க்ரைம் டைரி: வினோத குற்றங்களின் தொகுப்பு!

க்ரைம் டைரி: வினோத குற்றங்களின் தொகுப்பு!
க்ரைம் டைரி: வினோத குற்றங்களின் தொகுப்பு!

காவலர் தற்கொலை, போலீஸ் உதைத்ததில் உயிரிழந்த கர்ப்பிணி, ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை, ஊழியர்களே நகைக்கடையில் கொள்ளை என பல குற்றச்சம்பவங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

சென்னை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை:

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இரவு பணியிலிருந்த உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். நள்ளிரவு 1.45 மணியளவில் எஸ்ஐ சதீஷ் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று அவர் பேப்பரில் எழுதி வைத்திருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

கண்காணிப்பு கேமரா காட்சியைக் கொண்டு காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அயனாவரம் காவல் நிலையத்தில் இரவுப் பணியிலிருந்த காவலர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. 2011ஆம் ஆண்டு நேரடி எஸ்ஐயாக தேர்வு செய்யப்பட்ட சதீஷ் குமார், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ஆவார். அயனாவரத்தில் ரவுடிகளை ஒழிப்பதில் திறமையாக செயல்பட்டவர் என்று பாராட்டு பெற்றவர் உதவி ஆய்வாளர் சதீஷ் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் தற்கொலை செய்துகொண்டுள்ள சில நாட்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

வேலையை விட்டுப்போகிறேன் காவலரின் உருக்கமான வீடியோ:

சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்தை சேர்ந்த காவலர் ஒருவர் தான் ஏன்? பணியில் இருந்து விலகுகிறேன் என முகநூலில் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “நான் மதுரையை சேர்ந்தவர். கடந்த 10 வருடங்களாக காவலராக பணியாற்றி வருகிறேன். எனக்கு பிடித்துதான் இந்தப் பணியை செய்து வந்தேன். எனது மகனுக்கு காலில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்காக ஆய்வாளரிடம், உதவி ஆணையரிடம், துணை ஆணையரிடம் சென்று விடுப்பு கேட்டும் கோரிக்கை மறுக்கப்பட்டது. 

வேறு வழியின்றி விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு சென்றேன். 10 நாட்கள் விடுப்பாகிவிட்டது. பின்னர் பணிக்கு வந்தால், உங்களுக்கு இங்கு பணி இல்லை, என்று கூறினார்கள். பேசியும் பலனில்லை. இதனால் வேறுவழியின்றி வேலை விடும் நிலை ஏற்படுகிறது. நான் மற்ற காவலர்கள் போல் தூப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொள்ளாமால், ஊருக்கு சென்று விவசாயம் செய்யப்போகிறேன். அல்லது கடை வைத்துப் பிழைக்கப்போகிறேன்” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். 

லஞ்சம் பெற்ற தலைமை சிறைக்காவலர் கைது:

சென்னை புழல் மத்திய சிறைச்சாலையின் தலைமைக் காவலர் லஞ்சம் பெற்றதால் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். பிச்சையா என்பவர் புழல் சிறையில் தலைமைக்காவலராக பணியாற்றி‌ வருகிறார். அவர், கைதி ஒருவருக்கு சிறையில் வசதிகள் செய்து தர 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதை, அந்தக் கைதியின் உறவினர் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து தலைமைக் காவலர் பிச்சையாவை கைது செய்த லஞ்ச ஒழிப்புப்பிரிவினர் அவரிடம் இரவு முழுவதும் விசாரணை நடத்தினர். 

