"அம்மா சுட்ட அதிரசத்தை ஊறப் போட்டு வை!" - திண்டுக்கல் ஐ.லியோனி பகிரும் தீபாவளி சம்பவம்!

"அம்மா சுட்ட அதிரசத்தை ஊறப் போட்டு வை!" - திண்டுக்கல் ஐ.லியோனி பகிரும் தீபாவளி சம்பவம்!
"அம்மா சுட்ட அதிரசத்தை ஊறப் போட்டு வை!" - திண்டுக்கல் ஐ.லியோனி பகிரும் தீபாவளி சம்பவம்!

தீபாவளி... வானவேடிக்கைகள் மட்டுமின்றி, அன்பு கலந்த உணவுப் பண்டங்களின் பகிர்வுகளால் மனம் மகிழும் பண்டிகை. இதற்கு உதாரணமாக, தனது வீட்டில் நடந்த ஓர் அதிரச சம்பவத்தை நம்மிடம் ஒருமுறை பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பகிர்ந்ததை இங்கே மீண்டும் நினைவுகூர்கிறோம்.

"தமிழர்கள் திருவிழாக்களின் மிகப் பெரிய பிரியர்கள. தமிழர்களைப் போல திருவிழாக்களை கொண்டாடுபவர்கள் உலகத்தில் யாருமே இருக்க முடியாது. தமிழர்களின் கலாசாரமே கூட்டமாக இருப்பது. கூட்டமா இருக்குறது வேற, கும்பளா இருக்குறது வேற. ஊருல, பெரிய கலவரம் ஆயிருச்சுன்னா ஊரே தலைதெரிக்க ஓடிவரும். அவங்க எதுக்கு அப்படி ஓடி வர்றாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. ஆனா, என்னமோ நடக்குது வாங்கடா ஓடலாம்னு ஓரே ஒட்டமா ஒடுவாங்க அத கும்பல்னு சொல்லுவாங்க.

ஆனா, தமிழர்கள் கூட்டமா மகிழ்ச்சியா இருக்கக் கூடிய தருணங்களைதான் மிகவும் விரும்புவார்கள். அதனாலதான் தமிழர்கள் கொண்டாடக் கூடிய திருவிழாக்கள்ல பாத்தோம்னா ரெண்டு மூணு நாள் ஒரே இடத்துல கூட்டமா கூடி எந்த கவலையும் இல்லாம ஆடிப் பாடி சந்தோஷமா இருப்பாங்க.

இதுபோன்ற திருவிழாக்கள்ல நாம ரொம்ப மகிழ்ச்சியா கொண்டாடக் கூடிய மகிழ்ச்சி திருவிழா எதுன்னு பாத்தா தீபாவளி திருவிழாதான். காரணம், மகிழ்ச்சியினுடைய எல்லா அம்சங்களும் தீபாவளி பண்டிகைல இருக்கு. மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது உணவு, அதனால தீபாவளி அன்னக்கி வித விதமான உணவுப் பண்டங்களை வீடுகள்ல அவங்களே சுட்டு சாப்புடுற சொகமே தனிதான். நம்ம ஒரு மிக்சர் கடையில போயி லட்டோ, பூந்தியோ, முறுக்கோ வாங்கி திங்கிறதவிட நம்ம வீட்ல செஞ்சு சாப்புடுற மகிழ்ச்சி தீபாவளி அன்னக்கிதான் நமக்கு கெடைக்கும்.

எங்க வீடு இந்துக்கள் அதிகமா வசித்த பகுதியிலதான் இருந்துச்சு. அதனால அவங்கெல்லாம் பண்டிகை காலத்துல பலகாரம் சுட்டு சாப்பிடுவதை நம்ப பிள்ளைகள் பாத்து எமாந்துருங்க என்று எங்க அம்மாவும் ஏதாவது பலகாரம் செய்யணும்னு ஆசைபட்டு அதிரசம் செஞ்சாங்க. அதிரசம் செய்யப் போற ஆசைல பச்சரிசி வாங்கி ஊறப் போட்டு அத மாவாக்கி வெல்லமெல்லாம் கலந்து பக்கத்து வீட்டம்மா சொன்ன பக்கவத்துல அதிரச மாவ ரெடி பண்ணி வெச்சிருந்தாங்க.

எங்கம்மா தோசை இட்லியெல்லாம் நல்லா செய்வாங்க. ஆனா அதிரசம் சுடுறது இதுதான் மொத தடவ. அம்மாவும் தீபாவளி அன்னக்கி அதிரசத்தை ஆசை ஆசையா சுட ஆரம்பிச்சாங்க. அதிரச வாசம் சும்மா கும்முன்னு வந்துச்சு. எங்கப்பா, "டேய் வாங்கடா... அம்மா அதிரசம் சுட்டுட்டா, நாம போய் சாப்புடலாம்"னு அடுப்படிக்கி கூட்டிட்டு போனாரு.

அம்மா சுட்டு அடுக்கி வெச்சிருந்த அதிரசத்தை ஆசையா எடுத்து கடிச்சா கடிக்கவே முடியல. முடுஞ்ச அளவுக்கு கடிச்சு பாத்தாச்சு ஒண்ணும் ஆகல. அதிரசத்தோட நாங்க சண்ட போடுறத பாத்துக்கிட்டிருந்த எங்க அப்பா, "டேய் அருவாமனைய எடுத்துட்டுவா, அதிரசத்த நான் அறுத்து தர்றேன். எல்லோரும் சாப்புடலாம்"னு சொன்னாரு. நானும் அருவாமனைய எடுத்து வந்து கொடுத்தேன். அப்பாவும் கஷ்டப்பட்டு அதிரசத்த அறுத்து அறுத்து கொடுத்தாரு. நாங்களும் வல்லு வதக்கன்னு மெண்டும் மெலாமலும் தின்னு தீர்த்தோம்.

ஒலகத்துலேயே தீபாவளிக்கு செஞ்ச அதிரசத்தை அறுத்து சாப்பிட்ட ஓரே குடும்பம் எங்க குடும்பமாதான் இருக்கும். எங்கப்பா வெளியே போகும்போது எங்கம்மாவ கூப்பிட்டு, "ரெண்டு அதிரசத்த ஊறப் போட்டு வை... நான் போயிட்டு வந்து சாப்பிட்டுக்கிறேன்"னு சொல்லி ஜாலியா வம்பிலுத்தார். ஆனா, கல்லாட்டம் அதிரசத்த சுட்ட எங்கம்மாவ எங்க அப்பாவும் திட்டல. நாங்களும் எங்க அம்மா மேல கோபப்படல. அன்னக்கி கல்லு மாதிரி இருந்த அதிரசத்த சாப்புட்டு போட்டு சந்தோஷமா இருந்தோம் பாத்தீங்களா, அதுதான் தீபாவளி பெருநாள்.

நாங்க ஒரு கிருஸ்துவ குடும்பமா இருந்தாலும், தீபாவளி பண்டிகை அனைவரும் கொண்டாடும் ஒரு பண்டிகையாக இருந்தது. இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிருஸ்துவர்கள் அனைவருமே பட்டாசு வாங்கி வெடிப்போம். வீட்ல சுட்ட பலகாரத்தை ஒருத்தருக்கு ஒருத்தர் பரிமாரிக் கொள்வோம். கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிக்கிட்டு இருக்குற கிறிஸ்துவ குடும்பத்துல தீபாவளி மிகப் பெரிய மகிழ்ச்சியான திருநாளா எங்களுக்கு இருக்கு."

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com