மன அழுத்தம் முதல் 'ப்ரஸ்ட் பம்ப்' வரை: பாலூட்டும் அம்மாக்களுக்கு மருத்துவரின் அறிவுரைகள்

மன அழுத்தம் முதல் 'ப்ரஸ்ட் பம்ப்' வரை: பாலூட்டும் அம்மாக்களுக்கு மருத்துவரின் அறிவுரைகள்
மன அழுத்தம் முதல் 'ப்ரஸ்ட் பம்ப்' வரை: பாலூட்டும் அம்மாக்களுக்கு மருத்துவரின் அறிவுரைகள்

ஒவ்வொரு வருடமும், ஆகஸ்ட் முதல் வாரம் (ஆக. 1 - ஆக 7 வரை) உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில், தாய்ப்பாலின் அவசியத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் மருத்துவத் துறையினர் வலியுறுத்துவர். அந்தவகையில் சென்னையை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் விஷ்ணு வந்தனா, தாய்ப்பாலின் நன்மைகள் குறித்தும் அதனால் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் சில அடிப்படை தகவல்களை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார்.

தாய்ப்பால் தாய்க்கும் சேய்க்கும் தரும் நன்மைகள்: பிறந்து முதல் 6 - 8 மாதங்களுக்கு பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். வேறு எந்த உணவுப்பொருளும் பிரத்யேகமாக இந்தக் காலத்தில் குழந்தைக்கு தர வேண்டாம். ஏனெனில்

* குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் இருந்து கிடைக்கும்.

* பல்வேறு வைரஸ் பாதிப்புகளுக்கு எதிரான ஆன்டிபாடி, தாய்ப்பாலில் வழியாக குழந்தைக்கு கிடைக்கும்.

குழந்தை பிறந்த முதல் ஐந்து நாட்களுக்கு தங்க நிறத்தில் சுரக்கும் பாலுக்கு கொலஸ்டரம் (Colostrum) என்று பெயர். இதனை ஆங்கிலத்தில் 'Liquid Gold' என்று கூறுவர். இதில் கிடைக்கும் ஆன்டிபாடிகள் மற்றும் நோய் எதிர்ப்பு அணுக்கள் போன்றவை பிற்காலத்தில் குழந்தையை நிமோனியா, ஆஸ்துமா போன்ற பாதிப்பிலிருந்து காக்கும். குடல் வளர்ச்சியை மேம்படுத்தும் சத்துகளும் இதில் உள்ளன; மேலும் இதில் விட்டமின்-A அதிகம் உள்ளதால் குழந்தையின் கண்பார்வை, மூக்கு, தொண்டை, செரிமானப்பகுதிகள் சீராக செயல்படவும் உதவும்.

ஃபார்முலா மூலம் தயாரித்து விற்கப்படும் பால், பசும்பால் - கழுதைப்பால் போன்றவற்றிலெல்லாம் இதுபோன்ற ஆன்டிபாடிகள் கிடைக்காது.

* பிரத்யேகமாக தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைகளுக்கு, வருங்காலத்தில் இளவயது சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்ற ஒவ்வாமை பிரச்னைகள், குடல் சார்ந்த பிரச்னைகள், ஆன்டிபாடி எதிர்ப்புத்திறன் குறைவு, சைனஸ், உடலில் சூப்பர் பக்ஸ் உற்பத்தி போன்ற பிரச்னைகள் அனைத்தும் தடுக்கப்படும்.

* தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை, தாயுடன் அதிக பிணைப்புடன் இருக்கும். குறிப்பாக ‘ப்ரஸ்ட் பம்ப்’ மூலம் சேமிக்காமல் நேரடியாக மார்புக்கு அருகே வைத்து குழந்தைக்கு பால் கொடுக்கும் அம்மாக்களுடன், குழந்தைகள் கூடுதல் பாசத்துடனும் அரவணைப்புடனும் இருப்பர்.

* கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கும் தாய்மார்கள் குழந்தைக்கு நேரடியாக தாய்ப்பால் கொடுக்கும்போது, தாயின் உடலிலிருக்கும் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள், குழந்தைகளுக்கும் கடத்தப்படும். இதனால் தடுப்பூசி ஏதும் எடுக்காமலேயே குழந்தைகளும் கொரோனாவுக்கு எதிரானவர்களாக மாறுவர்.

* தாய்ப்பால் குடிக்கும் பச்சிளம் குழந்தைகள், அசாதார நோய் பாதிப்புகளால் பிறந்து சில தினங்களிலே இறக்கும் அபாயம் தடுக்கப்படுகிறது.

