90% செயல்திறனுடன் இந்தியாவில் தயாராகும் 'பயோலாஜிகல் இ' தடுப்பூசி - சிறப்பு அம்சங்கள்

90% செயல்திறனுடன் இந்தியாவில் தயாராகும் 'பயோலாஜிகல் இ' தடுப்பூசி - சிறப்பு அம்சங்கள்
90% செயல்திறனுடன் இந்தியாவில் தயாராகும் 'பயோலாஜிகல் இ' தடுப்பூசி - சிறப்பு அம்சங்கள்

இந்தியாவில் தயாராகிவரும் தடுப்பூசிகள் மற்றும் அவற்றின் செயல்திறன் குறித்து விளக்குகிறார் அரசாங்க ஆலோசனைக் குழுவில் உயர் மருத்துவர் என்.கே. அரோரா. 

கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவருகிறோம். முதல் அலையைப்போல் இல்லாமல் கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதியின்மை போன்ற பிரச்னைகளால் பல உயிர்களை நாம் இழந்துவிட்டோம். இதற்கிடையே ’கொரோனாவை எதிர்கொள்ளும் பேராயுதம் தடுப்பூசி’ என்ற வாசகம் இந்த பெருந்தொற்றிலிருந்து மீண்டுவரும் நம்பிக்கை ஒளியை நமக்குள் விதைத்துவருகிறது. கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து தரப்பு மக்களும் தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்கின்றனர்.

இந்நிலையில் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறையும் நிலவிவருகிறது. இந்நிலையை மாற்ற இந்தியா உலக நாடுகளின் உதவியை எதிர்பார்த்தபோது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் நமது நாட்டிற்கு உதவ முன்வந்தது. இந்தியாவிலேயே பல நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசியை தயாரிக்க முன்வந்துள்ளன. அதற்கான பலகட்ட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நம் அனைவருக்கும் தெரிந்த தற்போது பயன்பாட்டில் உள்ள கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தவிர மற்றும் பிற அதிக செயல்திறன்மிக்க, அதேசமயம் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளும் தற்போது தயாராகிவருகின்றன.

இந்த தடுப்பூசிகள் குறித்து என்.டி.டிவிக்கு அளித்தப் பேட்டியில் ஒன்றிய அரசின் கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றுள்ள இயக்குநர் டாக்டர் அரோரா விளக்கியுள்ளார்.

’’இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் பயோலாஜிகல் - இ தடுப்பூசியின் செயல்திறன் 90% இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் கொரோனாவுக்கு எதிரான போரட்டத்தில் இந்த தடுப்பூசி ஒரு திருப்புமுனையாக அமையும்’’ என்கிறார் மருத்துவர் என்.கே அரோரா.

இது என்ன புதிய தடுப்பூசி? என்ற கேள்வி பலருக்கும் எழும். காரணம் தற்போது கொரோனாவை வெல்லும் பேராயுதமாக நம் நாட்டில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்நிலையில் உலக அளவிலும், இந்தியாவிலும் பல்வேறு நிறுவனங்கள் தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசிகளை விட அதிக செயல்திறன்மிக்க தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் முனைப்புகாட்டி வருகின்றன.

அந்த வரிசையில் சமீபத்தில் நாம் அமெரிக்காவின் நோவாவாக்ஸ் என்ற தடுப்பூசியை இந்தியாவிலும் தயாரிக்கும் திட்டம் பற்றி கேள்விப்பட்டோம். ஆம். ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரிக்கும் சீரம் நிறுவனம்தான் தற்போது நோவாவாக்ஸ் தடுப்பூசியையும் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள இருக்கிறது. இந்த நோவாவாக்ஸ் தடுப்பூசி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் இந்தியாவில் நூறுகோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் தயாராக உள்ளது. அதுவும் மற்ற தடுப்பூசிகளைவிட அதிக செயல்திறனுடன், அதாவது எந்தவகை உருமாற்றமடைந்த கொரோனா வைரஸாக இருந்தாலும் அதன்மீது இந்த தடுப்பூசி 90% செயல்திறனுடன் இயங்கக்கூடிய ஆற்றல்மிக்கது. அது மிகவும் மலிவான விலையில் நமக்கு கிடைக்கப்போகிறது என்பதுதான் நோவாவாக்ஸ் தடுப்பூசி மீதான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் என்கிறார் டாக்டர் அரோரா.

இதேபோன்ற எதிர்பார்ப்பை தற்போது பயோ - இ தடுப்பூசியும் ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார் அரோரா. ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிகல் நிறுவனம் தயாரிக்கும் இந்த தடுப்பூசி ’கார்ப்வாக்ஸ்’ (Corbevax) என்ற பெயரில் வர இருக்கிறது. தற்போது மூன்றாம்கட்ட பரிசோதனையில் உள்ள இந்த பயோ - இ தடுப்பூசியும் நோவாவாக்ஸை போன்றே அனைத்து வயதினருக்கும் 90% செயல்திறன் கொண்டது. இந்த தடுப்பூசியானது அக்டோபர் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் ரூ.250க்கு கிடைக்கும் என்கிறார் டாக்டர் அரோரா.

டாக்டர் அரோரா மற்றொரு தடுப்பூசியையும் பரிந்துரைக்கிறார். அது சைடஸ் காடிலாவின் தயாரிப்பான இந்தியாவில் புனேவைச் சேர்ந்த ஜென்னோவா பயோ-பார்மாக்யூடிகில்ஸ் நிறுவனம் ஆர்.என்.ஏவை மையமாகக்கொண்டு தயாரித்துவரும் கொரோனா தடுப்பூசி. இரண்டாம்கட்ட சோதனையில் உள்ள இந்த தடுப்பூசி செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய தயாரிப்பானதால், நமது நாட்டின் வெப்பநிலைக்கேற்ற சேமிப்பு, போக்குவரத்து பரிமாற்றம் மற்றும் பயன்பாடு போன்றவற்றிற்கு ஏற்றது என்கிறார் அவர்.

இதுபோன்ற அதிக செயல்திறன்மிக்க தடுப்பூசிகள் இந்தியாவில் உருவாகி வருவதால் கொரோனா எதிரான போராட்டத்திற்கு பெரும்பாலான உலக நாடுகள் இந்தியாவைச் சார்ந்திருக்கும் நிலை உருவாகலாம் என்கிறார். மேலும் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் மற்றும் அகமதாபாத்தைச் சேர்ந்த காடில்லா பார்மா போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் கொரோனாவுக்கு எதிரான போரின் கோணத்தையே மாற்றியமைக்கும் என தனது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் டாக்டர் அரோரா.

பல உலக நாடுகள் தற்போது தடுப்பூசிக்காக இந்தியாவை நோக்கியிருக்கிறது. குறிப்பாக ஏழ்மை நாடுகளும், வருமானம் குறைந்த நாடுகளும் தடுப்பூசிக்கு வழியில்லாமல் தவித்துவருகின்றன. தற்போது ஆயுதங்களை வாங்குவது தடுப்பூசி வாங்குவதைவிட மிக சுலபமாக இருக்கிறது” என்கிறார் அரோரா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com