியைச் சுற்றி அமைந்திருக்கும் காந்தபுலத்தில் அதன் தாக்கம் என்னவெற்று நம்மால் அடையாளம் காண இயலும்.

சரி, இந்தச் செயற்கைக்கோள்கள் யாவும் எப்படி நம் பூமிக்கு தகவல்களை அனுப்புகின்றன என்று முன்பே கேட்டிருந்தோமல்லவா. அதற்கான பதிலை இப்போது பார்ப்போம்.

பூமியில் தீர்க்க ரேகையின் 120 பாகை அளவு தொலைவில் மூன்று தொலை நோக்கு அலை வாங்கிகளை (Antenna) நாசாவின் Jet propulsion laboratory (JPL) அமைத்துள்ளது. எதற்காக? அது என்ன 120 பாகை அளவு?

ஆமாம், இந்தச் சிறப்பு மிக்க அதி உணர் அலைக்கருவிகள்தான் விண்கலம் / செயற்கைக்கோள்களுடன் தொடர்புகொள்ள பயன்படுகின்றன. இந்த அமைப்பின் சிறப்பியல்புகள் அதன் அமைவிடத்திலிருந்து தொடங்குகிறது. ஆம், இந்த மூன்று தொலை நுண் உணர்வு அலை வாங்கிகளும் (High sensitive antenna) முறையே கோல்டுஸ்டோன் (அமெரிக்கா), மாட்ரிட் (ஸ்பெயின்), கான்பெரா (ஆஸ்திரேலியா) ஆகிய இடங்களில் ஒன்றோடொன்று தொடர்புகொள்ளும் விதமாக நிறுவப்பட்டுள்ளது. இந்த அலைபரப்பி மற்றும் அலையேற்பி வாயிலாகத்தான் தொலைதூர செயற்கைக்கோளிலிருந்து தகவலை பெறுகிறோம்.

மேலும், இவ்வமைப்பு 24x7 இயங்க வேண்டுமென்பதாலும் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும்போதும் தொலை தூர செயற்கைகோள்களின் தொடர்பு விடுபடாமலிருந்து தகவலை பெறும் வகையிலும் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, அந்தந்த இடங்களில் பகல் பொழுது வரும்போது செயற்கைக்கோளிலிருந்து தகவல் திரட்டும் பொறுப்பை அந்தந்த நிறுவிடங்கள் சுழற்சி முறையில் ஏற்றுக்கொள்கின்றன. இந்தக் காரணத்தினால்தான் நம்மால் எல்லா நேரமும் செயற்கைகோள்களிடமிருந்து தகவலைப் பெற முடிகிறது. இந்த அமைப்பு ஆழ் விண்வெளி வலைப்பின்னல் (Deep Space Network) என பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது.

இந்த வலைப்பின்னலமைப்பு செயற்கைகோள்களிலிருந்து வரும் தகவல்களை பெறுவதோடு நில்லாமல், செயற்கைகோள்களை வழிநடத்தவும், கட்டளைகளை பிறப்பிக்கவும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, பல லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால், எரிகல் மோதவிருந்த வாயேஜர் விண்கலத்தின் திசையை நாம் மாற்றி, அதை நாம் காப்பாற்றினோம். இப்படித் தகவலை பெறவும் / அனுப்பவும் இருவழித்தடத்தொடர்பாக இந்த வலைப்பின்னல் அமைப்பு நமக்கு உதவி புரிகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், நாம் விண்கலத்தை கட்டமைக்கும்போது, அது தகவலை பரிமாறிக்கொள்ள பயன்படும் பரப்பியின் ஆற்றல் அளவு கணிசமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், விண்கலத்தின் எடை அதிகரிக்கும். எனவே, மிகக்குறைந்த சக்தியில் இயங்கும் அதேநேரத்தில் அதிக திறன் மிகுந்த பரப்பியை விண்கலத்தில் பொருத்துவார்கள். அதன் சக்தி அளவு தோராயமாக 20 வாட்ஸ் என்ற அளவில் இருக்கும். நம் வீட்டில் எரியும் மின்விளக்கின் சக்தியைவிட குறைவென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அது சரி, இத்தனை குறைவான சக்தியில் அனுப்பும் மின்சமிக்ஞைகள் மட்டும் எப்படி ஆற்றல் மிக்கதாய் இருக்க முடியும்? இருக்க முடியாதல்லவா...? எனவே, இத்தனை குறைவான அதிர்வெண்களை கொண்ட மின் சமிக்ஞைகளை பெறுவதற்கென்றே அதி திறன் வாய்ந்த ஏற்பிக்கருவியை (Receiver) கொண்டு இந்த அலை வாங்கிகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிலுள்ள சக்தி வாய்ந்த அலைபெருக்கி (Amplifier) இதை நமக்கு செய்து தருகின்றது.

இன்றைய நிலையில், வாயேஜர் விண்கலத்திலிருந்து இந்த ஏற்பிக்கருவிகள் பெறும் மின் சமிக்ஞைகள் அளவு நம் இலக்கமுறை கைக்கடிகாரத்தின் (Digital watch) மின் சமிக்ஞைகளை விட நூறு மடங்கு குறைவு என்பதை நம்ப முடிகிறதா? ஆம். அத்தனை வலிமையற்ற சமிக்ஞைகளைதான் இந்த அமைப்பின் அலைபெருக்கி நமக்கு துல்லியமாகப் பெருக்கித் தருகிறது. அதை வைத்துதான் நம்மால் ஆராய்ச்சி செய்ய முடிகிறது. இதில், எவ்வகையாக சமிக்ஞை குறுக்கீடு இல்லாமல் இருக்க, அலைபெருக்கிகளை தனிச்சுழி வெப்பநிலைக்கும் குறைவாக குளிரூட்டி வைத்துள்ளனர். இத்தனை சிக்கலானதும், துல்லியமானதுமான அலைபரப்பி மற்றும் ஏற்பிகள் எந்தந்த செயற்கைக்கோளுடன் தற்போது தொடர்பில் உள்ளது என்பதை காண உதவும் வலைதளப் பக்கம் இதுதான் > https://eyes.nasa.gov/dsn/dsn.html .

மேலும், இந்த வலைதளப் பக்கத்தில், செயற்கைக்கோளின் தகவல் பெறும் அளவு, தூரம், செல்லும் வேகம், திசை என பல்வேறு தகவல்களை நம்மால் காண இயலும். ஒருமுறை சென்று பாருங்கள்... நிச்சயமாக சமிக்ஞை பெறும் அளவை பார்த்து ஆச்சரியத்திற்குள்ளாவீர்கள்.

இத்தகைய பொறியியல் கட்டுமானம், நாம் நம் கேள்விகளுக்கு விடைகாண புறப்பட்ட பயணத்தின் சிறிய காலடிதான். ஆனால் இந்த அமைப்பு தற்காலத்தின் அதி சக்தி வாய்ந்த உணர்திறனை கொண்டுள்ளது என்பதை மறுக்கவியலாது. இந்த அமைப்பு உலக நாடுகள் அனைத்துமே பயன்படுத்திக்கொள்ளுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கூட்டு முயற்சியின் வாயிலாக நம் சூரியக் குடும்பத்தின் பல்வேறு உண்மைகளை நம்மால் கண்டறிய முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com