* குழந்தைகளுக்கு மட்டுமன்றி, பல தாய்மார்களுக்கும் தாய்ப்பாலினால் நன்மை கிடைக்கும். அவற்றில் குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களுக்கு, மார்பகப்புற்றுநோய் தடுக்கப்படும். குழந்தைப்பிறப்புக்குப் பின் தாய்மார்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகள் சிலவும் தாய்ப்பாலினால் ஓரளவு கட்டுப்படுத்தப்படும். ஹார்மோன் பிரச்னைகளை பொறுத்தவரை, ஆரோக்கியமான வாழ்வியல்தான் அதை முழுமையாக சரிசெய்ய உதவும். குறிப்பாக நல்ல தூக்கம் - ஆரோக்கியமான, சத்தான உணவுமுறை - சரியான உடற்பயிற்சி போன்றவை, நல்ல பலன் தரும்.

அம்மாக்களும் தாய்ப்பால் சிக்கலும்: 

* தாய்ப்பால் சுரப்பை பொறுத்தவரை, மன அழுத்தம் அதிகமாகும்போது தாய்ப்பால் சுரப்பு குறையும் வாய்ப்புள்ளது. பால் கொடுக்கும் தாய்மார்கள் பலருக்கும், முறையான தூக்கம் இல்லாதிருப்பதால், தூக்கமின்மையால் மன அழுத்தம் உருவாகி அதனால் தாய்ப்பால் சுரப்பு குறைகிறது. இப்படியானவர்கள், குழந்தை வளரும் வரையில் குழந்தை தூங்கும்போதே தூங்கி - எழும்போது எழுந்து பழகுவதே தற்காலிகமான தீர்வு. குழந்தை வளர வளர, இப்பிரச்னை தன்னால் சரியாகும் என்பதால், தூக்கமின்மையால் மன உளைச்சலுக்கு உள்ளாகிவிட வேண்டாம். ஒருவேளை தூக்கமின்மையால் அன்றாட வேலைகள் பாதிக்கிறது எனும்போது, ‘லேக்டேட்டிங் கன்சல்டர்’, மனநல மருத்துவர் ஆகியோருடன் ஆலோசித்து, உரிய வழிமுறைகளை பின்பற்றி மன அழுத்தத்திலிருந்து வெளிவரவும். அதுவே உங்களுக்கும் குழந்தைக்கும் நல்லது.

* போஸ்ட்பார்டம் டிப்ரஷன் எனப்படும் ‘குழந்தை பிறப்புக்குப் பின்னான’ சிக்கல்களை கையாள்வதில் நிச்சயம் அம்மாக்களுக்கு அதிக சிக்கல் இருக்கும். இதனால் ஏற்படும் வாழ்வியல் மாற்றங்கள், தாய்ப்பால் சுரப்பிலும் எதிரொலிக்கலாம். இதை கையாள, உங்களுக்கும் குழந்தைக்கும் மனதளவில் நம்பிக்கையூட்டும் நபர்களுடன் வாழுங்கள். தனி வீட்டில், தனித்திருந்து குழந்தை வளர்ப்பதைவிடவும், பெரியவர்களின் கண்காணிப்பின்கீழ் அவர்களின் ஆலோசனையின்கீழ் குழந்தை வளர்ப்பது தாய்மார்களுக்கு மிகச்சிறந்த பலனை தரும். 

* தாய்ப்பால் கொடுக்கும்போது, குறைவாக தாய்ப்பால் சுரந்தால் மருத்துவ ஆலோசனை அவசியம். அதேபோல தாய்ப்பால் கொடுக்கும்போது ஒரு மார்பகத்தில் முழுமையாக பால் சுரந்து முடிந்த பின்னரே குழந்தையை அடுத்த மார்பகத்துக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்க வேண்டும். அப்படியில்லாமல், இதில் பாதி - அதில் பாதி என்றிருப்பது தாய்க்கும் சேய்க்கும் உகந்ததல்ல.