காதல் ஜோடியை கொன்றவருக்கு தூக்கு தண்டனை:

தேனி மாவட்டத்தை சேர்ந்த காதலர்கள் எழில் முதல்வன் மற்றும் கஸ்தூரி. இந்த காதல் ஜோடி, சுருளி மலை பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு பிணமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த இராயப்பன்பட்டி காவல்துறையினர், திவாகரன் (எ) கட்டவெள்ளை அந்த காதல் ஜோடியை பாலியல் கொடுமை செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செந்தில் குமரேசன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் நிருபீக்கப்பட்டதால் திவாகரனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். அத்துடன் ஆயுள் தண்டையும், 7 வருடன் சிறை தண்டனையும் திவாகரனுக்கு விதிக்கப்பட்டுள்ளது. அந்த நீதிமன்றத்தில் வழங்கப்படும் முதல் தூக்கு தண்டனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊதிய தொகையை பெறவந்தவர் பலி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, அமராவதி புதூரில், அமைந்துள்ளது மத்திய தொழில் பாதுகாப்பு படை மையம். இங்கு பயிற்சி பெறும் வீரர்கள் பல்வேறு அரசு சார்ந்த துறைகளுக்கு, பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவர். இந்த மையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ,ஒப்பந்த அடிப்படையில்,தேனி மாவட்டம் போடிநாயக்கன் பட்டியை சேர்ந்த, ஆனந்தன் என்பவர் தினக்கூலியாக பணியாற்றி வந்தார். ஒப்பந்த காலம் முடிந்து ஊர் சென்ற ஆனந்தன், தனது ஊதிய நிலுவை தொகையை பெறுவதற்காக பாதுகாப்பு படை மையத்திற்கு இன்று வந்த நிலையில், தீடீரென உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அவரின் உடலை கைபற்றிய காவல்துறையினர், உடல் கூறு ஆய்விற்காக,காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணத்தில் உறவினர் போல் திருடுபவர்:

திருமண நிகழ்ச்சிகளில் உறவி‌னர்கள் போல் கலந்துகொண்டு திருடுபவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரது ‌புகை‌ப்படத்தை‌ புதுச்சேரி மாநி‌ல காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். சுப நிகழ்வுகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை குறிவைத்து நகைகளை திருடிச் செல்வதாக‌ குற்றச்சாட்டு எழுந்துவந்த நிலையி‌ல் இந்த புகைப்படம் வெளி‌யிடப்பட்டுள்ளது. மே‌‌லும் அந்த நபர் கலந்துகொண்ட திருமண‌ நிகழ்‌வின் வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டுள்‌ளது. ‌புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு போன்றவை புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் தமிழக கா‌வல் துறையினருக்கும் அனுப்‌பப்பட்டுள்ளன. குற்றவாளியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் டிரைவரின் உயிர் பறிப்பு:

புதுச்சேரியில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்து விட்டு தப்பியோடிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைத்திக்குப்பம் பகுதியைச் சேர்நத மாறன் என்பவர், சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வருகிறார்.

அவரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சூழ்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல் கண்காணிப்பாளர் வெங்கடசாமி, காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டதுடன் கொலையாளிகள் குறித்து துப்பு துலக்கி வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த மாறனின் உறவினர்கள் கொலையாளிகளை தப்பவிட்டு விட்டதாக காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மீன்பிடிக்கச் சென்று உயிரை விட்ட சிறுவர்கள்:

சேலம் அருகே பொழுதுபோக்கிற்காக மீன்பிடிக்கச் சென்ற 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் அல்லிக்குட்டை பகுதியில் மீன்பிடித்துள்ளனர்.

அப்போது, ஆழமான பகுதியில் சிக்கிய தேவா, சச்சின் ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். அக்கம்பக்கத்தினர் சிறுவர்களை மீட்க முயன்றனர். அதற்குள் இருவரும் உயிரிழந்தனர்.

கள்ளத்துப்பாக்கி வழக்கு: கைதானவர் தந்தை தற்கொலை!