* ஒரு சில பாலூட்டும் தாய்மார்களுக்கு, அதிகம் பால் சுரக்கக்கூடும். உதாரணத்துக்கு குழந்தை பசியாறிய பின்னரும், பால் சுரப்பு இருக்கும். அப்படியானவர்கள் ‘ப்ரஸ்ட் பம்ப்’ மூலம் தாய்ப்பால் சேமிக்கும் வழிமுறையை அறிந்து, அதில் பாலை சேமித்து வைத்து, குழந்தைக்கு கொடுக்கவும். இப்படி செய்யாமல், பால் மார்பகத்திலேயே அப்படியே இருக்கும் நிலையை அடிக்கடி உருவாக்கினால், பால் அப்படியே கெட்டியாகி சீழ் பிடிக்கும் அபாயமுள்ளது. ஆகவே அதிகம் பால் சுரக்கும் அம்மாக்கள், ‘ப்ரஸ்ட் பம்ப்’ உபயோகப்படுத்துவது நல்லது. இப்படி உபயோகப்படுத்தும்போது, அந்தப் பாலை உங்கள் குழந்தைக்கு உபயோகப்படுத்த முடியவில்லை (குழந்தை பசியாறிவிட்டது எனும் சூழலில்), அதை தாய்ப்பால் சேமிப்பு வங்கிக்கு தானமளிக்கவும். அதன்மூலம், வேறொரு பச்சிளம் குழந்தையின் பசியை உங்களால் போக்க முடியும்! 

(மகப்பேறு மருத்துவர் விஷ்ணு வந்தனா)

* கொரோனா பாசிடிவ் என வந்திருக்கும் நிலையில், குழந்தை பிறந்தால் மருத்துவ ஆலோசனையுடன் தாய்ப்பால் கொடுக்கலாம். உண்மையில் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு கொரோனா பரவல் இருக்காது. இருந்தபோதிலும் மருத்துவ ஆலோசனையுடனே பால் கொடுக்க வேண்டும் என சொல்லக்காரணம், கொரோனா பாசிடிவ்வாக உள்ள தாய் தன் உடலோடு அணைத்து குழந்தையை கையாளும்போது அங்கு குழந்தைக்கான தொற்று அபாயம் உருவாகலாம். மருத்துவ ஆலோசனைக்கு உட்படும்போது, பால் கொடுக்க குழந்தையை கையில் வாங்கும் முன்னர் ‘எப்படி மாஸ்க் அணிய வேண்டும் - என்ன மாதிரியான மற்றும் எத்தனை மாஸ்க் அணிய வேண்டும் - கைகளை எப்படி கழுவ வேண்டும் - க்ளவுஸ், ஃபேஸ் மாஸ்க் ஏதும் அணிய வேண்டிய அவசியமுள்ளதா’ என்பது பற்றியெல்லாம் சொல்வார்கள். ஆகவே உரிய பாதுகாப்புடன் பால் கொடுக்க முடியும்.

இந்த விஷயத்தில் கொரோனா பாசிடிவ் என வரும் தாய்மார்கள், கொரோனா நெகடிவ் என்றாகும் வரையில் ப்ரஸ்ட் பம்ப் மூலம் மட்டுமே தாய்ப்பால் கொடுப்பது நல்லது. இதன்மூலம்,தொற்று அபாயமும் தடுக்கப்படும்; தாய்ப்பாலும் கொடுக்கப்படும். சில தினங்களுக்கு குழந்தையை தொடுவது மட்டுமே இருக்காது. எமோஷனலான இந்த ஒரு விஷயத்தை மட்டும், கொஞ்சம் அறிவியல்ரீதியாக யோசித்து தாய்மார்கள் கடந்துவிட்டால் தாயும் சேயும் நலமுடன் இருக்கலாம்.

தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால்...? - தாய்ப்பால் கொடுப்பதால், தாய்க்கும் சேய்க்கும் என்ன நன்மை - என்ன பிரச்னைகளெல்லாம் தடுக்கப்படும் என்பது பற்றி மேலேயுள்ள தகவலில் அறிந்திருப்பீர்கள். ஒருசில தாய்மார்களுக்கு, அவர்களின் தனிப்பட்ட உடல்நலன் காரணமாக தாய்ப்பால் சுரக்காத நிலை இருக்கும். அவர்கள் அதுபற்றி பயப்பட வேண்டாம். இருப்பினும் நீங்கள் வருங்காலத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த இடத்தில் பயத்தை விடுத்து, முன்னெச்சரிக்கை உணர்வை நீங்கள் வளர்த்துக்கொள்ளுங்கள். வருடம் ஒருமுறை, கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள். எவ்வித உடல் அசௌகரியத்தையும் உதாசினப்படுத்தாமல் இருக்கவும். உங்களால் தாய்ப்பால் கொடுக்கமுடியவில்லை என்றாலும், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் வங்கி மூலம் பெற்று பால் கொடுங்கள். எந்தச் சூழலிலும் பிறந்து 6 - 8 மாதங்களேயாகும் குழந்தைக்கு தாய்ப்பால் அன்றி வேறெந்த பாலும், உணவுப்பொருளும் கொடுக்க வேண்டாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com