சென்னையில் கள்ளத்துப்பாக்கி வழக்கில் கைதானவரின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஜனவரி மாதம் சென்னைக்கு வந்த ரயிலில் கள்ளத்துப்பாக்கி மற்றும் கள்ள நோட்டுகளுடன் பிரதீப், கமல் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் பிரதீப்பின் தந்தை ஜெயபாண்டியன், மாதவரத்தில் உள்ள அவரது வீட்டின் பின்பக்க கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

தலைக்கவசம் அணிந்து நகைகள் கொள்ளை:

கர்நாடகாவில், தலைக்கவசம் அணிந்த மூன்று பேர் நகைக்கடைக்குள் புகுந்து நகைகளைக் கொள்ளையடித்த காட்சி வெளியாகியுள்ளது. ராமநகரா என்ற‌ இடத்தில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடைக்குள் அதிரடியாக புகுந்த அந்த மூன்று பேரும் அரிவாளைக் காட்டி ‌ஊழியர்களை மிரட்டிப் பணிய வைத்து நகைக‌ளை அள்ளுகின்றனர். கொள்ளையைத் தடுக்க முயலும் ‌பணியாளர் ஒருவரை மீண்டும் மீண்டும் அரிவாளைக் காண்பித்து விரட்டுகின்றனர். இந்தக் காட்சி அந்த நகைக்கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

கத்தி முனையில் நகை, பணம் கொள்ளை:

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே 20 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கத்தி முனையில் கொள்ளையர்கள்
பறித்துச்சென்றுள்ளனர். கும்பகோணத்தைச் சேர்ந்த ரமேஷ், ஓட்டுநருடன் இன்று அதிகாலை 3 மணியளவில் ஈச்சங்குடியில் காரில் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அடையாளம் தெரியாத 3 பேர், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை கழுத்தில் வைத்து மிரட்டி, நகை,பணம், ஏடிஎம் அட்டை மற்றும் செல்போன்களை பறித்துள்ளனர். மேலும் அவரது எடிஎம் கார்டை பறித்து, ரமேஷின் கண் எதிரிலேயே வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

ஊழியர்களே நகைக்கடையில் கொள்ளை:

கோவை ந‌கைக் கடை கொள்ளை தொடர்பாக கடையில் பணியாற்றிய ஊழியர்‌ உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்.எஸ்‌ புரத்திலுள்ள நகைக் கடையில் கடந்த மாதம் 751 கிராம் தங்கம் மற்றும் 70 கேரட் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தனிப்படை அமைத்து நடத்தப்பட்ட விசாரணையில் அதே கடையில் வேலை பார்த்து வந்த பாஸ்கரன் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அ‌‌வர்களை கைது செய்த காவல்து‌‌றையினர், 55 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர்.

காவலர் உதைத்த உயிரிழந்த கர்ப்பிணி:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ரவுண்டானா அருகே காவல் ஆய்வாளர் கமராஜ் தலைமையில், ஹெல்மெட் அணியாதவரை பிடிக்கும் சோதனையில் இன்று இரவு 7 மணியளவில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா மற்றும் உஷா என்ற தம்பதியினர் ஹெல்மெட் அணியாமல் வந்ததாக சொல்லப்படுகிறது. அவர்கள் ஹெல்மெட் இல்லாமல் செல்வதைக் கண்ட காவல் ஆய்வாளர் காமராஜ், அவருடைய இருசக்கர வாகனத்தில் விரட்டியுள்ளார். அந்த தம்பதியை நெருங்கிய அவர், தனது காலால், தம்பதியினர் சென்ற இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறி விழுந்த தம்பதியினரில், மனைவி உஷா தலையில் பின்னால் வந்த ஆம்னி வேன் ஏறியதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த 3 மாத கர்ப்பிணி உஷா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் ராஜா பலத்த
காயமடைந்தார். இதையடுத்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அந்த காவல் ஆய்வாளர் குடிபோதையில் இருந்தைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடும் ஆத்திரமடைந்த மக்கள் போலீஸாரிடம் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட, சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் ஷோபா வந்துள்ளார். அவரிடம் அந்த காவல் ஆய்வாளரை கைது செய்யுங்கள், அவர் மது குடித்துள்ளார் எனவே உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை கேட்ட வட்டாட்சியர், ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் கொந்தளிக்கின்றனர். பின்னர் போலீஸ் வாகனங்கள் மீது கல்வீசியுள்ளனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த மக்கள், நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சாலை மறியலில் 3000 ஆயிரம் பேர் பங்கெற்றுள்ளனர். இந்நிலையில் வாகனத்தை எட்டி உதைத்த காவல் ஆய்வாளர் கைது செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com